30 மே 2009

பேசும் மௌனங்கள்

எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கின்றன
உன் மௌனங்கள்

எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கிறேன்
உன் மௌனங்களோடு

எப்போதாவது
பேசிக்கொள்ளும்
நம் மௌனங்கள்
நம் இருவரையும்
புறம் தள்ளி.

0

நர்சரி வார்த்தைகள்

இன்னொரு புறம்
படுத்திருந்த
இரண்டாவது மகனை
தட்டிக் கொடுத்தபடி
இருந்தவன் காதுகளில்
இன்னமும்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
தட்டாதே நானே
தூங்குறேன் என்ற
மூத்த மகனின்
நர்சரி வார்த்தைகள்.

o

26 மே 2009

முரண்...

கண்களில் குளிர் கண்ணாடி
தலையில் தொப்பியோடு
பொசுக்கும் வெயிலில்
போய்க்கொண்டிருக்கிறான்
விரலிடுக்கில் புகையும்
சிகரெட் ஒன்றோடு.

o

பேருண்மை...

இன்னொரு சொகுசான
இடத்தில் சந்திப்பதை
இயல்பாய் மறைத்து
இப்போதெல்லாம் நண்பர்கள்
கூடுவதே இல்லை
என்றேன் அந்த
பழைய தேனீர்க் கடைக்காரரிடம்.
கடைசியாய் அவர்
கடையில் வைத்து
பேசிய விஷயம்
பேருண்மையைப் பற்றி
என்று ஞாபகம்.

0

25 மே 2009

முகமூடிக் கவிதைகள்...!

சூழல்கள் வேண்டும்
முகங்களை
சுலபமாய் தரிக்கும்

இவனைப்போல்தானே
இருக்கும்
இவன் கவிதைகளும்.

o

ஆக்ரமிப்பு...

புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி
பொருட்படுத்துவதில்லை நீங்கள்.

புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி
புரிவதுமில்லை உங்களுக்கு.

கேட்காத காதுகளில் கேள்வியின்றி
திணித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

கண்கள் உங்களை கவனிக்கிறதாவென்று கூட
கவனிப்பதில்லை நீங்கள்.

மற்றொரு காதால் வெளியேற்றப்பட்டாலும்
மறுபடி மறுபடி வந்து ஏற்றிச் செல்கிறீர்கள்.

திறந்தபடி இந்த காதுகள் இருப்பது
திரிந்தலையும் உங்களுக்கு தோதாகவா?


o

அஞ்சல் அட்டை...

நாளேடு தொடர்கதைக்கு
அனுப்பிய ஒன்று.

நேயர் விருப்பத்திற்கு
(வானொலியில் பெயர்!)
அனுப்பிய அத்தனை
ஆசைகள்.

நேர்முகத்தேர்வுத் தகவல்கள்
நிறையவே கொண்டு வந்தவை.

திரைப்படக் கலைஞர்களிடம்
புகைப்படம் கேட்டு
எழுதியவை.

படித்ததும் கிழிக்கப்பட்ட
உத்திரகிரியைப் பத்திரிக்கைகள்.

இப்படி
எதையெதையோ
ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது
அலுவலகக் கடித அலமாரியில்
அமைதியாய் வீற்றிருந்த - அந்த
மஞ்சள் நிற அஞ்சல் அட்டை.

O

21 மே 2009

என்றாலும்...

படிக்கவென்று
சில பிடித்த
புத்தகங்கள்

நெடுந்துயில்
கொள்ளவொரு
நீள் பொழுது

காணும்
நிகழ்வொன்றை
கவி புனைய
விழையும் மனம்

என்றாலும்
இனிப்பதில்லை
எந்தவொரு
விமானப் பயணமும்

இடையிடையே
முகம் காட்டும்
இந்த மெலிதான
மரண பயத்தில்.

o

03 மே 2009

இன்னொரு கரை...

அக்கா கொடுக்கச் சொன்னதாய்
தம்பி கொடுத்துப் போன
புத்தகத்தின் அட்டைப் பகுதியில்
வைக்கப்பட்டிருந்தது
எட்டாவது படிக்கும் பெண்
ஹெட்மாஸ்டருக்கு
எழுதிய காதல் கடிதம்.
ஆறேழு வருடங்களுக்குப் பின்
அவர்கள் இருவரையும்
அவரவர் துணைகளோடு
வைத்துப் பார்க்க நேர்ந்தது
வேறு வேறு ஊர்களில்.

காதலியின் பெயரைக்
இடதுகை மணிக்கட்டில்
தீக்கம்பி கொண்டு
திரும்பத் திரும்ப எழுதி
தீவிரமாய் காதலித்தவன்
திருச்சி பக்கம் எங்கேயோ
டிக்கெட் கிழிக்கும் பணிசெய்ய
புதுக்கருக்கு மாறாத
பொன்மஞ்சள் தாலியுடன்
இன்னொருவன் மனைவியாக
பெண்ணவளைப் பார்க்க நேர்ந்தது
பேருந்துப் பயணமொன்றில்.

மாதொருத்தியின்
மனசைத் தெரிந்து கொள்ள
மாத்திரைகள் உட்கொண்டு
மரணத்தோடு போராடி
உருத்தெரியாமல் இளைத்து
உலவிக் கொண்டிருந்தவன்
அனைவரும் வியக்கும்படி
ஆகிப் பெருகி வந்தது
அயல் தேசமொன்றில்.

நாலைந்து வருடங்கள்
நங்கை ஒருத்தியின் பால்
ஒருதலை காதல் கொண்டு
ஒருவாறு சலித்து தெளிந்து
மற்றொரு பெண்ணோடு
மணவாழ்க்கை மேற்கொள்ளும்
நண்பன் இருப்ப தந்த
நங்கையின் எதிர் வீடொன்றில்.

இன்னொரு கரை என்பதுண்டு
எல்லா ஓடங்களுக்கும்..

o

(யூத்புல் விகடன் - ஏப்ரல்)
(தமிழ் முரசு, சிங்கப்பூர் : 12-04-2009)

விரும்பாதவை...

ஆண்கள்
அபிநயிப்பது

அரிதாய்
எப்போதாவது

அனேக நேரம்
பெண்களால்

அபிநயித்துக்
காட்டப்படும

புறப்படுவதற்கு
முந்தைய

விமானப் பாதுகாப்பு
முறைகளை

எப்போதும் பார்ப்பதில்லை
இவனும்.

இன்றைக்குப் பார்க்க
நேர்ந்ததில்

எதிர்வந்து
விழுந்த

தண்ணீரில் விழ
நேர்ந்தால்

அணிய வேண்டிய
ஆடை

மூச்சுப்
பிரச்னைக்கு

மூக்கைச் சுற்றி
அணியும் மாஸ்க்

என

உபயோகிக்க
விரும்பாதவையும்

உண்டுதானே
உலகத்தில்.

o

(திண்ணை : 01-05-2009)