28 டிசம்பர் 2010

புத்தகக் கண்காட்சியில் நான்

புத்தகங்களின் வாசனையோடு, தெரிந்த தெரியாத முகங்களின் மத்தியில்,
அந்தத் திடலுக்குள் அலைந்து திரியும் பொழுதுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.
சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு (அலுவலக நிமித்தமான சென்னை பயணம் காரணமாக)
ஏறத்தாழ எட்டு வருடங்களுக்குப் பிறகு, வந்து போன பொழுதுகள் இன்னமும் என்னுள்,
இந்த வருடமும் ஏதாவது அதுபோல் என்று ஏங்கும் மனதோடு.

கடல் கடந்து வாழும் ஒருவன் எதிர்கொள்ள நேரும் பேரிழப்புகளில் ஒன்றென்று இதைச் சொல்வேன்.

அகரம் மற்றும் அகநாழிகை பதிப்பக ஸ்டால்களின் வழியாக, என் கவிதைத் தொகுதிகள் மூன்று, என் இருப்பை (யாராவது ஒருவருக்கு) சொல்லும் வண்ணம், போய்ச் சேருமென்கிற திருப்தி ஒன்றே இப்போதைக்கு.

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜனவரி 4 முதல் 17ம் தேதி வரை நடைபெறும் 34-வது சென்னை புத்தகக் கண்காட்சியில்
என் கவிதைத் தொகுதிகள் கிடைக்குமிடங்கள்:

அகரம் (அன்னம்), அரங்கு எண்.93 & 94

1) அந்தரங்கம் (பக்.112 ரூ.60/-)
2) இன்னபிறவும் (பக்.80 ரூ.60/-)

நிவேதிதா புத்தகப் பூங்கா அரங்கில், அகநாழிகை பதிப்பக வெளியீடு அரங்கு எண்.274

1)ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (பக்.64 ரூ.50/-)

O

அன்புக்கவி

அபிமான எழுத்தாளரின்
பேச்சைக் கேட்க
அங்கில்லாமல் போனதால்
எப்படி இருந்தது
என்றறிய
இரண்டு மூன்று பேரை
அழைத்துப் பேசுகையில்

அப்படியே அவரின்
வழக்கமான பேச்சு
என்றார்கள்.
அதுவாகவே கண்ணீர்
ஐந்தாறு முறை
துளிர்த்ததென்றார்கள்.
அன்பைப் பற்றிதான்
இருந்திருக்கும்
அத்தனையும்.

o
(கல்யாண்ஜி அவர்களுக்கு)

25 டிசம்பர் 2010

படித்ததில் பிடித்தது - இசை

சகலமும்

சகலமும் களைந்து சரிய
அழுதழுதடங்கியவன்
தன்னருகே வந்து
குழைந்த நாய்க்குட்டியை
மெல்லமெல்லத் தடவிக் கொடுத்தான்
அது அவன்
உடலாகவும் இருந்தது

O

பூனை

பூனை ஒரு விலங்கு
அதற்குத் தெரிந்திருக்கிறது
ப்ரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக்கொள்வதென
ஸ்பரிசிக்கும் போது
நகங்களை எவ்வாறு மழுங்கிக்கொள்வதென

O

உறுமீன்களற்ற நதி தொகுப்பு/இசை/காலச்சுவடு வெளியீடு

21 டிசம்பர் 2010

நவீன கவிதை செல்லும் திசை - கலாப்ரியா - படித்ததில் பிடித்தது

http://kalapria.blogspot.com/2010/12/delhi.html

நவீன கவிதை அல்லது இன்றைய கவிதை என்னும்போது, நவீன கவிதையின் அரை நூற்றாண்டுக்கும் மேலான பின்புலத்தைத் தொட்டுச் செல்வது நல்லது என்று நினைக்கிறேன். எழுத ஆர்வமுறுகிற எவரும் முதலில் கவிதையைத் தேர்வு செய்கிறார்கள் என்பது ஒரு எழுதப்படாத விதியாய் இருக்கிறது.நான் பல உரைநடை,சிறுகதை, நாவல் எழுதும் பிரபலமானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ நான் முதலில் எழுதியது, கவிதை”, என்று. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். என்றாலும் அவை எல்லாமும் ஒரே அடித்தளத்தில் சமைந்த பலமாடிக் கட்டிடமாகவோ, ஒரு மரத்தின் பல வேறு கிளைகளும், அதன் இலைகளும், பூக்களும் கனிகளுமாகவே இருக்கின்றன.ஒரு இலக்கிய வாசகனுக்கு அவனது தாய்மொழியில் அமைந்த கவிதைகளே மிகப் பெரிய சொத்து எனலாம்.அதிலும் தமிழ் போல, நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு செம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவனுக்கு இது மாபெரும் வரம். தினசரி வாழ்வில் கூட நாம் சாதாரணமாய், ஒரு நல்ல உரைநடை வரியைப் படிக்க நேரிட்டால், பொதுப்புத்தி சார்ந்து பலரும், ’ஆகா இது கவிதை” என்று சொல்வதை நாம் கேட்கிறோம்.அந்த அளவுக்கு கவிதை ஆதியானதும் ஒரு உன்னதம் மிக்கதுமாக இருக்கிறது.காலையில் பரபரப்புடன் இயங்கும் ஹாஸ்டல அல்லது மேன்ஷனின் பாத்ரூம்கள், நடுப்பகலில் அமைதியுடன் இருப்பது போல, இயக்கமின்றி, வெற்று அரட்டையை நாடி நிற்கும், சோர்ந்து இருக்கும் மூளையில் திடீரெனத் தோன்றுகிறது,


”உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னாருடைத்து”.....

என்று ஒரு குறள்.அந்த ’உருள்பெருந்தேர்’ என்ற அற்புதமான சொல்க்கட்டு நினவில் ஒரு பெரிய தேரை உருட்டுகிறது. வலிய தேர்ச்சக்கரப் பதிவாய், மனம் திரும்பத் திரும்ப அந்த வார்த்தையைச் சொல்லிச் சொல்லி அதிசயிக்கிறது.இது கவிதைக்கே சாத்தியம். மரபுக்கவிதை என்றில்லை,நவீன கவிதையிலும் “விரிகிறதென் யோனி” என்ற சொல்ச்சாட்டை சோர்ந்த மூளையைச் சொடுக்கும்போதும் இது சாத்தியமாகிறது. இதையே “நினைவின் விருந்தாளியாக ஒரு கவிதை பிரவேசிக்கும் போது நமது உலகமே மாறிப் போகிறது” என்ற ஆங்கில மேற்கோள் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் மொழியின் பரிணாமத்தைப் பார்க்கும் போது, “கவிதை என்பது சிறந்த வார்த்தைகளின் சிறந்த வரிசை” (POETRY IS BEST WORDS IN BEST ORDER) என்கிற ஒரு விளக்கத்தின் படி, சொல்லாடலின்படி - இதை ஒரு கவிதைக்கான வரையறையாகக் கொள்ள முடியாது, கவிதையை அப்படி எந்த ஒரு வரையறைக்குள்ளும் அடக்க முடியாது-பார்த்தோமானால் கவிதைக்கு முந்தியே பல வெளிப்பாட்டு முறைமைகள் இருந்திருக்க வேண்டும். நாட்டுப்புறப் பாடல்கள், பாணர் பாடல்கள் எல்லாம் இவற்றிற்கு உதாரணம். இந்த இடத்தில் ஒரு தகவலைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.இன்றைக்கு முப்பத்தியிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்களை ஃப்ரான்ஸின் ஒரு குகையில் கண்டு பிடித்துள்ளார்கள். குகை ஓவியங்களின் முதல்க் கண்டுபிடிப்பு இது என்கிறார்கள். அவை சுண்ணாம்புக்காரையின் மீது தீட்டப்பட்டுள்ளன. அவற்றில், பெண்ணின் பிறப்புறுப்பும், மிருகங்களும் உள்ளன என்பது மனோஆராய்ச்சியாளருக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும், மொழி வல்லுனர்களுக்கும் கூடுதல் சுவாரஸ்யம் தரக் கூடியவை. இதைப் பார்க்கையில் முதன் முதலில் சித்திர எழுத்துக்களாலான ஒரு வகை வெளிப்பாட்டு உத்தியே மானுட சிந்தனையின் ஆதி வித்து என்று உணர முடிகிறது. தவிரவும் உடல் - அதன் வலி, தாகம், பசி, பயம், சுகம் ஆகிய புலனுணர்வுகள் – சார்ந்தே சிந்தனை ஆற்றல் வேர் விட்டிருக்கிறது.. அரவிந்தாஸ்மரத்து அன்னை சொல்கிறார். ”உடலைப் பொறுத்து அதன் உழைக்கும் திறனே அறிவு” என்று. இது ஆதி மானுட நிலை பற்றிய பரிணாமத் தேடலின் விளைவு என எண்ண வைக்கிறது. இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆதி மனிதனின் உடலுக்கு நேர்ந்த பல அனுபவங்களே அவனைச் சிந்தனையின்பால் செலுத்தியிருக்க வேண்டும்.இதில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவிற்கு, அவர்களது நிலவியல் அமைப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள், ஏதோ ஒரு வெளிப்பாட்டு உத்தியினால், தங்களுக்கிடையே பகிர்ந்து, தொகுத்து,ஏதோ ஒரு கருத்துக்கு வந்திருக்கலாம். இந்த அனுபவப் பகிர்தல் நிகழ்வினை சிந்தனை, மூளை என்ற அலகுகளால் பின்னர் குறிப்பிட்டிருக்கலாம்.

நவீன கவிஞர் திரு க. மோகனரங்கன் இதனையே “மனித மனத்தின் இயக்கமானது சிந்தனை, உணர்ச்சி என்ற இருவேறு எல்லைகளுக்கு நடுவே பல நிலைகளில் நிகழ்கிறது.இதில் சிந்தனை என்பது பொதுவாக நேரிடும் அனுபவங்களைத் தொகுத்து ஆய்ந்தறியும் அறிவு ஒருமுகப்படுத்தும் எண்ணங்கள் அதன் வழி உருவாகும் திட்டவட்டமான கருத்துக்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.இதன் குறியீடாக ‘மூளை’உருவகப் படுத்தப் படுகிறது.மாறாக உணர்வுகள் என்பது நினவுகள் மொழி, இனம் நம்பிக்கைகள்,அதன் காரணமான நெகிழ்ச்சி மற்றும் புலன் மெய்ப்பாடுகள் சார்ந்து ஒரு வசதி கருதி ’இதயம்’ என்பதுடன் அடையாளப்படுத்தப் படுகிறது..”, என்று தீர்க்கமாகச் சொல்லுகிறார்.

சிந்தனையும் உணர்ச்சியும் என்கிற ’இருமை’(BINARY) ஒன்றுக்கொன்று எதிரானதாகத் தோன்றினாலும், சிந்தனை என்பது தர்க்க பலத்தைக் கொண்ட தத்துவம் சார்ந்து இயங்குகிறது, என்றாலும், உண்மையில் உணர்வின் சாரமில்லாமல் தத்துவம் சாத்தியமில்லை.கவிதை தர்க்க ஒழுங்கை மீறி உணர்வின் பிரவாகமாவே எப்போதும் இருக்கிறது.ஏனெனில் சிந்தனை நிலைப்படுத்துகிற தத்துவமும்,அது நிர்ணயிக்கிற சமூக ஒழுங்கும் காலந்தோறும் சிதைந்து மாறுகிற தன்மையுடையது.இங்குதான் கவிதை கால தேச வர்த்தமானங்கள் தாண்டி நிலைக்கிறது. சமூகச் சிதைவுகளை காட்டி, தத்துவங்களை எள்ளி நகையாடுகிறது.

இயற்கை நிகழ்வுகளும், வாழ்வியல் சித்திரங்களும், அவற்றைக் காட்சிப் படுத்துதல் வழியே அபூர்வமான படிமங்களாக, கவிதையில் இடம்பிடிப்பது, நமது தமிழ்க் கவிதையில் சங்ககாலம் தொட்டு தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.ஆனால் இந்நிகழ்வுசார் படிமங்கள் காலத்திற்கேற்றாற் போல,நவீன கவிதையில் அர்த்த மாறுதல்களை அடைகின்றன..சமூக நிகழ்வுகளுக்கு திட்டவட்டமான வரையறை கிடையாது என்பதால் கோட்பாடுகளையும் சட்டகங்களையும் மீறி புது வியாபகம் கொள்கின்றன.

அகநானூற்றில் ஒரு கவிதை கயமனார் எழுதியது. அதில் ஒரு வரி, ”வேர்முழுது உலறி நின்ற புழற்கால்

தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்..” என்று தொடங்கும்..’முற்றிலும் காய்ந்த மரத்தில் சிள் வண்டுகள், தேரின் மணிகள் போல ஒலிக்கின்றன..’.என்ற அர்த்தத்தில்.இந்தக் கவிதை முழுவதுமாக அகச்சுவை கொண்டது. ஆனால் இன்றைய ஒரு கவிதை, சங்கர ராம சுப்ரமணியன் என்ற கவிஞர் எழுதியது......

”மலையும் மலை மேல் ஒளிரும்
பசுந்தளிரும்
இன்று புதிது.
அந்த மரத்தைக் குடையத்
தொடங்கியுள்ள
வண்டின் ரீங்காரம் போல்
என் சந்தோஷம்
புராதனம் மிக்கது.”

முன்னதில் ஒரு சோகம் நேரிடையாய் இழையோடுகிறது. மேற்சொன்ன இன்றைய கவிதையின் தொனி நமக்கு விவரிக்கும் அனுபவம் வித்தியாசமானது. கவிமனம் பசுந்தளிர் பார்த்து சந்தோஷம் கொள்கிறது. ஆனால் அதே வேளை வண்டுக் குடைச்சலால் மரம் அனுபவிக்கும் துயரையும் அது உணர்கிறது. அதனாலேயே கவிஞன் வண்டின் ரீங்கார இசையைப் புராதானமான ஒன்றாய்க் காண்கிறான். இது ஒரு தொடரும் முரணாகப் படுகிறது அவனுக்கு. நவீன கவிதை பல்வேறு வித வாசிப்புக்கு இடம் தருவதை நாம் அறிய முடிகிறது

அதே போல இதன் அடுத்த வரியில்

“வற்றல் மரத்த பொன்தலை ஓந்தி

வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள.”- என்று வரும். காய்ந்த அந்த வற்றல் மரத்தில் பொன் நிற ஓந்தி வெப்பம் தாங்காமல் உச்சிக்கு ஏறுகிறது.இப்படியெல்லாம் அற்புதமான காட்சிகள் நம் சங்கக் கவிதையெங்கும் விரவிக் கிடக்கின்றன.இந்தக் காட்சியை வாசிக்கையில் இன்னொரு நவீன கவிதையின் சில வரிகள் நினைவுக்கு வருகிறது.

”தவறுதலாய்
புகைக் கூண்டு வழியே
வீட்டிற்குள் வந்துவிட்ட
ஓணானுக்கு
என்ன நிறம்
மாற்றிக் கொள்வது என்று
தெரியவில்லை.”

வீட்டிற்குள் பலவகையான வண்ணத் துணிகள், படங்கள். காணாததற்கு வண்ணத் தொலைக் காட்சி எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது (இது இலவச தொலைக்காட்சிக்கு முந்தியகாலக் கவிதை).இப்போது ஓணானின் நிலை திண்டாட்டம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்கள் என்று நினக்கிறேன்.இவை எனது கவிதை வரிகள்.

நவீன கவிதையின் பின்புலம் பெரும்பாலும் நடுத்தரவர்க்க மனோபாவத்திலிருந்து உருவானது.’கசடதபற’ என்ற அற்புதமான பத்திரிக்கையும் வானம்பாடியும் ஒரே காலகட்டத்தில் வெளியானது.’கசடதபற’, ‘எழுத்து’, ’நடை’ போன்ற பத்திரிக்கைகளின் தொடர்ச்சி என்றாலும், அதில் வெளித்தெரிந்த கவிஞர்கள், தமிழில் ஒரு புதிய திறப்பை உண்டு பண்ணினார்கள்.ஞானக்கூத்தன், பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு, வா.மூர்த்தி, கல்யாண்ஜி, கலாப்ரியா, தேவதச்சன், ஆனந்த், ஆத்மாநாம், என்று பலர். எல்லோரும் ஏதாவது பணியில் இருந்த அல்லது பணி தேடிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்க இளைஞர்கள்.(அதற்கு முந்திய தலைமுறையை பிரதிநிதித்துவப் படுத்தும், க.நா.சு, பிச்சமுர்த்தி, கு.ப.ரா . போன்றோர்,முழுநேர இலக்கியவாதிகள், அவர்களது சோதனை முயற்சிகள் பெரும்பாலும் மேலை நாட்டுத் தாக்கத்துடன்.இருந்தது.) இந்த இளைஞர்கள் தங்கள் முன்னோடிகளைப் போல் கவிதையின் உள்ளடக்கத்திற்காக எந்த வகையிலும் மேலைத் தாக்கத்தை சார்ந்திருக்கவில்லை. ஒரு வகையான தமிழ்ப்படுத்துதல் (TAMILISATION) இவர்கள் கவிதைகளின் உள்ளடக்கத்தில் காணப்பட்டது தமிழ்நிலம், தமிழ் வாழ்வு விரிவாகவே பேசப்பட்டது. நகுலன், பசுவய்யா, பிரமிள், ஞானக்கூத்தன் போன்றோர் முந்திய தலைமுறையின் நீட்சியாக இளைய தலைமுறையினருடன் கூடவே வந்தவர்கள். ஞானக்கூத்தனின் சர்ரியலிஸக் கவிதைகளின் பாதிப்பு 70-களின் கவிஞர்களிடம். வெகுவாகவே இருந்தது.

ஆங்கில வார்த்தைகளை சரளமாக உபயோகித்து எழுதப்பட்ட கவிதைகளைப் பார்க்கையில் (அதை எழுதியவர்களேயும், மற்றவர்களும்) எவ்வளவு தூரம் இன்று அதை விடுத்து வந்திருக்கிறர்கள் என்று பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது

உதாரணமாக (எஸ்.கே.)ஆத்மாநாமின் ஒரு கவிதை-1972-ல் கசடதபற இதழில் வெளிவந்தது.

“வாழ்க்கைக் கிணற்றின்
மோக நீரில்
மோதுகின்ற
‘பக்கெட்டு’ நான்
பாசக்கயிற்றால்
சுருக்கிட்டு
இழுக்கின்ற
தூதன் யார்?

தமிழின் முக்கியக் கவியாகப் பரிணமித்த ஆத்மாநாமின் ஆரம்பகாலக் கவிதைகள் போல 70-களில் நிறையவே வந்தன.ஆத்மாநாம் போலவே பலரும், பின்னாளில் மிகச் சிறந்த கவிதைகளைத் தந்தார்கள். கவிஞர்.சுகுமாரன் குறிப்பிடுவது போல்70-களுக்கு முன் எழுதியவர்கள், பெரும்பாலும் திருமணமானவர்கள்.அவர்களுடைய கவிதைகளில் ”காதலி என்றால் மனைவிதான்” என்ற நிலை இருந்தது. காதல் மட்டுமென்றில்லை. பல்வேறு உளக்கிடக்கைகளை பகிரங்கப் படுத்த தயக்கம் காட்டினார்களோ என்று தோன்றுகிறது. இந்தத் தயக்கம் எல்லாம் உடைபட்டது 70களில். ஞானக்கூத்தன் தொடங்கி கலாப்ரியா ஈறாக பலர் இதன் காரணகர்த்தாக்களாக இருந்தனர். ”மத்தியவர்க்க அகஜீவிகளின் அந்தரங்க டைரியாக மட்டும் கவிதை தேங்கிய நிலையில், அவ்வறைக்குள் ததும்பி நுரைத்தபடி கலாப்ரியா கவிதைகளினூடாக நிதரிசனத்தின் சாக்கடை உள்ளே நுழைந்தது.....” என்கிற ஜெயமோகனின் அவதானிப்பு இதை விளக்கக்கூடும்.எங்கள் தலைமுறையில் மனத்தடையின்றி காதலைச் சொன்னோம் என்றால், அடுத்த தலைமுறை காமத்தைச் சொல்லுவதில் தயக்கம் காண்பிக்கவில்லை என்கிற சுகுமாரனின் பதிவும் உண்மையே.

வானம்பாடி தன்னை ஒரு இயக்கமாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டது.விலையில்லாக்கவி மடலாக வெளிவந்த ”மானுடம் பாடும் வானம்பாடி” தனது தனித்த தடத்தை தமிழில் பதித்தது.திராவிட அழகியலின் சாரத்துடன் மார்க்ஸீய கண்ணோட்டத்துடன் அதன் கவிதைப் போக்கு அமைந்திருந்தது. இயக்க ரீதியிலான தொனியில் அதன் கவிதைகள் இருந்தாலும் புவியரசு, , சிற்பி, கங்கை, தமிழ்நாடன், ஞானி போன்றோரின் கவிதைகளில் ஒரு தனித்தன்மை இருந்தது.தமிழ்நாடனின் ‘அம்மா அம்மா’ தொகுப்பு ஒரு கலைக்களஞ்சியமாக இருந்தது.அதே போல் புவியரசின் ’மீறல்’, சிற்பியின் ’ஒளிப்பறவை’ ஆகியன பரவலான வரவேற்பைப் பெற்றன.அப்துல் ரகுமானின் பால் வீதி குறிப்பிடத்தகுந்த ஒரு தொகுப்பு வானம்பாடியில் வெளியான பல மொழிபெயர்ப்புக் கவிதைகள் எனக்கு உத்வேகம் தந்தவை பல உண்டு. ஒரு கவிதை சட்டென்று நினைவுக்கு வருகிறது.ஆதித்ய பிரதாப்சிங் என்ற இந்திக் கவிஞர் எழுதியது.

வியட்நாம்

“அக்கம் பக்கம்
வசந்தமில்லை-ஒரு
கபாலத்தின் மீது
வண்ணாத்திப் பூச்சி”

இவை எதிலும் சாராமல் ஆழ் மன அதிசயங்களில் முத்துக்குளித்து அதன் சிக்கலான ரகசியங்களை அருமையாகக் கவிதையில் சொன்னவர் அபி. இவர் அதிகமும் உணரப்படாமல்ப் போனது தமிழின் துரதிர்ஷ்டமே.மோகனரங்கன் சொல்வது போல். “ஓசைகளின் குழப்பத்திலிருந்து மௌனத்தின் தெளிவிற்கு உள்ளிறங்கிச் செல்லும் இவருடைய சொற்கள் அதன் அடங்கிய தொனி காரணமாகவே அதிகம் வெளித்தெரியாமல் தங்கிப் போயின” என்பதில் ஓரளவு உண்மையிருக்கிறது.

70-களின் கவிதை கவிஞர்கள் பற்றிப் பேசும்போது, நாம் ஏற்கெனவே சொன்னோம், இவர்களது நடுத்தர வர்க்க மனோபாவம் பற்றி. அதன் ஒரு கூறாக ஒரு விஷயத்தைக் காணலாம். இவர்கள், தங்கள் கவிதைகளின் சாரத்தை மேற்கிலிருந்து பெறுவதில் இருந்த முனைப்பு நமது செவ்வியல்க் கவிதைகளின்பால் இல்லை என்பதே அது.ஆனாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, அதாவது இன்றைய தேதியில் நவீனத் தமிழ்க் கவிதைகளை மீள் வாசிப்புச் செய்யும் போது, நம்முடையை செவ்வியல்க் கவிதைகளின் மறைமுகமான தாக்கத்தை பலருடைய கவிதைகளில் உணர முடிகிறது.தேவதச்சன்,தேவதேவன், கலாப்ரியா என்று மூத்த தலைமுறையும் சரி,மனுஷ்யபுத்திரன், ரவி சுப்ரமணியன், கனிமொழி, ஃப்ரான்சிஸ்கிருபா என்று அடுத்த தலைமுறையும் சரி... அவர்களது கவிதைகளில் சங்கக் கவிதைகளோ அதற்குச் சற்றே பிந்திய கவிதைகளோ அவற்றின் உள்ளார்ந்த பாதிப்பு, ஒரு அந்தர நதியாக ஊடோடியிருப்பதைக் காண முடிகிறது.உதாரணமாக மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்று.


சொற்களைத் தின்னும் பூதம்

வெற்றுக் காகிதங்களை
உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்
தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்
ஒரு நாள் கண்ணீர் மல்கக்கேட்டாள்

வெற்றுக் காகிதங்களை
படித்துக் கொண்டிருக்கும் மனிதனை
ஒரு நாள்
தின்று வர முடியுமா
உன்னால்.

இது முழுக்க முழுக்க ஒரு நவீன கவிதை. ஆனால், ஒரு விதமான வாசிப்பில் பூதம் –சதுக்க பூதமாகவும், கண்ணீர் மல்கும் பெண் கண்ணகியாகவும் (மாதவியுமாகவும்) உருக்கொள்வது தவிர்க்க முடியாத செவ்வியல் தாக்கமாவே தோன்றுகிறது.

இதேபோல்

“சிலிர்க்கச் சிலிர்க்க
அலையை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத்துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்கு தருகிறது

இக்கடல்”

பிரான்சிஸ் கிருபாவின் கவிதை இது.தன்னளவிலேயே இது அற்புதமான கவிதை. ஆனாலும்

”கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.”

என்கிற குறள் நினைவில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை.இரண்டின் இயங்குதளமும் சற்றே ஒன்று என்றாலும் இன்றையக் கவிதை ”வலி உணரும் மனிதனி”ன் கவிதை. மேற்குறிப்பிட்ட மனுஷ்யபுத்திரன் கவிதையில் தலைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.கவிதைகளுக்கு தலைப்பு என்பது மேலை நாட்டுத் தாக்கம்.ஆனால் தமிழில் அது கவிதைகளுக்கு கூடுதல் பரிமாணத்தையும், இருண்மையைப் போக்குகிற/விளக்குகிற விதமாயும் இருந்தது.அது இன்னமும் தொடர்கிறது.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”-

இது வள்ளுவரின், இரண்டு அற்புதமான அவதானிப்புகளை ஒன்றிணைத்துச் செய்யப்பட்ட, கவிதை. இதன் வாசிப்பனுபவம் தரும் மனநிலையோடு ரவி சுப்ரமணியனின் ஒரு அழகான கவிதையைப் பார்ப்போம்.

காரல் கமறும் வேளை

“அவனும் நண்பன்தான்
இந்த இடத்திற்கு
இப்போது வருவான்`என
எதிர்பார்க்கவில்லை
என்னை விரும்பியவளை
பிறகு விரும்பியவன்

திரையரங்க இடைவேளையில்
பக்கத்துப் பக்கத்து தடுப்பில்
சிறுநீர் கழிக்கும் வேளையில்
முகமன் கூறும் சங்கடம் போல்
வணக்கம் சொல்லிக் கொண்டோம்..

இந்த விஸ்கி
இப்போது
மேலும் கசக்க ஆரம்பித்துவிட்டது.”

சமகால சராசரி வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை, அதன் சாதாரணத் தன்மையில் பொதிந்திருக்கிற குரூர அல்லது மூக்கைப் பொத்திக் கொள்ளவைக்கிற ஒரு காரியத்தைக் கூட இன்றைய கவிஞன் அழகியல் நிறைந்த கவிதையாக்குகிறான். இது நமக்கு நம் செவ்வியல் கவிகள் தந்த வரத்தினால் விளைந்தது. இதன் மூலம் நாம் கடந்து வந்திருக்கிற தமிழ்க்கவிதையின் பரப்பும் திசையும் இப்போதும் எப்போதும் மிக ஆரோக்கியமானது என்று தோன்றுகிறது.

”ஒரு நல்ல கவிதை புரிவதற்கு முன்பே தன்னை உணர்த்திவிடும்” இது எஸ்ராபவுண்ட் சொன்னது.புரியாமையும் இருண்மையும் நவீன தமிழ்க் கவிதைக்கெதிராக வைக்கப் படுகிற ஒரு குற்றச்சாட்டு. இதைக் குற்றச்சாட்டாகக் கொள்ள் முடியாது.நவீன கவிதை சொல்லியதை விட சொல்லாததன் மூலமே அதிகம் உணர்த்துகிறது. இதற்கும் தமிழில் முன் மாதிரிகள் இல்லாமல் இல்லை. ஒட்டணி என்று சொல்லக்கூடிய பிறிதுமொழிதலணி இலக்கணத்தின் பாற்பட்டு பல கவிதைகளை நாம் புரிந்து கொள்கிறோம். இதற்கு உரையசிரியர்கள் பலவகைகளில் உதவியிருந்தாலும், அவ்வுரைகள் முற்றான முடிவுகளில்லை என்பதை உணர்த்துவதே நவீன கவிதையின் இருண்மைக் கூறுகளில் ஒன்று.ஒரு கவிதை காலம் கடந்து நிற்கவேண்டுமெனில் அதன் உள்ளடக்கம், அது பாடப்பெற்ற காலத்தின் நிகழ்வுகளைத் தாண்டி இன்றைய வாழ்நிலைகளுக்கும், இன்றைய சமூக நிகழ்வுகளுக்கும் பொருந்தி வரவேண்டும்.

“இழைதாக முள்மரம் கொல்க கழையுநர்

கைக்கொள்ளுகம் காழ்த்த இடத்து” - என்ற குறளுக்கு உரையாசிரியர்கள் தருவது, எதிரிகளை அரசன் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பது போல் அமைந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலில், எல்லோருமே இந்நாட்டு மன்னர்களாகி விட்ட சூழலில், இன்றைக்கு அது சொல்லும் செய்தி என்னவாயிருக்கும். இன்று அது பொருள் இழந்த கவிதையா..இல்லை.. முள்மரம் என்ற படிமத்தை கவலை அல்லது பயம் என்று கொள்வோமானால் அது இன்றைக்கும் பொருத்தமான கவிதையாக்வே இருக்கிறது.இப்படிக் ”கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும்” சுவாரஸ்யததைத் தருவதே கவிதை.

தேவதச்சன் எனது காலத்தின் முக்கியமான கவிஞர்.அவருடைய கவிதைகள் தத்துவார்த்தப் பிண்ணனி கொண்டவை. எனினும் மிக எளிமையான சொற்கள் கொண்டவை.

”குளத்துப் பாம்பினது
ஆழத்தில்
தாமரைகள் தலைகீழாய் முளைத்திருக்கின்றன.
மத்-
தியான வெயிலின் தித்திப்பு.
படிக்கட்டில்
ஓரிரு அரசிலைகள்.
இன்னும் ஆழத்தில்
சாவகாசமாய் ஒரு
விண் பருந்து”

இந்தக் கவிதையின் வரிகளில் எந்தப் புதிய சொல்லும் இல்லை. ஆனால் கவிதை அற்புதமான ’சொற்சேர்க்கை’ கொண்டு விளங்குகிறது..

ஒரு பாம்பு குளத்தினாழத்தில் இருக்கிறது.கவிதை முழுமையும் அதன் பார்வையிலேயே சொல்லப் பட்டிருக்கிறது.அதைப் பொறுத்து, தாமரை தலைகீழாய்த் தெரிகிறது...மத்தியான வெயிலின் கடுமை ஆழக்குளிர்ச்சியில் தெரியவில்லை.அது விண்பருந்திடமிருந்து தப்பித்திருக்கிறது அல்லது அது பற்றி அதன் ஆழத்தில் அதற்கு பயமில்லை.சாவகாசமாய் இருக்கிறது.வானில் உயரே பறக்கும் பருந்துக்கு, பாம்பு தரையை விட அதிக ஆழத்தில் இருக்கிறது.” நீ இன்னும் உயரத்திற்குப் போ, அப்போது மகத்தான ஆழங்களை அறிவாய்” என்கிற தத்துவார்த்தச் சொல்லாடலைச் சொல்லாமல் சொல்லுகிறது கவிதை. இதை நீங்கள் இன்னும் கூட அற்புதமாக உங்கள் பார்வையில் உணர முடியும்.

80-களின் மத்தியில் அறியப்பட்ட ஒரு முக்கியமான கவிக்குரல் . சுகுமாரனுடையது. அவருடைய பன்மொழி வாசிப்பனுபவம் அவரை ஒரு சிறந்த இலக்கியவாதியாக நிறுவியிருக்கிறது. இறுக்கமான சொற்கள், கச்சிதமான வரிகள்,அதே சமயம், வெற்று அழகியலைத் தூக்கிப் பிடிக்காத உள்ளடக்கம் என்று எனக்குப் பிடித்த கவிஞர்களில் முதலிடத்தைப் பிடிப்பவர். அவரது அருமையான கவிதை-

ஸ்தனதாயினி

இனிய வெண்கலப் பழங்கள்
உன் மர்ர்பகங்கள்
உள்ளே
உயிர் தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால் மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடதுமுலை அருந்துகையில்
என் கண்களில்
குழந்தைமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை
பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்
காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்த மனவேளையில்
மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை..

90-களில் தமிழ்க்கவிதை மகத்தான உயரங்களுக்குப் போயிருக்கிறது.அதனால் ஆழமும் அதிகமாய் இருக்கிறது.இந்தக் காலக் கட்டத்தில், எழுதவந்த கவிஞர்கள் பரந்துபட்ட வாழ்க்கை நிலையிலிருந்து கிளம்பியவர்கள், பார்ப்பன வெள்ளாள ஆதிக்கம் மிகுந்திருந்த கவிதையின் சாதிய அடையாளங்களைத் தகர்த்தார்கள். ஃப்ராய்டிய தத்துவம்,சில ஆதித்தடைகள் பற்றி நன்கு விளக்குகிறது.(TOTEM AND TABOO). ஆதிகாலத்தில் எல்லாப் பெண்களும் தனக்கே வேண்டுமென்று எண்ணுகிற தந்தை, வயது வந்த தன் மகன்களை விரட்டி விடுகிறார், அவர்கள் ஒன்று சேர்ந்து தந்தையைக் கொன்று சாப்பிட்டு விட்டு, அந்தக் குற்ற உணர்வோடு, அண்ணன் தங்கை என்ற தடைகளை ஏற்படுத்துகிறார்கள். உடலுக்காவே தன்னை ‘நிறுவ’ ஆரம்பித்து பெண்ணை அடிமை கொண்டிருந்த ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பல பெண்ணியக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது.பல விலக்கங்களை (டேபூஸ்) பெண்கள் அதன் ஆதித்தன்மையிலிருந்து உணர்ந்து அதை தோலுரித்துக் காட்டுகிறார்கள், தங்கள் கவிதைகளில்.

பெண் என்ற பால் அடையாளத்தால் தான் அடைந்த துயரங்களை தமிழ்க்கவிப்பரப்பில் முதலில் அழுத்தமாகச் சொன்னவர். சுகந்தி சுப்ரமணியன். அதன் பின்னர் உமாமகேஸ்வரி சிறந்த கவிதைகளை எழுதியுள்ளார்.உதாரணமாக

“தொட்டி மண்ணிற்குள்
இட்டவிதையின் மௌனம்
கூடவருகிறது என்னோடு.
சமையலறையின் வெம்மையில்
குளீயலறையின் அவசர நிர்வாணத்தில்
படுக்கையறையின் புழுக்க மோகத்தில்
அலைகிறது அதன் அமைதி
என்னுடன்
தன் வீர்யத்தால்
என் பசுமை தழைக்கட்டுமென்று”

மென்மையான மொழிகளில் கவிதை சொன்ன இன்னொரு பெண்குரல், கனிமொழியினுடையது.

”எமக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
உமது கதைகளில்
யாம் இல்லை
எனக்கென்று சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்
எனக்கென்று கண்களோ
செவிகளோ, கால்களோ
இல்லை
அவ்வப்போது நீ இரவலாய்.
தருவதைத் தவிர.”

குட்டி ரேவதி, சல்மா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி ஆகியோர் தனித்துவமும் தீவிரமும் கூடிய குரலில் சாதனை படைத்து வரும் கவிஞர்கள்.. “பெண்ணையும் பெண்ணுடலையும் அனைத்தையும் பிறப்பித்து ஊட்டி வளர்க்கும் இயற்கையின் உயிர்சக்தியோடு இணையாகவைத்துக் காணுபவராக..” மாலதி விளங்குகிறார்., என்கிறார் மோகனரங்கன்.இதை இவருடைய ‘நீலி’ தொகுப்பு நன்கு விளக்கும். இவர்கள் தவிர பெண் கவிஞர் என்று தனித்துப் பார்ப்பதை அவ்வளவு விரும்பாத ஆனால் அதே சமயத்தில் பெண்ணீயக் கருத்தாக்கங்களுக்கு ஆதரவாளர்களாக விளங்கும், பல கவிஞர்கள், லதாராமகிருஷ்ணன் (ரிஷி)இளம்பிறை, மு.சத்யா, செ.பிருந்தா, தேன்மொழிதாஸ், தமிழச்சி தங்கபாண்டியன், சக்திஜோதி, லாவண்யா, எனப் பெரிய காத்திரமான பட்டியல் உள்ளது.

80 களின் பிற்பகுதியில் தங்கள் ‘கிரணங்கள் கவிதைகள் மூலம் கண்டெடுக்கப்பட்டு 90 களிலும், இன்றளவும் எழுதி வருகிற மிக முக்கியமான கவிஞர்களாக பிரேம் ரமேஷைச் சொல்லவேண்டும்.இருவரும் பலதளங்களில் இயங்குபவர்கள்,பின் நவீனத்துவம் பற்றிய அதிக பட்ச புரிதல்களுடன் இயங்கிவருபவர்கள்..இன்றைய உலகமயமாக்கல் என்கிற சந்தைப் பொருளாதாரம் - உலகையே தங்கள் உற்பத்திப் பொருட்களுக்காக சந்தையாக்குதல்- நுகர் பொருள் வேட்கையை உருவாக்கி வளர்த்தெடுக்க பல அரசியல், கலாச்சார அழகியல் அமைப்புகளை, வளர்ந்த நாடுகள் உருவாக்கி அலைய விட்டிருக்கின்றன. இதன் மூலம், பல்வேறு பட்ட இனக்குழு அடையாளங்களை அழித்து அவர்களின் நிலம், உற்பத்தி,சுயச்சார்பு எல்லாவற்றையும் பிடுங்கி ஒரே மையத்தில், ஒரு முற்றொருமை அடையாளத்தோடு, அவ்வினக்குழுக்களை நிறுத்த முனைகிறார்கள். இதற்கு வளரும் நாடுகளின் அரசியல்வாதிகள் துணை போகிறார்கள்., அவர்கள் செய்வது என்னவென்று தெரிந்தோ தெரியாமலோ.பின் நவீனத்துவம் இம் மையங்களை அழிப்பதில் முனைப்புக் காட்டுகிறது.இந்த அரசியல் கலாச்சார சதிகளை உடைக்க முற்படுவதே பின் நவீனத்துவம்.அவர்களின் அற்புதமான கவிதை ஒன்று-

“கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு
முடிவற்று நீளும் மதில் மீது
நேர்த்தியாக நடந்து செல்கிறது
பூனை என்ற ஒரு சொல்
ஆம் ஒரு சொல்
அதைக் கொஞ்சம் பின் தொடர்ந்தால்
அது ஒரு வாக்கியமாவதையும்
வாக்கியத்தின் நீண்ட அசைவில்
கண்ணாடிச் சில்லொன்று பொத்து விட்டால்
மதிலின் பக்கவாட்டில் வழியும் குருதி
கவிதையாவதையும் வாசிக்கலாம்

அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று
நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.

ரமேஷ் பிரேமின் இன்னொரு கவிதை,

இமயவரம்பன்

பனையோலையில் நீ எழுதிய
காதல் கடிதம் தனது
மெய்யெழுத்துக்களின் மீது புள்ளிகொண்டு
அச்சேறுகிறது செவ்விய கவிதையாய்

யோனிப் பிளவை
சரிசமமாக அரிந்த ஆப்பிளின்
உட்பகுதிக்கு உவமை கூறியிருந்தாய்

சங்கம் மருவிய காதலனே
உன் காலத்தில்
காஷ்மீரத்து ஆப்பிள்
தமிழ் மண்ணில் கிடைத்ததா

சங்கம் மருவிய காலமும், மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கும் முறை ஏற்பட்ட காலமும், காஷ்மீர் ஆப்பிளும் ஒன்றுக்கொன்று முயங்கி நிற்கின்றன.ஆனால் கவிதை முழுமையாக இருக்கிறது.கொஞ்சமான புரிதலுடன் சொன்னால், காலத்தின் மையம் அழிக்கப்ப்ட்டு நிற்கிறது இந்தக் கவிதையில்.

தாயகத்தமிழ்க் கவிதைகளின் பரந்துபட்ட தன்மை, இறுக்கம், சிக்கலான படிமம், இவையெல்லாம் அதிகம் பாதிப்பேற்படுத்தாமல்,பெரிதும் ”சென்றொழிந்த காலத்து மீட்டல்களிலிருந்து விலகிச் செல்ல முடியாத துயரைச் சொல்லுகிற விதமாய் அமைந்துள்ள ஈழக்கவிதைகள், மனதை தைத்து நம் கையாலாகாத்தனத்தை பகடி செய்கின்றன.சேரன், வ. ஐ.ச ஜெயபாலன், கருணாகரன், திருமாவளவன், சிவரமணி, தமிழ்நதி என்று நீளும், இந்தப் பட்டியல். சிவரமணியின் வித்தியாசமான கவிதைகள் முக்கியமானவை.

90 களுக்குப் பின் வந்த கவிஞர்கள் ஏராளம்.இது தவிர்த்து இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் ஏராளம் அதிலும் நல்ல கவிதைகள் கிடைக்கின்றன.

90 களுக்குப் பின்னான முக்கியமான கவிஞர் பாலை நிலவனின் கவிதை ஒன்றைப் பார்க்கலாம்

சாட்சியம்

இந்த நிலா ஒளியைத்தான்
நான் யாசித்தது.
ஒரு பழத்தைப் பிழிவது போல்
பிழிந்து அத்ன் சாற்றை
இப்படிஎன் கையில் ஊற்றுங்கள்.
ஒரு மிடறு குடித்தபின் பாருங்கள்.
சகதியும் அகோரமுமான நான்
ஒளித்துண்டாய் விழுவேன்
என் மீது நீங்கள் சுமத்தும்
குற்றங்களுக்கெதிராய்.....
அதுவரைக்கும் இப்படித்தான்.
ஒரு கொடியைப் போன்று காற்றில் அசைந்து கொண்டிருக்கும்
உங்களால் கழற்ற முடியாத
என் வன்மம்.

எதற்கு இந்த வன்மம். ஏன் கவிஞன் அந்நியப்பட்டு நிற்கிறான். நவீன வாழ்வின் பதற்றம் இளைஞர்களை சமூக அரசியல் நிகழ்வுகளில் ஒன்ற விடாமல் செய்திருக்கிறது.. இந்த வகையான அந்நியமாதல் இளைஞர்களின் வாழ்க்கையில் காலந்தோறும் நிகழ்வதுதான்.ஆனால் நவகாலனீய ஆதிக்கத்தின் நிழலில் அவர்களால் நிம்மதியாய் உறங்க முடிய்வில்லை. இது அகவயச் சிக்கல் என்ற போதும் புறக்காரணிகளின் தாக்குதலே அச்சிக்கலுக்கு காரணம்.அவர்களுக்கு நேரிடும் வலி கூட்டுணர்வின் வலி. ஆனால் ஒவ்வொருவரின் மொழியும் தனியாக ஒலிக்கிறது.முந்திய காலகட்டங்களில் தனித்தனி தீவுகளாக அந்நியப்பட்ட இளைஞர்களைக் காண நேரிட்டது .இப்போது ஒவ்வொருவரும் ஒரு தீவாக இருப்பதாகக் கொள்ளலாம்.

பாலை நிலவனின் வார்த்தைகளில் சொல்வதானால், ”முற்றிலுமாகச் சிதைந்து விட்ட நவீன வாழ்வில், அதன் மீது ஓயாத எதிர்வினை புரிந்து கொண்டிருக்கும் துயர் மிகுந்த வேலையே கவிஞனுக்குச் சாசுவதமாகி விட்டது.தார்மீகமான நம்பிக்கைகள் அழிந்துவிட்ட பெருநகரத்தில் வீடும் அது சார்ந்த அறங்களும் நழுவி விட்டன.கலைஞன் வீட்டைத் துறக்க எத்தனிக்கும் போதெல்லாம் வீடு ஒரு பூனை போல அவன் காலைச் சுற்றுகிறது..தப்பிக்கும் வழியற்றவன் கவிஞன்.ஒரு பூனை போல தன் வீட்டை அவன் சுமந்தாக வேண்டும்.சமூகம் வனவிலங்காகிவிட்ட பின்பு அதில் வாழ்பவனும் வனவிலங்காகி விடுகிறான்.சமூகம் பார்வையற்றது. கலைஞனோ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.”

ரசனை வாசகனாக ஒரு கவிதையை பின் தொடர்பவருக்கு இந்தக்காலக் கவிதைகள் பேரதிர்ச்சியைத் தருவதில் வியப்பில்லை ’மொழியின் பெருங்குகையினுள்’நுழைந்து விட்டவனாகவே இன்றையக்கவிஞன் இருக்கிறான். இதற்கு முந்தைய காலகட்டங்களில் ‘அனுபவங்களின் கொந்தளிப்பா’க மொழி கவிதையில் செயல்பட்டது. இன்று அது புதிர்மொழியாகச் செயல் படுகிறது. வாழ்வை புதிர் வழிப்பாதைகளால் கடக்க நேரிடுவதால் இது நேரிட்டிருக்கலாம்.

இன்றைய கவிஞர்களில் முக்கியமானவர்களாக யூமா வாசுகி,கரிகாலன், யவனிகா ஸ்ரீராம், சங்கரராம சுப்ரமணியன், லக்ஷ்மி மணிவண்ணன், கடற்கரய், முகுந்த் நாகராஜன்,வா.மணிகண்டன் என்று பலபேரைச் சொல்லலாம்.பட்டியல் முழுமையானதில்லை

நவீனகவிதை வரலாற்றில், ஒடுக்கப்பட்டவர்களின் ஓங்கிய குரல் ஒலிக்க ஆரம்பித்தது 90-களில்தான்.பெண்ணியக்குரல் போலவே தலித்தியம் தன் முழ் வீர்யத்துடன் தடம் பதித்தது.மராத்திய, கன்னட தலித் எழுச்சியைத் தொடர்ந்து தமிழிலும் தலித் எழுத்துக்கள் தோன்றின. இது அம்பேத்கார் நூற்றாண்டை சரியானபடி கொண்டாடும் விதமாக அமைந்ததைக் குறிப்பிட வேண்டும்.தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்படவர்களின் ‘தலைமுறைக்கோபம்’ ஒரு புதிய அழகியலுடன் வெளிப்பட்டது.அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன், மதிவண்ணன், கண்மணிகுணசேகரன், ஆதவன்தீக்ஷண்யா, ரவிக்குமார்,என்.டி.ராஜ்குமார்.... என பல படைப்பாளிகள் தோன்றினர்.விளிம்புநிலை மனிதர்கள் பற்றி, நான்,பழமலய் போன்றவர்கள் எழுதியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட புதியவர்களின் இரவல் அனுபவமற்ற கவிப்பரப்பு வேர்வையும் ரத்தமும் சதையும் கொண்டது.ஆனாலும் தலித்திய நாவல்கள், சிறுகதைகள் ஏற்படுத்திய உச்சபட்ச தாக்கத்தை தலித்திய கவிதைகள் உண்டாக்கவில்லை என்ற ஆதங்கத்தினையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இன்றைய கவிதையின் திசை என்று எடுத்துக் கொள்ளும்போது இன்று முனைப்புடன் இயங்குகிற பழைய புதிய தலைமுறைக் கவிஞர்களின் கவிதைகள் அனைத்தையும் சொல்லவேண்டும். அந்த வகையில் இந்தக் கட்டுரை அமைந்திருப்பதாகவே எண்ணுகிறேன்.இந்த கட்டுரைக்கு பல கவிஞர்களின் நூல்கள் குறிப்பாக, க.மோகன ரங்கனின் ’சொல், பொருள், மௌனம்’ நூல், சுகுமாரன், கரிகாலன், பாலைநிலவன், பிரேம் ரமேஷ் ஆகியோரின் கட்டுரைகள் உதவியாயிருந்தன, அவர்களுக்கு என் நன்றி.

Posted by kalapria

20 டிசம்பர் 2010

'கல்கி' யில் ஆறாவது கவிதை

இந்த வார கல்கி (26-12-2010) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)




(நன்றி: கல்கி)

15 டிசம்பர் 2010

அம்மாவின் கேள்வி

எப்படி சாத்தியம்?
இத்தோடு எத்தனை?
என்ன தேவையோ?
இன்னபிற கேள்விகள்
அறுபத்து நான்கு வயதுப் பெண்
குழந்தை பெற்ற தகவல்
வந்து சேர்ந்த பொழுதில்.
அம்மாவின் கேள்வியோ
ஆனது சுகப் பிரசவமா
சிசேரியனா?

o

06 டிசம்பர் 2010

இன்னுமொரு முறை



இந்தக் கவிதை வரிகள்
உங்களுக்கானதாய் இல்லாமல் இருக்கலாம்.

அடுத்த வாரத்திலேயே
அதன் கோரப் பிடிகளுக்குள்
அகப்பட்டுக் கொண்டாலும்
அந்த ஏழு நாட்களில்
அங்கங்கு எதிர்ப்பட்ட
அத்தனை விதமான வாசனைகளையும்
அதன்பொருட்டு கொண்ட
கைவிரல்களின் ஆட்டத்தையும்
வெற்றி கொண்ட பொழுதுகள்
வெறும் வெற்றுச் சாதனை என்று
சொல்பவர் நீங்களென்றால்

இந்தக் கவிதையின் முதல் இரண்டு வரிகளை
இன்னுமொரு முறை படியுங்கள்.

o

செல்வராஜ் ஜெகதீசன் - கவிதைகளின் நேரடித்தன்மை - வா.மணிகண்டன்

கவிதை என்ற பெயரில் கவிதைகள் இல்லாதவையும் முன்வைக்கப்படுகின்றன என்று விமர்சிக்கும் போது எதிர்கொள்ளும் முக்கியமான எதிர்வினை “கவிதை என்ற பெயரில் கவிதைகள் இல்லாதவை முன்வைக்கப்படுவதைப் போலவே பிற இலக்கிய வடிவங்களிலும்(சிறுகதை,புதினம்) அவற்றிற்கு சம்பந்தமில்லாத வடிவங்களில் குப்பைகள் நிறைவது நிகழ்கின்றது” என்பது. இந்தக் கூற்றை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். என்றாலும் பிற இலக்கிய வடிவங்களைப் பற்றி பேசுவதற்கான திறனும் பயிற்சியும் இல்லாததால் அவற்றைப் பற்றி நான் விவாதிப்பதில்லை. அதே சமயம், கவிதையின் மீதான பிரியத்தினால் கவிதைகளில் நிரம்பும் குப்பைகளைப் பற்றி பேசாமல் இருப்பதில்லை.

கவிதைகளைக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகும் போது நவீனத்துவம், பின் நவீனத்துவம், யதார்த்தவாதம், மாய யதார்த்தவாதம் என்றெல்லாம் வகைப்படுத்தி விடமுடியும். ஆனால் ரசனையின் அடிப்படையில் கவிதைக்கு துல்லியமான வரைகோடுகளை வரைவது அசாத்தியமானது. ரசனை,கவிஞனையும் வாசகனையும் கவிதையியல் கோட்பாடுகளைத் தாண்டி - கவிதையில் அவர்கள் பெறும் அனுபவத்தின் ரீதியாக இணைக்கிறது.எனவே கவிஞனுக்கும், கவிதையின் வாசகனுக்கும் கோட்பாடுகள் பற்றிய எந்த அக்கறையும் தேவையில்லை என நான் உறுதியாக நம்புகிறேன்.

கோட்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு எழுதப்படும் கவிதை பத்தாம் வகுப்பு மாணவன் வானவியல் கேள்விகளுக்கு பதில் எழுதுவதைப் போல அனுபவ வறட்சியோடு அமைந்துவிடலாம். அதேபோல கோட்பாடுகளின் அடிப்படையில் கவிதையை நெருங்கும் வாசகன் கவிதையில் இருக்கும் கவித்துவத்தை இழந்துவிடலாம். இதனை அழுத்தமாகச் சொல்வதற்காகத்தான், இவர்கள் கவிதையியல் கோட்பாடுகள் பற்றி வருத்திக் கொள்ளத் தேவையில்லை என்கிறேன். ஆனால் கவிதையியலில் கோட்பாடுகளே அவசியம் இல்லை என்பதல்ல எனது நிலைப்பாடு.

கவிஞன் ‘விதிகள் அல்லது கோட்பாடுகள்’ பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி தனது கவிதையை எழுதி விடுகிறான். வாசகனால் கவிதை வாசிக்கப்படும் கணத்தில் கவிஞன் அக்கவிதையிலிருந்து வெளியேறிவிடுகிறான். கவிதைக்கும் வாசகனுக்குமான பிணைப்பு கவிஞன் கவிதையிலிருந்து வெளியேறும் இந்தப் புள்ளியில்தான் உருவாகிறது. கவிஞன் வெளியேறிய பின்பு, கவிதையை வகைமைப்படுத்துதலை கோட்பாட்டாளர்கள் செய்வார்கள். இந்த வகைமைப்படுத்துவதில் கவிஞனுக்கோ, ரசனை அடிப்படையிலான கவிதை வாசகனுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. அதே சமயம், கவிதை தனது அடுத்த தளத்தை நோக்கி நகர்வதற்கான விவாதத்தை தொடங்க கோட்பாடுகள் உதவுகின்றன என நம்புகிறேன். இதுவே கவிதை வாசகனாக கோட்பாடுகள் பற்றி நான் கொண்டிருக்கும் மதிப்பீடு.

கவிதையியல் கோட்பாடுகள் பற்றிய அக்கறை கவிஞனுக்கு தேவையில்லை என்று சொல்லும் போது கவிதையின் வடிவம் பற்றிய வினா எழுகிறது. கவிஞனுக்கு கோட்பாடுகளைப் பற்றிய கவனம் தேவையில்லையென்றாலும், கவிதையின் வடிவம் பற்றிய சிந்தனை அவசியமாகப் படுகிறது. இந்த வடிவம் என்பது ஹைக்கூ, லிமெரிக் போன்று ‘வரையறுக்கப்பட்ட’ வடிவம் இல்லை- சொற்களையும், வரிகளையும் தகுந்த இடங்களில் பயன்படுத்தி கவிதையின் வடிவத்தை மாற்றியமைத்தல்.

கவிஞன் தனது வாழ்வியல் அனுபவத்தை கவிதையில் அடர்த்தியாக தர முயற்சிக்கிறான். அனுபவத்தை அதீத அடர்த்தியாக்குவதற்கு கவிதையின் வடிவத்தில் மேற்கொள்ளப்படும் சில மாறுதல்கள் உதவக் கூடும். வார்த்தைகளை நீக்குதல், மாற்றியமைத்தல், வரிகளை மடக்குதல் போன்ற யுக்திகளை கவிஞன் தனது கவிதையைச் செறிவாக்கும் பொருட்டே செய்கிறான். பயிற்சியுடைய கவிஞன் ஒருவனால் கவிதைக்குள்ளாக சில சொற்களை மாற்றியமைத்து கவிதை தரும் மொத்த அனுபவத்தையும் திசை திருப்ப முடியும்.

கவிதையின் வடிவம் பற்றி பேசுவதற்கு செல்வராஜ் ஜெகதீசனின் இந்த ஒரு கவிதை உதவக் கூடும்.

சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.

‘சிற்சில துரோகங்கள்’ என ஒரே வரியில் இருப்பதற்கும் ‘சிற்சில/துரோகங்கள்’ என்பதற்கும் இருக்கும் வேறுபாடு நுட்பமானது. ஒரு வரியிலிருந்து இன்னொரு வரிக்கு வரும் போது கிடைக்கும் இடைவெளியில் உள்ள வெறுமை அல்லது மெளனம் அந்தக் காட்சியை அழுத்தமாக்குகிறது. இந்த மெளனத்தை வெற்றிடம் என்றும் பொருட்படுத்தலாம்.

‘சிரிப்போடு விலகிய காதல்’ என்பதைவிடவும் ‘சிரிப்போடு விலகிய ஒரு காதல்’ என்பது வேறு பொருளைத் தருகிறது. அனைத்துக் காதல்களும் சிரிப்போடு விலகுவதில்லை. இந்த ஒரு காதல் மட்டும்தான் சிரிப்போடு விலகியது என்பதை ‘ஒரு’ என்ற சொல் சுட்டுகிறது.

‘எதுவும் அதுவாய்/கடந்து போனதில்லை’ - நம் வாழ்வில் எதிர்கொள்ளும் இயல்பான நிகழ்வுகளுக்கு முரணான வரி இது.

நேரம், மகிழ்ச்சி, தோல்வி,அழுகை என்ற எல்லாமும் அதுவாகவே நம்மை கடந்து போகின்றன என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த வரி சற்று யோசிக்க வைக்கிறது. சில நிகழ்வுகள் நம்மை விட்டு விலகுவதேயில்லை. ‘எதுவும் சில காலம்’ என்று தத்துவார்த்தமாகச் சொல்லி நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது நிதர்சனம் இல்லை. நம்மைச் சுற்றிலும் ஞாபகங்கள் கூடு கட்டிக் கொண்டே இருக்கின்றன. நவீன உலகத்தின் வேகமான இயங்குதலில் சிலவற்றை அவ்வப்போது நினைக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் மின்னல் வெட்டுவதைப் போல சில ஞாபகத் துணுக்குகள் நெஞ்சைக் குத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

சில துரோகங்களை மிகுந்த பிரையாசைப்பட்டே மறக்கிறோம் அல்லது மறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறோம். ஜெகதீசனுக்கு கதை சொல்லும் பாட்டியின் மரணத்தை மறக்க முடியவில்லை என்றால் இன்னொருவருக்கு முதன் முதலாய் பாலியல் கதைகளைச் சொன்ன பக்கத்துவீட்டு லலிதா அக்கா தூக்கிலிட்டுக் கொண்டதை மறக்க முடியாமல் இருக்கலாம். கவிதை சொல்லிக்கு நண்பனின் நயவஞ்சகம் பதிந்து இருப்பதைப் போல இன்னொருவருக்கு வேறு ஏதேனும் நினைவில் இருந்து அழிக்கமுடியாததாக இருக்கலாம்.

கவிதை வாசித்தல் செய்தி வாசித்தலும் இல்லை, கவிதை என்பது வரிகளை மடக்கிப் போட்டு ஒரே வரியை இரண்டு முறை வாசிப்பதுமில்லை என்பதால் கவிதையின் ஒவ்வொரு வார்த்தையுமே முக்கியமானதாகிறது. தேவையற்ற சொற்களை தயவுதாட்சண்யமில்லாமல் வெட்டிவிடுவதும், பொருத்தமான சொல் கிடைக்காத போது கவிஞன் ‘அந்தச்’ சொல்லுக்காக காத்திருத்தலும் பயனுடையதாகவே இருக்கிறது.

இந்த ‘கச்சிதம்’ மேற்சொன்ன கவிதையில் சரியாக வந்திருப்பதாகப் படுகிறது.

கவிஞன் இந்த நகரத்தின் தூசி அடர்ந்த தெருக்களிலும், நகரத்தின் அரிதாரத்தை மிக வேகமாக பூசிக் கொண்டிருக்கும் கிராமங்களின் மரங்களுக்க்கு அடியிலும் தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சராசரி மனிதன். தன் சாதாரண அனுபவங்களை சாதாரண காட்சிகளாக கவிதையில் பதிவு செய்தும் கவிஞன் வெற்றி பெறுகிறான் அல்லது சாதாரணக் காட்சிகளை பூடகமான காட்சிகளாக கவிதையாக்கியும் வெற்றியடைகிறான். ஆனால் பதிவு செய்யப்படும் அந்த அனுபவத்தின் செறிவுதான் கவிதையின் இடத்தை நிர்மாணிக்கிறது.

கவிஞன் துருத்திக் கொண்டிருக்கும் பெரும்பாலான கவிதைகள் வலிமையிழந்துவிடுகிறது என்பது என் அபிப்பிராயம். கவிதை முடியும் புள்ளியில் கவிஞன் கவிதையிலிருந்து உதிர்ந்து விட வேண்டும். இந்தப் புள்ளியிலிருந்து கவிதையின் முழு உரிமையும் வாசகனுக்குத்தான். கவிஞன் விடாமல் தொற்றிக் கொண்டிருந்தால் அந்தக் கவிதையை வாசகன் உதிர்த்துவிடுவான். செல்வராஜ் ஜெகதீசனின் பின்வரும் கவிதை அந்த ரகம் தான்.



இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.

வருவோர் போவோர் தரும்
இரண்டிரண்டு பிஸ்கட்கள்

அவ்வப்போது யாராவது தரும் - ஒரு
அரை டம்ளர் தேநீர் சகிதம்

இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.

அந்த வங்கி வாசல் தேநீர் கடை
அவளின் வாடிக்கை வாழ்க்கை போல.

இடது கையில் இரண்டாயிரம்
சொச்ச விலை ஷூவுடன்

இருந்தேன் நானும் அந்த
இடத்தில் ஒரு தேநீருடன்.

ஒன்றிரண்டு நிமிடங்கள்
ஒருவாறாய் சிந்தித்தவன்

பர்சில் பளபளத்த
பல வண்ண நோட்டுக்களில்

ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து
ஒரு வாரம் ஆன பின்னும்

குனிந்து அணியும்போதெல்லாம்
இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது
இந்த இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ.

மிக நல்ல கவிதையாக வந்திருக்க வேண்டிய இந்தக் கவிதையில், கவிதையின் முக்கிய பாத்திரமான எழுபது வயதுக் கிழவியின் மீதாக குவிய வேண்டிய வாசக கவனத்தை தனது இரண்டாயிரம் ரூபாய் மீதான ஷூவின் மீது நிறுத்திவிடுகிறார் கவிஞர். இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகன் தன்னை கவிஞனின் இடத்தில் நிறுத்தி அந்தக் கிழவியைப் பற்றி யோசிப்பதற்கான இடத்தை கவிதையில் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்தக் கவிதையின் வாசகன் கிழவியை மறந்து கவிஞன் என்ன நினைக்கிறான் என்ற இடத்திற்கு வந்துவிடுகிறான். இதனை இன்னொரு விதமாகச் சொன்னால் கவிதையில் உருவாக்கிய காட்சியில் கவிஞன் நின்று கொண்டிருக்கிறார். தான் எடுக்கும் நிழற்படங்களில் தானும் இருக்க வேண்டும் என்று கேமராக்காரன் விரும்புவது எத்தனை அபத்தமாக அமைந்துவிடுமோ அதேபோலத்தான் கவிதைகளில் கவிஞன் நின்றுவிடுவதும்.

செல்வராஜ் ஜெகதீசன் தொடர்ந்து நேரடியான கவிதைகளையே முயன்றிருக்கிறார். கவிதையுலகுக்கு புதியவர்கள் கவிதையை வாசிப்பதில் இருக்கும் சிக்கல்களை இவரது கவிதைகளில் காண முடிவதில்லை. கவிதையின் நேரடித்தன்மை அல்லது எளிமைத்தன்மையை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்; அவை கவிதைகளே அல்ல வெறும் காட்சிகள் மட்டுமே என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

கவிதை எளிமையை நோக்கி நகர்ந்து விட்டது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்படிச் சொல்பவர்கள் நேரடியான கவிதைகளை எதிர்பார்க்கிறார்கள். கவிதையில் நேரடித்தன்மையும் பூடகமும் சம அளவில் வரவேற்கப்பட வேண்டியதுதான். நேரடிக் காட்சிகளை கவிதையாக்கும் போது மிகுந்த கவனம் தேவை. கவிதைக் காட்சி வாசகனுள் என்ன தாக்கதை உண்டாக்குகிறது என்பதை வைத்தே அந்தக் கவிதை வெற்றியடைகிறது. வெறும் காட்சியை மட்டும் பதிவு செய்வதற்கு கவிஞன் அவசியமில்லை. ஜெகதீசன் நேரடிக் கவிதைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வெறும் சொல்லாடல்களாக்கி பல கவிதைகளில் தோல்வியும் அடைந்திருக்கிறார்.

நின்று சலித்த
நீள் பயணமொன்றில்
மென்று விழுங்கிய
பார்வையோடு நீ
விட்டுச் சென்ற
இருக்கையில்
இன்னமும்
உன் சூடு.

இந்தக் கவிதை எனக்கு விருப்பமானதாக இருக்கிறது. இடம்,காலம் என்ற எந்தக் குறிப்புகளும் இல்லாத இந்த எளிமையான கவிதையில் ஒருவன்/ஒருத்தி இருக்கையை விட்டு எழுந்து சென்றிருக்கிறான்/ள். அந்தச் சூட்டை கவிதை சொல்லி உணர்கிறான். இதுதான் காட்சி.



வெறும் பேருந்து/தொடர்வண்டிப்பயணமாக மட்டுமே இந்தக் கவிதை இருக்க வேண்டியதில்லை. ஒரு தோல்வியடைந்த காதல் கவிதையாக நான் வாசிக்கிறேன்.

நின்று சலித்த/நீள் பயணமொன்றில்- சலிப்படைந்து நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வில்
மென்று விழுங்கிய/பார்வையோடு நீ - பிரிவின் துக்கத்தோடு நீ பிரிந்து சென்றாய்
விட்டுச் சென்ற/இருக்கையில்/இன்னமும்/உன் சூடு - உன் நினைவுகள் எனக்குள்ளாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு நேரடிக் காட்சியை இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்று பல்வேறு கோணங்களில் கவிதையை அணுகுவது நல்ல வாசிப்பனுபவத்தை தரும் என்றாலும் வாசகன் தனது மனதுக்கு நெருக்கமான அனுபவத்தோடு கவிதையை அணுகுவதே மிகச் சிறந்த கவிதானுபவமாக அமைகிறது.

செல்வராஜ் ஜெகதீசன் தனது கவிதைகளில் தேர்ந்தெடுத்தவற்றை தொகுப்பாக வெளியிடுவதில் ஆர்வமாக இருக்கிறார். தனது முந்தைய மூன்று தொகுப்புகளிலிருந்து எண்பத்தாறு கவிதைகளை அனுப்பி வைத்திருந்தார். மூன்று ஆண்டுகளில் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் ஒரு கவிஞர்- இத்தனை அவசரமாக தொகை நூலினை கொண்டுவருவதில் எனக்கு ஒப்புதலில்லை. இன்னும் தன் கவிதைகளை மேம்படுத்துவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் கவிஞன் சற்று பொறுத்திருக்கலாம் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

அதே சமயம் தனது கவிதை சார்ந்து செல்வராஜ் ஜெகதீசன் இயங்கும் வேகம் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் தனது கவிதைகளை தொடர்ந்து பிரசுரிக்கச் செய்கிறார். கவிதை தன்னைச் சார்ந்து இருப்பவனை எல்லா நேரத்திலும் துடிப்புடன் இருக்க அனுமதிப்பதில்லை. ஒருவனை சமயங்களில் உச்சபட்ச வேகத்துடன் வைத்திருக்கும் கவிதை அவனை இன்னொரு கணத்தில் மந்தமானவனாக்கிவிடுகிறது. ஆனால் ஜெகதீசனை கவிதை வேகத்துடனயே வைத்திருக்கிறது. இந்த வேகத்துடன் இன்னமும் செறிவான கவிதைகளை செல்வராஜ் ஜெகதீசன் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

புகைப்பட உதவி : http://flowers.robjaffe.com/pages/The%20Beauty%20of%20Sadness%20B%26W.html

(நன்றி: சொல்வனம் & வா. மணிகண்டன்)

29 நவம்பர் 2010

உயிரோசை கவிதைகள்

29-11-2010 தேதியிட்ட உயிரோசை மின்னிதழில் வெளியான கவிதைகள்.

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்



வரும் வரை
வரிசையாய் வந்து
விசாரிக்கும்
உன் அலைபேசி விசாரிப்புகளோடு
வந்தபின் விழிகளால்
நீ எதிர்கொள்ளும் உன்
வினாக்களுக்காகவே
வந்து கொண்டிருக்கிறேன்
உன்னை நோக்கி.

O
என்றேனும் நிகழும்
நீ திரும்பும் கணமென்னும்
எதிர்பார்ப்பை
எப்போதும்
பொய்யாக்கிப் போகும்
உன் முகம் திரும்பா
பிரிதல்கள்.


O
வாழ்க்கை
சில நேரங்களில்
இப்படி இருக்கிறது.
இப்படியான
சில நேரங்களிலேயே
இருந்து விடுமோ
இந்த வாழ்க்கை?

O
வீழ்த்தி விட்டோம்
வேறோர் அணியை என்று
வீறு கொள்கிறோம்
விளையாட்டில்.

இன்னொரு மனதை
வெற்றி கொள்வதை
விழுந்து விட்டோமென்கிறோம்
காதலில்.

O

22 நவம்பர் 2010

'கல்கி' யில் ஐந்தாவது கவிதை

இந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்)




(நன்றி: கல்கி)

10 நவம்பர் 2010

தற்காலக் கவிதை - சில கேள்விகள், சில சித்திரங்கள் - சுகுமாரன் - படித்ததில் பிடித்தது



சமீபத்திய வருடங்களின் கவிதைப் பெருக்கத்தை யோசிக்கும்போதெல்லாம் திருச்சூர் பூரக் காட்சியும் மனதில் திரையீடாகும்.

இருபுறமும் யானைகள். அவற்றின் முதுகுகளில் முதுகு ஒன்றுக்கு இருவராக வண்ணக்
குடைகளும் வெண்சாமரங்களும் பிடித்த மனிதர்கள். யானைகளுக்குக் கட்டியிருக்கும் பொன்முலாம் பூசிய பட்டங்கள் வெயிலில் மின்னுகின்றன. அந்த மினுக்கத்தால் வெயில் இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கிறது. யானைகளின் நேருக்கு நேரான வரிசைக்கு பின்னால் பல வண்ண மக்கள் திரள். முன்னால் வெவ்வேறு வாத்தியக் கருவிகளுடன் ஏறத்தாழ இருநூறு கலைஞர்கள்.வெவ்வேறு வாத்தியங்களிலிருந்து அவர்கள் வாசித்து எழுப்பும் வெவ்வேறு தாள ஒலிகள் ஒரே உயிரின் லயமாகக் கேட்கின்றன. சீரான ஒத்திசைவில் கலைஞர்களின் உடல்கள் இயங்குகின்றன. மக்கள் திரளின் பல்லாயிரம் கைகள் தாளத்துக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் அசைகின்றன. உலகின் மிகப் பெரிய தாளவாத்தியக் கச்சேரியான பூரம் பஞ்சவாத்தியத்தின் உச்ச கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. முத்தாய்ப்பான அந்த கட்டத்தில் எல்லா வாத்தியக் கருவிகளும் இயங்குகின்றன. ஒலியளவு செவியை அதிரச் செய்வதாகிறது.பிரதான மேளக்காரர்களில் ஒருவர் அத்தனைப் பரபரப்புக்கும் அத்தனை விமரிசைகளுக்கும் நடுவில் சக கலைஞரோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். அவரும் வாத்தியத்தைக் கொட்டியபடியே அதைக் கேட்டு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இருவரும் முகம் மலரச் சிரித்துக் கொள்கிறார்கள். ஒரு பெரும் நிகழ்வுக்குள் நடந்த இந்தக் குறுஞ்செயல் கவனத்தில் சாசுவதமாகத் தங்கிவிட்டது.

தமிழ்க் கவிதை பற்றிய சிந்தனையின்போது தவிர்க்க இயலாமல் இந்தக் கேரளச் சித்திரம் வந்து படரும். இதற்கு தர்க்கரீதியான பொருத்தம் இருக்கிறதா என்று சந்தேகம் எழும். எனினும் ஏதோ ஓர் ஒற்றுமையை மனம் இனங் கண்டிருக்கிறது. இன்றைய கவிதைப் பெருக்கமும் அதன் செயல்களும் விவரித்த காட்சியுடன் ஒப்பிடக் கூடிய ஒன்றாகவும் தோன்றியிருக்கிறது. நூற்றுக் கணக்கான கவிஞர்கள் இருக்கிறார்கள். கவிஞர்கள் பரஸ்பரம் உரையாடிக் கொள்கிறார்கள். வெவ்வேறு கவிதைகளின் தனிக் குரல்கள் ஒன்று கலந்து ஒரே மொழியின் துடிப்பாகின்றன. இவை எல்லாம் ஒற்றுமைகள். வேற்றுமையும் இருக்கிறது. வாத்தியக் கலைஞர்களின் வாசிப்புக்கு எதிர்வினையாற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். கவிதைக்கு வாசகர்கள் குறைவு. அல்லது இல்லவே இல்லை. கவிதை எழுதுபவர்கள், அதை வாசிப்பவர்கள் இருவரும் ஒரே பிரிவினராக இருக்கிறார்கள். புதிய நூற்றாண்டின் கவிதைகள் பற்றி யோசிக்கும்போது எழும் முதல் சித்திரம் இது.

@

நவீனத் தமிழ்க் கவிதை வெவ்வேறு கட்டங்களில் பெரும் அலை வீச்சாக எழுந்திருக்கிறது. 'எழுத்து' பத்திரிகையின் வாயிலாக உருவான அறிமுக அலை. எழுபதுகளில் திரண்டு எண்பதுகளில் வீச்சடைந்த அங்கீகாரம். இவற்றை விடத் தீவிரமாகவும் பரவலாகவும் கவிதை எழுந்தது தொண்ணூறுகளிலும் அதன் முத்தாய்ப்பாகப் புதிய நூற்றாண்டிலும்.

முந்தைய இரு காலப் பகுதிகளை ஒப்பிட்டும்போது மிக அளவில் கவிதைகளும் கவிஞர்களும் அறிமுகமாயிருப்பது கடந்த பத்தாண்டுகளுக்குள் என்று கருதுகிறேன். தொண்ணூறுகளுக்கு முன்புவரையிலான கவிதைகளை வகைப் படுத்துவது எளிதாக இருந்தது. அபத்தமான பிரிவினை என்றாலும் அகவயமானவை, புறவயமானவை என்று பெரும்போக்காகச் சொல்லிவிட முடிந்தது. இன்று அது எளிதல்ல. புதிய கவிதைகளை வகைப் படுத்துவ தென்பது தவளைகளை தராசிலிட்டு நிறுப்பதுபோல விநோதமாக முடியும்.
கவிதைப் பெருக்கத்துக்கான முகாந்திரங்களைச் சற்று யோசித்துப் பார்க்கலாம். இவை ஒரு கவிதைப் பயிற்சியாளனின் பார்வையில் தென்படுபவை. விமர்சன அடிப்படைகள் வலுவாகக் கொண்டிராதவை. கவிதைக்காரனாக என்னுடைய அக்கறைகள் கவிதையின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் செயலிலும் ஊன்றியவை. அதன் பிறப்புச் சான்றிதழில் அல்ல.அந்தக் கணிப்புகள் விமர்சகன் செய்ய வேண்டியவை. துரதிருஷ்வசமாக இன்றைய கவிதைகளை நுட்பமாக உணர்ந்து அவற்றின் செழுமையையும் ஊனத்தையும் வரையறுத்துச் சொல்லும் விமர்சகன் இல்லை. இது புதிய கவிதைகள் பற்றிய சிந்தனையில் உருவாகும் இரண்டாவது சித்திரம்.

@

முந்தைய கவிதைகள் நகர்ப்புறக் கல்வி பெற்றவர்களின் பங்களிப்பாக இருந்தது. அதற்குப் பின்னர் ஒரு புதிய தலைமுறை கல்வியில் தேர்ந்து இலக்கியத்தில் செயல்பட ஆரம்பித்தது. அந்த எண்ணிக்கை இரண்டாயிரங்களில் அதிகம். கவிதை எழுதுவதும் எழுதிய கவிதையை இதழ்களில் வெளியிடுவதும் நூலாக அச்சியற்றுவதும் எளிதான செயலல்ல. கணிப்பொறியின் பயன்பாடு பரவலாக ஆன பின்னர் இதழ் வெளியீடுகளும் நூல் தயாரிப்பும் இலகுவாயின. அண்ணா மறைவையொட்டி முதல் கவிதை எழுதிய கலாப்ரியாவுக்கு கவனத்துக்குரிய தொகுப்பு வர பாரதி நூற்றாண்டு வரை கால அவகாசம் வேண்டியிருந்தது. இன்னொறையும் கருத்தில் கொள்ளலாம். அதுவரை எழுதப்பட்ட கவிதைகள் தளர்ச்சியான செய்யுள் தன்மையையும் பொருள் இறுக்கத்தையும் கொண்டிருந்தன. புதுக்கவிதை என்ற வடிவமே மரபான வடிவத்துக்கு எதிரான கலகம் என்று எண்ணுகிறேன். அது உரைநடையில்தான் புதிய உணர்வின் வெளிப்பாடாக நிலைபெறுகிறது. செய்யுளை விட உரைநடை அதிக ஜனநாயகத்தன்மை கொண்டது என்பதும்
அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம்.

மேற்சொன்னவை கவிதைக்கான புறத் தூண்டுதல்கள் மட்டுமே. கவிதையை நிர்ணயிக்கும் அகத் தூண்டுதல் வேறு. நடுத்தர வர்க்கப் படிப்பாளிகளிடமிருந்து முந்தைய கவிதைகள் உருவாயின. அவை அல்லாத கவிதைகள் அரசியல் பிரச்சாரத்துக்காக எழுதப்பட்டன. புதிய நூற்றாண்டின் கவிதை வேறொரு தளத்திலிருந்து உயிர்த்தெழுந்தது. கல்வியறிவின் வெளிச்சத்துடனும் தமது இருப்பு நிலை பற்றிய விழிப்புணர்வுடனும் அறிமுகமான புதிய தலைமுறை கவிதைக்குள் பிரவேசித்தது. அதுவரை சொல்லப்படாத வாழ்வின் பாடுகளைச் சொல்ல முற்பட்டது. அதுவரை பேசப்பட்டிருந்த கவிதை மொழியைப் புனரமைத்தது. அதுவரை முன்வைக்கப்படாத நிலக் காட்சிகளைத் தீட்டியது. அதுவரை வெளியரங்கமாகாத மனக் கோலங்களை படர விட்டது. இரண்டாயிரங்களின் கவிதையியலை இந்தப் புதிய தலைமுறை நிர்ணயித்தது. தனக்கு முன்னிருந்த கவிதைகளைப் புதிய கோணத்தில் பார்க்கவும் தனக்கு முன்பு கவிதையில் ஈடுபட்டவர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும் வலியுறுத்தியது.

பல கிளைகள் கொண்டது இரண்டாயிரங்களில் கவிதைக்குள் நுழைந்த தலைமுறை.தலித்தியம். பெண்ணியம், சூழலியல், பின் நவீனத்துவம் என்று விவாத வசதிக்காக இவற்றை வகைப்படுத்தலாம். இவை முன்வைக்கும் கவிதையியலின் கூறுகள் தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் முன்னரே மங்கலாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் தனது கவிதையியலுக்குள் பயிலாத ஒன்றை - அது வடிவமோ, கருத்தாக்கமோ எதுவானாலும் ஒரு மொழி ஏற்றுக் கொள்வது அரிதென்று தோன்றுகிறது. காரணம், மொழி கலாச்சாரத்தின் கொள்கலம். சானட் போன்ற ஆங்கிலக் கவிதை வடிவங்களையும் அந்நியப் பழக்க மரபுகளையும் தமிழ்க் கவிதை புறந்தள்ளக் காரணம் இதுதான். ஒரு நீக்ரோவின் உணர்வை நமது கவிதையியல் துலக்கமாக வெளிப்படுத்த இயலாது. ஆனால் பள்ளர்களின் வாழ்க்கையையும் நந்தனின் பதற்றத்தையும் உணரக் கூடிய சுரணையுள்ள மொழி அதை ஏற்று விரிவாக்கும். கடவுளின் விரிமார்பில் சேரத் தவிக்கும் தடமுலைகளைப் பேசக் குரல்கொடுக்கும் மொழி பெண்ணின் இருப்பை மதிக்கும். காமத்தையும் உடலெழுத்தையும் அங்கீகரிக்கும். இயற்கையை ஆராதிக்கும் கவிதையியல் சுற்றுச் சூழல் அக்கறைகளுக்கு வழி கோலும். கவிதையியலின் கலாச்சார இயல்பு இது என்று வரையறுக்கலாம். எனினும் கவிதை எப்போதும் மாமூல் கருத்தாடல்களுக்கு எதிரானது. அது அதிகம் வெளிப்பட்டது தற்காலத்தில் என்று பெருமிதப்படலாம். இந்த எதிர்க் குணமேகவிதையின் பெருக்கத்துக்குக் காரணியாக இருக்குமா? மூன்றாவது சித்திரத்தை மிளிரச் செய்யும் கேள்வி இது.

@

இந்தக் கிளைகள் ஒரு புறம். கூடவே எழுபது ஆண்டுக் காலமாக உருவாகி வளர்ந்த புதுக் கவிதையின் முதன்மைப் போக்கிலுள்ள கவிதைகளும் இரண்டாயிரங்களில் மாற்றமடைந்தன. நவீனத்துவம் என்ற அடையாளத்திலிருந்து விலக்கிப் பின் - நவீனத்துவம் என்ற அடையாளத்துடன் விவாதிக்கப்படுகின்றன.இந்த அடையாளம் மேம்போக்கானது என்று கருதுகிறேன். தவிர இன்றைய உலகமயமாக்கலின் செல்லக் கருத்தாகவும் இந்த அடையாளம் மாறிவிட்டது. தொலைபேசியைப் பயன்படுத்துவது நவீனத்துவம்.கைத்தொலை பேசி உபயோகிப்பது பின் நவீனத்துவம்.
உண்மையில் கவிதையின் நிரந்தரமான கோரிக்கை நவீனமாக - புதுமையாக - இருப்பது.எந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவது, படிமம்போன்ற முந்தைய கவிதை அணிகளைத் துறப்பது, உரைநடைத்தன்மையிலேயே கவிதையை எழுதுவது, கடவுள் - சாத்தான் என்ற எதிரீடுகளில் இருவரையும் ஒன்றாக்குவது, மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுவது என்று பின் நவீனக் கவிதைக்குச் சொல்லப்படும் இலக்கணங்கள் எல்லாக் காலத்தையும் சேர்ந்த கவிதைக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. நம் முன் இருக்கும் படைப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் உருவாக்கப்பட்ட கருத்தாடல் என்றும் படுகிறது. இதை ஒதுக்கிவைத்து விட்டு பின் நவீனத்துக்கு நம்மிடையே இருக்கும் படைப்புகளை முன்னிருத்தி மாற்றான வரையறைகளைக் கண்டடையலாம். இவை என் வாசிப்பிலிருந்து தொகுத்துக் கொண்ட வரையறைகள். இதன் மூலம் இன்றைய கவிதைகளை மேலும் விரிவான பின்புலத்தில் காண விரும்புகிறேன்.ஒவ்வொரு பதிற்றாண்டிலும் மொழி மாறுகிறது. இந்த மாற்றம் புனைகதைகளை அதிகம் பாதிப்பதில்லை. ஏனெனில் அதில் ஓர் அனுபவப் பதிவோ கதையாடலோநிகழ்கிறது. சரியாகச் சொன்னால் புனைகதை ஓர் அனுபவத்தை அதன் பின்னணித் தகவல்களுடன் வரலாறாக மாற்ற முனைகிறது. கவிதை ஓர் அனுபவத்தை காலத்தின் படிமமாக மாற்ற முற்படுகிறது. நிகழ்கால மொழியில் படிமமாக்கலை எந்தக் கவிதையியல் நிறைவேற்றுகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று அழைக்க விரும்புகிறேன். இந்தப் படிமமாக்கலில் அதுவரை இருந்த தேய்வழக்குகள் உதறப்படுகின்றன. காட்சிகள் மாற்றமடைகின்றன. விலக்கப் பட்ட வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறுகள் கவிதையின் அலகுகளாகின்றன. பல தொனிகளில் வெளிப்படும் குரல்கள் கவிதை மொழியின் சாரமாகின்றன. குறிப்பாகக் கோட்பாடுகளின் உதாரணமாக அல்லாமல் மனித மனத்தின் - மனித இருப்பின் எல்லா கோணங்களையும் எந்தப் பார்வை சித்தரிக்க முனைகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று சொல்ல விரும்புவேன். இதற்கான சான்றுகளை கவிதை மீது கவனமுள்ள வாசகரால் எளிதில் இனங்காண முடியும். இது தற்காலக் கவிதை எனக்குள் விரிக்கும் நான்காவது சித்திரம்.

@

ஈழக் கவிதைகளைக் குறிப்பிடாமல் தற்காலத் தமிழ்க் கவிதையின் சித்திரம் முழுமையடையாது. கடந்த மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்துக் கவிதைகள் தமிழகக் கவிதைகளையும் தமிழகக் கவிதைகள் ஈழத்துக் கவிதைகளையும் பாதித்து வந்திருக்கின்றன. இரண்டு நிலைகளில் இந்தப் பாதிப்பு செயலாற் றியிருக்கிறது. ஒன்று: அரசியல் சார்ந்து. மற்றது: பெண்மொழி சார்ந்து.

ஈழத்துக் கவிதைகளின் செல்வாக்கில்லாமலிருக்குமானால் தற்காலக் கவிதையியலில் அரசியல் விவாதத்துக்கான தருணங்கள் இல்லாமலிருந்திருக்கும். நவீனத் தமிழ்க் கவிதை அரசியலை தீண்டத் தகாததாகவும் அரசியலை மையப்படுத்தி எழுதப்படும் கவிதைகளைப் பிரச்சாரக் கவிதைகள் என்றும் ஒதுக்கியே வைத்திருந்தன. அவசரநிலைக் காலம் பற்றி தமிழில் எழுதப்பட்ட சீரிய கவிதை ஒன்றே ஒன்று மட்டுந்தான் என்பது இந்த இலக்கிய விலக்கைப் புரியவைக்கும்.
போருக்குள் நிகழும் வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தாம் தமிழ்க் கவிதைக்குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப் படுத்தியது. பெண்நிலையில் வாழ்வை எதிர்கொள்ளும் பார்வைக்கும் ஈழத்துக் கவிதைகளிடம் கடன்பட்டிருக்கிறோம். 'சொல்லாத சேதிகள்' என்ற தொகுப்பு தமிழ்க் கவிதையியலில் உருவாக்கிய அதிர்வுகளின் பின் விளைவுகள் காத்திரமானவை.

இந்தப் பாதிப்புகளின் ஸ்தூல அடையாளங்களை தற்காலக் கவிதையில் எளிதில் காணலாம்.ஈழத் தமிழின் சொல் வழக்குகள் பலவும் எந்தத் தடையுமின்றி தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தப்படுவதையும் மறு பக்கத்தில் தமிழ்க் கவிதைச் சொற்கள் ஈழக் கவிதையில் புகுந்திருப்பதையும் உணரலாம்.

@

கடந்த பதிற்றாண்டில் வெளியாகியிருப்பவற்றில் கவிதை நூல்களே கணிசமாக இருக்கும். இதழ்களில் வெளியாகும் கவிதைகளை விட மும்மடங்குக் கவிதைகள் இணையத்தில் வெளியாகின்றன. இந்தக் கவிதை வெளிப்பாட்டின் நோக்கங்களும் வெவ்வேறு. சிலருக்கு அது ஓர் அடையாள அட்டை. அதைப் புனைகதைக்கான ஒத்திகைச் சீட்டாகப் பயன்படுத்தலாம். திரைப் பிரவேசத்துக்கான கடவுச் சீட்டாகக் கொள்ளலாம். அரசியலில் எந்தப் பங்களிப்பும் செய்யாத ஒருவருக்கு கௌரவப் பதக்கமாகலாம். இலக்கியத்தில் அதிகாரம் செலுத்தக் கூடிய மாய நாற்காலியாகலாம். எதிர்பாலினரை வசீகரிக்கும் ஒப்பனையாகலாம். பாவம், தமிழ்க் கவிதை. இத்தனை நோக்கங்களுக்கும் அது ஈடு கொடுக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் ஈடுகொடுத்திருக்கிறது. சீட்டுக் கவியாக, ஆருடக் கருவியாக, பரிசல் இரக்கும் பாத்திரமாக, தற்பெருமையை அறைந்து சொல்லும் முரசாக, கடவுளின் பல்லக்காக என்று பலவிதமாக ஈடுகொடுத்த மரபில் அவற்றையெல்லாம் மீறி வாழ்வின் கணங்களை நிரந்தரப் படுத்தியும் மனதின் உள் ஆழங்களைத் திறந்து காட்டியும் மனித இருப்பின் சிக்கல்களை ஆராய்ந்தும் விரிந்த சுதந்திர வானத்துக்காக வேட்கைகொண்டும் கவிதை தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருகிறது. தற்காலப் பெருக்கத்தில் அது எங்கே என்று கண்டடைவதுதான் இரண்டாயிரங்களின் வாசகனின் முன் நிற்கும் சவால்.
@
முதற் பத்தியில் இடம் பெற்ற பூரக் காட்சியில் வாத்தியக் கலைஞர்கள் இருவரும் பேசிக் கொள்வதுபோலத்தான் இரண்டு கவிஞர்கள் உரையாடிக் கொள்கிறார்களா? அல்லது கவிஞன் தன்னுடைய வாசகனிடம் உரை யாடுகிறானா? இந்தச் சித்திரம் இப்போது கேள்வியாகிறது.


நன்றி: ’காலச்சுவடு’ (இதழ் 121) ஜனவரி 2010 & சுகுமாரன்.

09 நவம்பர் 2010

ஆத்மாநாம் கவிதைகள் - படித்ததில் பிடித்தது

தரிசனம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதினிலே ஒரு நிம்மதி.

O
சுற்றி

அரச மரத்தைச் சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
வேப்ப மரத்தைச் சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
எந்த மரத்தைச் சுற்றி
பிறந்த பிள்ளை இவன்
ஏதாவது தறுதலை மரமாக இருக்குமோ?

o

உலக மகா யுத்தம்

ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

o

ஐயோ

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்.

o

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்.

o

படித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை

01 நவம்பர் 2010

பத்திரமும் தைரியமும்

தாவிக் குதித்து
சாலையை கடக்க முற்பட்டவன்
தலையில் தட்டி
பத்திரமாய் கடப்பது பற்றி
சொல்ல ஆரம்பித்தவனை
இடைமறித்து
எப்போதும் எங்கும்
தைரியம் வேண்டுமென்று
முன்பு நான் சொல்லியதை
எடுத்துக்காட்டி என்னையே
பார்த்துக்கொண்டிருந்தவனிடம்
பத்திரமும் தைரியமும்
பக்குவமாய் புரியும்படி
எப்படிச் சொல்வதென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

o
(நன்றி: கீற்று.காம்)

28 அக்டோபர் 2010

'கல்கி' யில் நான்காவது கவிதை

இந்த வார கல்கி (31-10-2010) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்)

26 அக்டோபர் 2010

பாடம்

மறுநாள் பள்ளியில்
மறக்காமல் இருக்க
மறுபடி மறுபடி
‘வணங்குதல்’ ‘வீசியெறிதல்’ என்ற
வார்த்தைகளை
மகனுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்
அவள்.
அம்மாவின்
முதியோர் இல்லத்து வாசம்
அவன் கண் முன்னே
கலைந்த ஓவியமாய்.


o

23 அக்டோபர் 2010

திண்ணையில் நூறாவது பதிவு

(19-06-2008 தேதியிட்ட திண்ணையில் என் முதல் பதிவு (கவிதைகள்) வெளியானது,
இந்த கவிதைப்பதிவு திண்ணையில் வெளியாகும் எனது நூறாவது பதிவு,
திண்ணை ஆசிரியர் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி)


01
பரிவு

எளிதில்
அணுக முடியாத
ஒருவருடன்
அலுவல் பேச்சு
அத்தனைப் பரிவோடு
அமைந்ததன் காரணம்
என் குழந்தைகள் குறித்த
விசாரிப்புகளோடு
பிள்ளையென்று
ஏதுமற்ற அவரின்
பத்தாண்டு தாம்பத்தியமும்.

O

02
ஓர் நாளில்

காலை நடைப்பயிற்சியில்
அப்பாவையும்
பின் நிகழ்ந்த
பேருந்துப் பயணத்தில்
மகளையும் கண்ட நாளொன்றில்
அவர்களைப் பிரிந்து வாழும்
அம்மாவையும் பார்க்க நேர்ந்தது
ஆலயமொன்றில்.

O

20 அக்டோபர் 2010

சொந்த ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் – சுகுமாரன் - படித்ததில் பிடித்தது



பத்திரிகை, தொலைக்காட்சி, நூல் வெளியீடு ஆகிய துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இந்த அனுபவத்தின் பின்னணியில் நான் குறையாக உணரும் ஓர் அம்சம் - இந்தத் துறைகளில் தகுதியான எடிட்டர்கள் இல்லை என்பது. ஊடகங்களிலும் பதிப்பகங்களிலும் கூட எடிட்டர் என்பவர் பிழை திருத்துநர் என்றே கருதப்படுகிறார். அபாரமான எடிட்டர்கள் என்று பாராட்டப்பட்ட பல பத்திரிகையாளர்களும் தேர்ந்த பிழை திருத்துநர்கள். வெட்டி ஒட்டுபவர்கள். உண்மையில் எடிட்டர், பிழை திருத்துநர் அல்ல. வெட்டி ஒட்டுபவர் அல்ல. ஒரு பிரதியை வாசிப்பின் தேவைக்கும் மொழியின்
மேன்மைக்கும் இசையச் செம்மைப்படுத்துபவர். அப்படியான ஆளுமைகள் தமிழில் குறைவு. அந்தக் குறைவான ஆட்களில் நண்பர் நஞ்சுண்டன் ஒருவர். ( இந்த வாக்கியத்தை 'அந்தக் குறைவான ஆட்களில் நண்பர் நஞ்சுண்டனும்
ஒருவர்' என்று எழுதுவதுதான் பொருத்தம் என்று அவர் செம்மைப்படுத்தக் கூடும்).

கடந்த 2, 3 தேதிகளில் செம்மை என்ற தன்னுடைய அமைப்பின் சார்பில் நஞ்சுண்டன் “சிறுகதைச் செம்மையாக முகாம்” ஒன்றை தரங்கம்பாடியில் நடத்தினார். எழுதிப் பெயரெடுத்தவர்களும் எழுதத் தொடங்கியிருப்பவர்களுமாக பத்துக்கு மேற்பட்ட இளம் எழுத்தாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர். தமிழில் முதல் அச்சாக்கத்தைச் செய்தவரான, பார்த்தலோமியோ சீகன்பால்கு வாழ்ந்து தமிழ்ப் பணியும் இறைப் பணியும் செய்த மண்ணில் நடந்த முகாமுக்கு
ஒரு வரலாற்றுக் கவர்ச்சியும் கூடியிருந்தது. முகாமில் நான் ஆற்றிய உரை இது. யாருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையில் இங்கே இடம் பெறுகிறது.

சிறுகதை செம்மையாக்க முகாம்

நண்பர் நஞ்சுண்டனின் நோக்கம் என்னைக் குழப்பத்தில் தள்ளி விட்டிருக்கிறது. சிறுகதை செம்மையாக்க முகாமுக்கு என்னை ஏன் அழைத்தார் என்று புரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. கவிதை எழுதுபவனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் விருப்பமும் அப்படியே அறியப்பட்டிருக்கும் பாக்கியமும் கொண்ட நான், சிறுகதை முகாமில் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறார் என்று தெரியவில்லை.

எனக்கு இரண்டு யூகங்கள் இருக்கின்றன. ஒன்று: கவிதை எழுதுவது லேசு. அதைச் செம்மைப்படுத்துவது இன்னும் எளிது. ஆனால் செறிவாக ஒரு சிறுகதை எழுதப்படுவதும் அதைச் செம்மையாக்குவதும் கடினமான செயல் என்று செல்லமாக இடித்துக் காட்டுவது.

இரண்டாவது: செம்மையாக்கத்திற்குஒரு குழுவை உருவாக்கி வைத்திருப்பதுபோல இலக்கியப் புலனாய்வுக்கும் தனிக் குழுவை வைத்திருக்கிறாரோ என்று சந்தேகிக்கிறேன். இல்லையென்றால் என்னுடைய ரகசியங்களை அவரால் துப்புத் துலக்கியிருக்க முடியாது. நானும் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் என்பதை மேற்படி குழு கண்டுபிடித்து நஞ்சுண்டனிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்க வேண்டும்.

நண்பர்களே, நானும் கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு தொகுப்பாகவே வெளியிடும் அளவு எண்ணிக்கையுள்ள கதைகள். இருபத்தி நான்கு கதைகள். மௌனியின் மொத்தக் கதைகளுக்கு நிகரான எண்ணிக்கை. அண்மையில் வெளிவந்த சில சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க நேர்ந்தபோது, அவையடக்கத்துக்கு உட்பட்டே ஓர் இழப்புணர்வு தோன்றியது. நான் வாசித்த அந்தக் கதைகளை விட, எழுதி அச்சேறிய பின்பு கைவிட்ட என் கதைகள் பொருட்படுத்தப்பட வேண்டியவைதாம் என்று சின்னதாக ஒரு கர்வமும் எழுந்தது. என்னுடைய கதாசிரிய அவதார ரகசியம் பற்றி அறிந்துதான் நஞ்சுண்டன் முகாமுக்கு அழைத்திருக்கிறார் என்றால் மகிழ்ச்சி. சிறுகதைகளில் ஒரு கை பார்த்தவன் என்ற முறையில் நான் முகாமுக்குப் பொருத்தமானவன். அறியாமல்தான் அழைப்பு என்றால் மேலும் பொருத்தம். மேலும் மகிழ்ச்சி. எழுதிய கதைகளின் பக்குவமின்மையை உணர்ந்து, அவற்றை ஒதுக்க முடிந்தது சிறுகதைக் கலைக்கு நான் செய்த சேவை என்றே எண்ணுகிறேன்.

இதுபோன்ற ஒரு முகாமில் அந்தக் கதைகள் செப்பனிடப் பட்டிருந்தால் நானும் சிறுகதையாளனாக்கும் என்று சொல்லிக் கொள்ள முடிந்திருக்கலாம். ஆர்வத்துடன் கதைகள் எழுதப் பயின்று கொண்டிருந்த காலத்தில் ஆல்பெர் காம்யூவின் 'தலை மறைவும் அரசாங்கமும்' ( Exile and the kingdom) என்ற சிறுகதைத் தொகுப்பை ஒருவேளை வாசிக்காமல் இருந்திருந்தால் நானும் சிறுகதைக்காரனாகியிருக்கலாம். செறிவான சிறுகதைகளுக்கு எடுத்துக் காட்டாக நான் மதிக்கும் தொகுப்பு அது.

ஆல்பெர் காம்யூவின் மேற்சொன்ன தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இருக்கின்றன. தன்னுடைய மொத்த எழுத்து வாழ்க்கையில் சிறுகதைகளாக அவர் எழுதியவை இந்த ஆறு கதைகள் மட்டுமே. ஆறு கதைகளும் பொதுத் தன்மை
கொண்டவை. எல்லாருக்குள்ளும் ஓர் அரசாங்கம் இருக்கிறது. நாம் அதை ஆள்பவர்களாக இருக்கிறோம். அல்லது அவ்வாறு நினைத்துக் கொள்கிறோம். ஆனால் வாழ்வனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் நாம் அந்த அரசாங்கத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்பது தெரியும் என்ற மைய உணர்வுதான் இந்த ஆறு கதைகளின் பொதுத்தன்மை. எல்லாக் கதைகளிலும் வரும் மையப் பாத்திரங்கள் தங்களது சொந்த ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு கதையை எடுத்துக் காட்டாகப் பார்க்கலாம்.

ஆடுல்டெரொஉச் நொமன் (அடல்ட்ரஸ் உமன் - ஒழுக்கம் கெட்டவள்) கதையின் மையப் பாத்திரம் ஜெனைன். அவள் கணவன்
மார்ஸெல். பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் பிரான்சின் காலனி நாடான அல்ஜீரியாவில் வாழ்பவர்கள். உலகப் போரை ஒட்டி நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சியில் வியாபார நெருக்கடிக்குள்ளாகிறான் மார்ஸெல். கைவசம் இருக்கும் சரக்குகளை நகரத்தில் விற்பதற்காக மனைவியுடன் பேருந்துப் பயணம் மேற்கொள்கிறான். பேருந்து ஓட்டுநரின் இருக்கைக்கு முன்னால் உள்ள கண்ணாடியில் மோதும் மணற் பிரதேச ஈக்களைக் கவனிக்கும் ஜெனைனிடமிருந்து கதை தொடங்குகிறது. ஜெனைன் வியாபரத்தில் கணவனுக்கு உதவியாளர் கூட. அந்த வறண்ட பிரதேசத்தில் செல்லும் பயணத்தில் தன்னுடைய வாழ்க்கை பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறாள். மார்ஸெல் பற்றிய எதிர்மறையான சித்திரங்கள்தாம் அவளுக்குத் தோன்றுகின்றன. உற்சாகமில்லாதவன், வேலைப்பளுவால் சோர்ந்து போனவன், தன்னுடைய மென் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவன், இவனையா இளமையின் அடையாளம் என்று காதலித்தோம் என்று கசந்து கொள்கிறாள். பேருந்தில் அவளையே கவனித்துக் கொண்டிருக்கும் பிரெஞ்சு சிப்பாய் ஒருவன் புன்னகையுடன் நீட்டும் மிட்டாய்களை வாங்கிக் கொள்கிறாள். அதற்குக் காரணம், தான் இப்போதும் பார்வைக்கு உவப்பானவளாக இருக்கிறோம் என்ற சமிக்ஞை சிப்பாயின் செயலில் இருப்பது. அது தரும் மறு உறுதி. அன்று இரவு அவர்கள் ஒரு கோட்டைக்கு அருகிலுள்ள ஓட்டலில் தங்குகிறார்கள். கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் போகிறார்கள். அது ஜெனைனைப் பரவசப்படுத்துகிறது. ஓட்டலுக்குத் திரும்பி வந்த பிறகும் அதே பரவசத்தில் இருக்கிறாள். நள்ளிரவில் மார்ஸெல் தூங்கிய பிறகு ஓட்டல் அறையிலிருந்து வெளியேறி கோட்டைக்குள் சுற்றி அலைகிறாள். அவள் அனுபவிக்கும் பரவசம் இளமை ததும்பிய நாட்களில் மார்ஸெலுடன் கொண்ட உடலுறவை விட உன்னதமானது. கோட்டைக்குள் தரையில் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களைப் பார்க்கிறாள். அந்தக் கணம் அவள் வாழ்க்கையின் பொற்கணம். திரும்ப அறைக்கு வருகிறாள். தூக்கம் முறிந்து எழும் மார்ஸெல் முன்னால் உடைந்து அழுகிறாள். என்னவென்று கேட்கிற அவனிடம் ஒன்றுமில்லை என்றுதான் பதில் சொல்கிறாள். ஆனால் ஒருபோதும் அவளுடைய மனமுறிவையோ, கோட்டைக்குப் போனதைப் பற்றியோ அவள் சொல்வதில்லை.

கதை இங்கே முடிந்து விடுகிறது. இப்படிக் கதைச் சுருக்கம் சொல்லும்போதே, சிறுகதை என்ற இலக்கிய வடிவம் வெறும் கதை சொல்லும் ஊடகம் அல்ல என்பதையும் உணர்கிறேன். அது ஒரு பார்வை. வாழ்வின் பல்வேறு சலனங்களை ஒரு மையத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் செயல். இந்த நோக்கிலான உரையாடல் இலக்கியத் திறனாய்வாக மாறக் கூடும். அது செம்மையாக்க முகாமின் குறிக்கோள் அல்ல. ஆனால் செம்மையாக்கத்தை மேற்கொள்ள ஒரு படைப்பின் இயல்பும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதன் கட்டுமானக் கூறுகள் கவனிக்கப்பட வேண்டும். அப்படியான கவனம் இல்லாமல் செய்யப்படும் செம்மையாக்கம், ஒரு புத்திசாலித் தனமான வித்தையாகுமே தவிர படைப்பைச் செழுமைப்படுத்தும் ஜீவனுள்ள நடவடிக்கையாகாது.

தமிழில் இந்த வித்தைகளுக்கு உதாரணங்கள் இருக்கின்றன. முதல் தமிழ் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திர'த்துக்கு ஒரு செம்பதிப்பு கொண்டு வரப்பட்டது. நாவல் பாத்திரங்கள் கொச்சை மொழியில் பேசுகின்றன, ஆசிரியரின் நடையில் வடமொழிச் சொற்கள் அதிகம் என்பன போன்ற குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஒருபடி மேலே போய் பாத்திரங்களின் வடமொழிப் பெயர்கள் தமிழாக்கப்பட்டன. இந்தச் செம்மையாக்கம் படைப்பு நோக்கத்துக்கு எதிரானது. ஓர் அரசியலை உள்ளடக்கியிருப்பது. ஒரு பிரதியைச் செப்பனிடும்போது நினைவிலிருக்க வேண்டிய விதி படைப்புக்குச் செறிவூட்டுதல் மட்டுமே. அதற்கே கூட படைப்பின் இயல்பைப் பற்றிய புரிந்துணர்வு இருக்க வேண்டும்.

இங்கே எடுத்துக் காட்டிய ஆல்பெர் காம்யூவின் கதை, பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
மொழியாக்கத்தின் போதே செம்மையாக்கமும் நடைபெற்றிருக்கிறது என்பதை இந்தக் கதை பற்றி விவாதிக்கும்
விமர்சன நூல்களிலும் ஆசிரியரின் குறிப்புகளிலும் இணையப் பக்கங்களிலும் காண முடிகிறது. கதையின் தலைப்பு கூட பிரதியின் இயல்பை ஒட்டியே செம்மையாக்கப்பட்டிருக்கிறது. மையப் பாத்திரமான ஜெனைன், கதை நிகழ்வில் எந்த இடத்திலும் ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. ஆனால் தலைப்பு - ஒழுக்கமற்றவள். இது ஒரு பைபிள் கதையின் சாரத்திலிருந்து உருவாக்கப்பட்டது. விபச்சாரி என்று குற்றம் சாட்டப்பட்ட பெண்ணைக் கல்லால் அடித்துத் தண்டிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டபோது, யார் அதுபோன்ற குற்றத்தில் ஈடுபடவில்லையோ, அவர் முதல் கல்லை எறியலாம் என்கிறார் யேசு. இந்தக் கதைதான் காம்யூவின் தலைப்புக்கு ஆதாரம். இந்தத் தகவல் தெரிய வரும்போது கதைப்பிரதி மேலும் பொருளடர்ந்த புரிதலுக்கு இட்டுச் செல்லுகிறது. செம்மையாக்கத்தின் தேவையும் பணியும் இதுவாகத்தான் இருக்குமென்று கருதுகிறேன். இந்தமுகாமில் இறுதி செய்யப்படவிருக்கும்
கணேசகுமாரனின் கதை 'வண்ணமானவள்' எனக்கு வாசிக்கக் கிடைத்தது. ஒரு பெண்ணின் உள் உலகைச் சொல்லுகிற
படைப்பு. அதுதான் காம்யூவின் கதையை நினைவுக்குக் கொண்டு வந்தது. கணேசகுமாரனின் கதைத் தலைப்பு அதன் உள்ளடக்கத்துக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

பேச்சைத் தொடங்கியபோது முன்வைத்த முதலாவது யூகத்தை இங்கே நியாயப்படுத்த விரும்புகிறேன். கவிதையைச் செம்மையாக்குவது எளிது. ஏனெனில் கவிதை அதன் மையத்தை நோக்கி விரைகிற தன்மை கொண்டது. அதனால் பெரும்பான்மையான புறத்தகவல்களை தவிர்த்துக் கொள்கிறது. சிறுகதை மையத்தை நோக்கிச் செல்வதற்கே நிறைய புறத் தகவல்களைத் திரட்டிக் கொள்ளுகிறது. இடம், காலம், மொழி, பேச்சு, பண்பாட்டுக் கூறுகள் எனச் சிறுகதை தவிர்க்க முடியாத பல தகவல்களைத் திரட்டிக் கொள்கிறது. இரண்டுக்குமான ஒற்றுமை, இரண்டு இலக்கிய வடிவங்களும் ஒற்றைப் புள்ளியில் குவியவே முனைகின்றன என்பதுதான். இசை சார்ந்த தொழில்நுட்பச் சொற்களில் விளக்குவதானால் கவிதையும் சிறுகதையும் ஒரே சுருதியில் இயங்குபவை. அவற்றில் பல வித்தியாசங்களைக் கேட்க முடிந்தாலும் அவற்றின் குறிக்கோள் ஒரே மைய உணர்வை நெருங்குவது. பாரதியின் 'வரம் கேட்டல்' என்ற கவிதையையும் (தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி' என்ற வரிகள் இடம் பெறும் கவிதை) புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்' கதையையும் சான்றாக வைத்து, இதைப் பார்க்கலாம். பத்துக் கண்ணிகள் அல்லது பத்திகள் கொண்ட கவிதையின் ஒரே உணர்வு மேலான வாழ்க்கைக்கான இறைஞ்சுதல். கௌதமன், ராமன், அகலிகை, லட்சுமணன், காட்சிக்குள் வராத ராவணன், சலவைத் தொழிலாளி - இத்தனைக் குரல்கள் ஒலித்தும், கதை சென்றடைவது சீதையின் தனிமையை. மாறாக நாவல், வெவ்வேறு சுருதிகளில் பற்பல வித்தியாசங்களைக் கொண்டிருப்பது. அது பல உணர்வுகளைப் பகுத்துக் கொடுப்பது. தி. ஜானகிராமனின் 'மோகமுள்' முதல் சமீபத்திய நாவலான ஜோ. டி. குரூசின் 'கொற்கை' வரையிலான எந்தப் படைப்பை எடுத்துக் கொண்டாலும் இது விளங்கும். கவிதையிலும் சிறுகதையிலும் நாம் கேட்பது பல குரல்கள் இணைந்த ஒற்றை முழக்கத்தை. பெரும் கூட்டமாகத் திரண்டு எழுப்பப்படும் கோஷங்களைக் கற்பனை செய்து பாருங்கள். அவற்றின் குவி மையம் ஒன்றுதான். நாவலில் நாம் கேட்பது பல குரல்களின் பல தளங்கள். ஒரு பெரும்
சந்தையில் கேட்பதைப் போல.

ஆக, சிறுகதையுடன் நெருங்கிய உறவு கவிதைக்கு இருப்பதானால்தான், இந்த முகாமுக்கு அழைத்திருக்கிறார்கள் என்ற யூகத்தை நிஜமாக்கிக் கொள்கிறேன்.

@

எப்படி எழுதுவது என்று கற்பிக்க முடியாது என்று எண்ணுகிறேன். பிரபல வெகுஜனப் பத்திரிகையாளரான ரா.கி.ரங்கராஜன், சில ஆண்டுகளுக்கு முன்பு 'எப்படிக் கதை எழுதுவது?' என்று இளைஞர்களுக்கான வகுப்புகளை நடத்தினார். வெகுஜன இதழியலில் பெற்றிருந்த நீண்ட கால அனுபவம் அவரை அதற்குத் தூண்டி விட்டிருந்தது. பத்திரிகையாளனாகப் பணியாற்றிய காலத்தில் அவருடன் தொழில் நிமித்தமான உறவு ஏற்பட்டிருந்தது. அந்த நெருக்கத்தில் அவர் நடத்திய எ.க.எ. வகுப்புகள் மூலம் எத்தனை கதையாளர்கள் உருவானார்கள் என்று ஒருமுறை கேட்டேன். 'எங்கே, சுமாரா எழுதத் தெரிஞ்ச ஒண்ணோ ரெண்டோ பேர் வந்தாங்க. பாக்கியெல்லாம் ஹோப்லெஸ். நான் கடையை மூடிட்டேன்' என்றார்.

எப்படி எழுதுவது என்று கற்பிக்க முடியாது. ஆனால் எப்படி எழுதக் கூடாது என்று ஓரளவுக்குக் கற்றுக் கொடுப்பது
சாத்தியம் என்று நினைக்கிறேன். அதற்கு இது போன்ற முகாம்கள் உதவும். எது நல்ல படைப்பு அல்லது ஏற்கத்தகுந்த படைப்பு என்று பகுத்துணரும் திறனையாவது, முகாம்கள் உருவாக்கக் கூடும்.

அமெரிக்க எழுத்தாளரான ஜே பரினி, முன்னோடி எழுத்தாளர்களின் வாழ்க்கையை வரலாறாகவும் நாவல் வடிவத்திலும் எழுதுவதில் தேர்ந்தவர். கவிஞரான ராபர்ட் ஃப்ராஸ்ட், புனைகதையாளரான ஜான் ஸ்டீன்பெக் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளையும் தால்ஸ்தாயின் இறுதிக் காலத்தை மையமாக வைத்து 'கடைசி ஸ்டேஷன்' என்ற நாவலையும் எழுதியிருப்பவர். ஸ்டீன்பெக்கின் வாழ்க்கை வரலாற்றில் அவர் குறிப்பிடும் சில நிகழ்ச்சிகளை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

ஸ்டீன்பெக்கின் வாழ்க்கை இலட்சியம் ஓர் எழுத்தாளனாவது. அதற்காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் படைப்பெழுத்துப் பள்ளியில் சேர்ந்தார். பாடத் திட்டத்தின் பருவம் முழுமையடைவதற்குள்ளாகவே அங்கிருந்து வெளியேறவும் செய்தார். வெளியீட்டு வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். பிழைப்புக்காகக் கட்டடக் காவல்காரராகவும் சர்வேயரின் உதவியாளராகவும் பழப் பண்ணையில் தினக் கூலியாகவும் வேலை பார்த்தார். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய எழுத்துகளுக்கு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தது. முதல் நாவலான கப் ஆஃப் கோல்ட் ( Cup of Gold) வெளியானது. சுமாரான வசதியுள்ள வாழ்க்கைக்கு இலக்கியம் உதவியது. முதல் நாவல் வெளிவந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகத்தான நாவலான 'தி கிரேப்ஸ் ஆஃப் ராத்' (Grapes of raath) வெளியானது. 1962-ல் நோபெல் இலக்கியப் பரிசும் வழங்கப்பட்டது. அதற்குச் சற்று முன்னர் ஸ்டீன்பெக் தனக்குப் படைப்பெழுத்துப் பயிற்சியளித்த எடித் மிரியலீசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

'ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்தது போலிருக்கிறது, ஸ்டான்ஃபோர்டில் உங்கள் வகுப்புக்கு நான் வந்து
உட்கார்ந்த நாள். அது இப்போதும் தெளிவாக நினைவிலிருக்கிறது. புகையும் மண்டையும் பளபளக்கும் கண்களுமாக
மகத்தான கதைகளை எழுதுவதற்கான ஒற்றை மூலிகையை உங்களிடமிருந்து கைவசப்படுத்திக் கொள்ளும் ஆவேசத்துடன் இருந்தேன்' என்று எழுதினார் ஸ்டீன்பெக். தொடர்ந்து எடித் படைப்பெழுத்தின் முக்கியமான மூன்று பாடங்களாகச் சொன்னவற்றைக் குறிப்பிடுகிறார். முதல் பாடம்: நல்ல கதை எழுதுவதற்கான ஒரே சூத்திரம், நல்ல கதைகளை எழுதுவதுதான். இதைக் கேட்டதும் ஸ்டீன்பெக் சோர்ந்து விடுகிறார். எடித் தொடர்கிறார். 'எழுதி முழுமையாக்கப்பட்ட கதைகளை மட்டுமே திறனாய்வு செய்ய முடியும். மிக உன்னதமானவை என்று மதிக்கக்கூடிய கதைகள் உலகத்தில் எவ்வளவு இருக்கும்? மிகக் குறைவாகவே இருக்கும். அதனாலேயே கதை என்பது சீரிய இலக்கிய வடிவம் என்று புரிந்து கொள்'. இரண்டாவது பாடம்: கதைக்கான அடிப்படை விதி, ஒன்றே ஒன்றுதான். அது செறிவானதாக இருக்கவேண்டும். எழுதுகிறவனுக்குச் சொல்ல ஏதாவது இருக்க வேண்டும். அவனால் புதுமையாக ஏதாவது ஒன்றைக் கொடுக்க முடிய வேண்டும். அவை என்ன? எப்படி? எந்த அளவு? இந்த மூன்று கேள்விகளைச் சார்ந்ததுதான் கதையின் மேன்மை. மூன்றாவது பாடம்: கதை எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். எந்த உத்தியையும் எந்த நடையையும் உபயோகிக்கலாம். ஆனால் அது கதைக்கு கதாசிரியன் எதிர்பார்க்கும் விளைவை உருவாக்க முடிந்தால் மட்டுமே பொருத்தமானது.

இந்த மூன்று பாடங்களிலிருந்தும் தன்னுடையதான நான்காவது செய்முறையை ஸ்டீன்பெக் உருவாக்கிக் கொண்டார்.
கதாசிரியனுக்கு என்ன எழுதப் போகிறோம் என்பதைப் பற்றிய அடிப்படையான தெளிவு இருக்க வேண்டும். கதையின் மையம் எது என்ற தீர்மானம் இருக்க வேண்டும். ஒற்றை வாக்கியத்தில் கதை இதுவென்று சொல்லக் கூடிய திட்பம் வேண்டும். எல்லாவற்றையும் விடக் கதை வாழ்க்கையின் கணத்தைத் திறக்கிற சூட்சுமத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஜான் ஸ்டீன் பெக்கின் இந்தச் செய்முறை இன்றும் செல்லுபடியாகக் கூடியதுதான் என்று நம்புகிறேன்.

@

'சிறுகதையே படைப்புச்சக்தியின் கடைசிக் குழந்தை. படைப்புச்சக்தி அதற்குப் பின் இன்றுவரையிலும் கருத்தரிக்கவில்லை' என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருந்தார். தமிழில் மட்டுமல்ல, ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் எழுத்துக் கலையின் கடைசி அவதாரம் சிறுகதையாகவே இருக்கிறது. தமிழில் கவிதைக்கு அடுத்து, போஷாக்குப் பெற்று புஷ்டியாக வளர்ந்த வாரிசு சிறுகதைதான். இந்தியத் தரத்துக்கு அல்லது உலகத் தரத்துக்கு உயர்த்திப் பேசக் கூடிய கணிசமான கதைகள் நமது நவீன இலக்கியத்தில் இருக்கின்றன என்றே எண்ணுகிறேன். ஒரு கட்டத்தில் தமிழ்ச் சிறுகதை தேக்க நிலையை அடைந்து விட்டதாகக் கருதப்பட்டது. அது ஓரளவுக்கு உண்மை. எல்லாரும் நாவலாசிரியர்களாகப் பதவி உயர்வு பெற முண்டியடித்துக் கொண்டிருந்த வேளையில், தனக்கிழைக்கப்பட்ட புறக்கணிப்புக்கு
எதிராக சிறுகதை தன்னை செழுமைப் படுத்திக்கொண்டது என்று கருதலாம்.

உலக இலக்கியத்திலும் இந்தப் போக்கைக் காண முடிகிறது. ஆங்கிலத்திலோ, இதர ஐரோப்பிய மொழிகளிலோ இன்று மகத்தான நாவல்கள் எழுதப்படுவதில்லை. இன்றைய சிறந்த நாவல்கள் இதுவரை பொருட்படுத்தப்படாமலிருந்த மொழிகளில் எழுதப்படுகின்றன. அல்பேனியமொழியில் எழுதும் இஸ்மாயில் காதரே, துருக்கி மொழியில் எழுதும் ஓரான் பாமுக் ஆகியோரே புதிய நூற்றாண்டின் பெரும் நாவலாசிரியர்களாக மதிக்கப்படுகிறார்கள். இதன் எதிர்மறை விளைவாக ஆங்கில எழுத்துக்களில் சிறுகதைக்கான இடம் விரிவடைந்திருக்கிறது. அமெரிக்காவின் இன்றைய இலக்கிய அடையாளங்களாகக் கருதப்படும் ரேமண்ட் கார்வரும் டோபியாஸ் உல்ஃபும் சிறுகதைகளுக்காகவே பிரபலமடைந்தவர்கள் என்பது தற்செயலானதல்ல.

இந்தச் செம்மையாக்க முகாம் மூலம், புதிய திறன்கள் வெளிப்பட முடியுமானால், நமது சிறுகதை மேலும் செழுமை பெறும். வேறு எப்போதையும் விட எடிட்டிங் அல்லது செம்மையாக்கம் தேவைப்படும் காலம் இது. இலக்கியத்துடன் முன் அறிமுகம் இல்லாத புதியவர்கள் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள் என்பது ஓர் அம்சம். மற்றொரு அம்சம் தொழில் நுட்பம் சார்ந்தது. இன்று எழுத வருகிற பத்தில் நான்கு பேர் கணினியைப் பயன்படுத்துபவர்கள். இணையங்களில் எழுதப்படும் கதைகளை வாசித்தபோது, அவற்றின் நீளமும் செறிவின்மையும் என்னை ஆயாசப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே பத்திரிகைக் கதைகளும் மாறியிருக்கின்றன. இந்த இரு ஊடகங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெறும் கதைகள் வாசகனாக என்னை அச்சுறுத்துகின்றன. ஒன்று - இவை அந்த ஆசிரியராலேயே செம்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது படைப்பூக்கமுள்ள இன்னொருவரால் செப்பனிடப் பட்டிருக்க
வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நவீன எழுத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று, ஒரு பிரதி வாசிப்புக்கு இன்பமளிப்பதாக அமைய வேண்டும் என்பது. வாசிப்பில் இன்பம் என்பது ஒரு படைப்பு கொண்டிருக்கும் புது நோக்கிலிருந்தும் அது வெளிப்படும் பார்வையிலிருந்தும் எழுவது. வாசகனின் விலாவைச் சொறிந்து விடுவதால் வரும் கிளர்ச்சியல்ல. வாசிப்பனுபவமும் புத்துணர்வும் தரும் சிறுகதைகளைப் படைப்பவர்களுக்கு அவர்களது படைப்புச் செயல்பாட்டின் தூண்டுதலாக இந்தச் செம்மையாக்க முகாம் அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

- சுகுமாரன்

(நன்றி: அந்திமழை.காம்)

10 அக்டோபர் 2010

பாவனை

வந்து விழுந்த கேள்விகளுக்கு
விடையளித்தபடி
வண்டியோட்டிக் கொண்டிருந்தேன்
…இத்தனை தூரம் போய்வர
இவ்வளவு பெட்ரோல் போதுமா?
ஏன் இந்த அவசரம்
இந்த நடு இரவிலும்?...
இன்னும் பலவற்றிற்கு சரளமாய்
பதில் சொல்லி வந்தவன்
சட்டென்று சுதாரித்து
பக்கத்தில் பார்த்தேன்
இரு கைகளையும் நீட்டி
தானும் வண்டியோட்டும்
பாவனையுடன் பக்கத்து
இருக்கையிலிருந்த மகனை.

O

09 அக்டோபர் 2010

அம்மா மாதிரி - நவீன விருட்சம் இதழில் ஒரு சிறுகதை

சமீபத்தில் வெளியான நவீன விருட்சம் (87-88), செப்டம்பர் 2010 இதழில் வெளியான என் சிறுகதை.





(நன்றி: அழகிய சிங்கர், நவீன விருட்சம்)

07 அக்டோபர் 2010

நவீன விருட்சத்தில் ஒரு அறிவிப்பு (மூன்றாவது கவிதைத் தொகுதி)

நவீன விருட்சத்தில் ஒரு அறிவிப்பு (மூன்றாவது கவிதைத் தொகுதி)

http://navinavirutcham.blogspot.com/2010/10/blog-post_05.html

நன்றி: அழகிய சிங்கர், நவீன விருட்சம்.

05 அக்டோபர் 2010

'கல்கி' யில் மூன்றாவது கவிதை

இந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)

02 அக்டோபர் 2010

மூன்றாவது கவிதைத் தொகுதி

அந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது
மூன்றாவது கவிதைத் தொகுதி "ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்" அகநாழிகை
பதிப்பக வெளியீடாக, கல்யாண்ஜி அவர்களின் முன்னுரையோடு வெளிவந்துள்ளது.



ருசியுடன் கனிந்திருக்கும் கவிதைகள் - கல்யாண்ஜி (அறிமுக உரையின் ஒரு பகுதி)

செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள், பக்கத்திலிருக்கிற ஒருவரிடம், உடனுக்குடன் பேசுகிற அன்றாடத்தின் தொனியுடன் அமைந்து விடுகின்றன. நாம் அன்றாடங்களின் தொனியை வாழ்விலிருந்து உதறிவிட முடியாது.

ஆனால் கவிதையில், அந்த உதறுதலுக்கான, ஈரம் காய்தலுக்கான, வெயிலுக்கும் வெதுவெதுப்புக்குமான அவசியம் இருக்கிறது. கிளையிலைத் தடுப்புக்களைத் தாண்டித் துளைத்து மீறும் வெளிச்ச ரகசியம், எங்கிருந்தோ கேட்கும் பரிச்சயமற்ற குரலில் முடிச்சவிழும் சொல்லின் புதிர், நாம் தாண்டிப் போகிற பேருந்து நிறுத்தத்தில் தலை கவிழ்ந்து உட்கார்ந்து அழும் நடுத்தர வயதுப் பெண், உடன் வாழ்ந்து மறைந்த ஒருவனின் உடலை ஆவேசமான தழலுடன் உள்ளிழுக்கும் மின் தகன மேடையின் கடைசி இரும்புத் தடதடப்பு என்று இப்படி சொல்லிக் கொண்டே போக முடிகிறதான அவசியங்களின் வெளிப்படையான மற்றும் மறைத்து வைக்கப்படும் அடுக்குகள் தேவைப் படுகின்றன.

நாம் புழங்குகிற மொழியை அனுபவங்களின் தலைகீழ் விதையாக அவை ஊன்றுகின்றன. நாமறியாச் சொல்லின் இலைகளுடன் அவை முளைத்து, நாமறியாப் பொருளின் வாசனையுடன் அவை பூத்து, நாமறியா எழுத்தின் ருசியுடன் அவை கனிகின்றன.செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகளையும்,கவிதை சார் கட்டுரைகளையும் பின் தொடர்ந்து வருகிறார் என்பதை, அவர் விட்டுச் செல்லும் சுவடுகள் தடயப்படுத்துகின்றன.

- கல்யாண்ஜி

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - செல்வராஜ் ஜெகதீசன்
(கவிதைகள்)
பக்.64 விலை ரூ.50

வெளியீடு:

அகநாழிகை பதிப்பகம்
33 மண்டபம் தெரு
மதுராந்தகம் - 603306.

பேச : 999 454 1010

கிடைக்கும் புத்தக கடைகள்:

1) நியூ புக்லேண்ட்ஸ், தி.நகர், சென்னை.
2) டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்,சென்னை.
3) மதுரை : பாரதி புக் ஹவுஸ் (பெரியார் பேருந்து நிலைய உட்புறம்)

26 செப்டம்பர் 2010

முகம் நக

அழைத்துப் பேசும் தூரத்தில் இருந்தும்
நண்பனென்று உறுதி கேட்டு
முகப் புத்தகத்தில்
ஈமெயில் அனுப்பியிருந்தான்
நண்பனொருவன்.

அப்படியே அதை அனுப்பி வைத்தேன்
அடுத்தொரு நண்பனுக்கு
அவனும் நானும் சந்திப்பது
அவ்வப்போது என்றபோதும்.

o












நன்றி : திண்ணை.காம்

20 செப்டம்பர் 2010

இதுவும் கடந்து போகும்




சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்க்
கடந்து போனதில்லை.

o

(20-09-2010 உயிரோசையில் வெளியானது)

14 செப்டம்பர் 2010

கவிதையின் ரசவாதம் - வா. மணிகண்டன் ("அகநாழிகை"யில் "இன்னபிறவும்" மதிப்புரை

எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு "இன்னபிறவும்" குறித்து, அகநாழிகை (செப்டம்பர்-நவம்பர் 2010) இதழில் வெளியான வா. மணிகண்டனின் மதிப்புரை.






(நன்றி: வா. மணிகண்டன் & அகநாழிகை பொன்.வாசுதேவன்)

12 செப்டம்பர் 2010

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்...!

காலை வணக்கத்தில்
தனம் சங்கீதா
முற்பகல் பேட்டியொன்றில்
கேரளத்துப் பாவ்னா
பிற்பகல் பேட்டியில்
பேரிளம்பெண் நமீதா
மாலைத் திரைப்படத்தில்
மறுபடியும் நமீதா
கும்கும் குமரிகளின்
குளுகுளு பேட்டிகளும்
குத்தாட்டப் பாட்டுக்களும்
பிரம்மச்சாரி பிள்ளையார்க்கு
பெருங்குஷிதான்! பேரின்பம்தான்!

o
(நன்றி: நவீன விருட்சம்)

07 செப்டம்பர் 2010

நீர்க்கோல வாழ்வில்

நிறைய கேள்விகள்
இருந்தன அவனிடம்
பதிலில்லா அல்லது
பதில் வேண்டாக் கேள்விகள்
‘நல்லவனுக்கு கிடைக்கும் எல்லாமும்
கெட்டவனுக்கும் கிடைப்பதெப்படி?
சட்டம் ஏன் சரியான ஆளையும்
சகல விதிகளை மீறுபவனையும்
சரிநிகர் சமானமாய் வைத்துப் பேசுகிறது?’
நாளது வரையிலான சிரமங்களை
பார்க்கும் எவரிடமும்
அப்படியே இறக்கிவிடும்
எத்தனிப்புடன்
பேசிக்கொண்டே இருந்தான் அவன்.
சற்று முன் நடந்த
சாலை விபத்தொன்றில்
பைக்கின் பின் அமர்த்தி
கூட்டிப் போன தன் தந்தை
லாரியொன்றின் பின் சக்கரத்தில்
தலை நசுங்கி செத்துப்போனதை
கண்ணெதிரே கண்ட
மகனைப் பற்றிய
தகவல்களோடு வந்து சேர்ந்த
இன்னொருவனின் வருகை
எல்லாக் கேள்விகளையும்
கலைத்துப் போடும் வரை.

o

விடுமுறை வேண்டும் உடல் – சமயவேல் (படித்ததில் பிடித்தது)

விடுமுறை வேண்டும் உடல் – சமயவேல்


எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு
தன்னைப் பற்றியே
பெரும் கவலை கொள்கிற உடல்
முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு
நச்சரிக்கிறது
பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என
எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது
சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும்
முசுமுசுக்கைச் சாறுண்ணி போல் அல்லது
வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை
என எப்படியும் இருப்பேன் என்கிறது
விடுமுறை விடுமுறை எனும்
யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது
எதுவும் செய்யாமல் அக்கடா என்று
சும்மா கிடக்கும் ஆனந்தம்
பற்றிய அனேக நிறமிகளை
மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது
மிகுதியும் கனவு காணும் விருப்பத்துடன்
வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது

எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம்
கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன்.

(தமிழ் வீடு, நவீன இலக்கியக் காலண்டிதழ் - கவிதை சிறப்பிதழ்)

31 ஆகஸ்ட் 2010

'கல்கி' யில் இரண்டாவது கவிதை

இந்த வார கல்கி (05-09-2010) இதழில் வெளியான கவிதை.


28 ஆகஸ்ட் 2010

இரு கவிதைகள் (மீள்பதிவு)

1) அந்தரங்கம்

இருவர் பேசிக்கொண்டிருந்த
இடத்தருகே
எதேச்சையாய் போய் நின்றேன்.
அப்படியே பேச்சு நின்று
அமல்படுத்தப்பட்டது அமைதி.

இன்னொருவனுக்கு
அனுமதியில்லாத
இருவரின் அந்தரங்கத்தின்
இடையே புகுந்ததறிந்து
வெறுமே சிரித்து வைத்தேன்
வேறெதுவும் தோன்றாமல்.

(“அந்தரங்கம்” தொகுப்பிலிருந்து)

o

2) இன்னபிறவும்

அநேகமாய்
முடிவதில்லை.

அழகைப் பற்றிய
அவதானிப்பை

அப்படியே
கைமாற்றிவிட.

அதிகபட்சம்
முடிவதெல்லாம்

அதைப்போல
இது என்பதாய்

இன்னொன்றை
இணையாய்ச் சொல்லி

இப்படித்தான்
இருக்கிறது

இன்னபிறவும்
இவ்வாழ்வில்.

(“இன்னபிறவும்” தொகுப்பிலிருந்து)

o

25 ஆகஸ்ட் 2010

கல்கியில் வெளியான என் கவிதை

இந்த வார கல்கி (29-08-2010) வார இதழில் வெளியான என் கவிதை ஒன்று.

23 ஆகஸ்ட் 2010

மொழிதலில் புதுமை - சுகுமாரன் முன்னுரை



இன்னபிறவும்” என்ற தொகுப்புக்கு எழுதத் திட்டமிட்டிருந்த முன்னுரை இதுவல்ல. நண்பர் செல்வராஜ் ஜெகதீசன் தனது இந்த இரண்டாவது தொகுப்புக்கு எழுதக் கேட்டிருந்தது, நவீனத் தமிழ்க் கவிதைகள் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பை. அதற்கான நீண்ட கால அவகாசத்தையும் அளித்திருந்தார். எனினும் அது சாத்தியமாகவில்லை. தொடர்ந்த இடப் பெயர்ச்சிகளும் அவற்றின் மூலம் உண்டான சிக்கல்களும் தடையாக அமைந்தன.

நவீனத் தமிழ்க் கவிதை ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டின் வரலாற்றை உரித்தாக்கிக் கொண்டிருக்கிறது. பாரதியின் வசன கவிதை முயற்சிகளே அதன் தொடக்கம். இறுக்கமான செய்யுள் நடையில் இயன்று கொண்டிருந்த கவிதையை மெல்ல மெல்லப் புதுமையும் எளிமையுமான வடிவத்தை நோக்கி நகர்த்த முயன்றார் பாரதி. காலத்தின் உணர்வு மாற்றத்தைப் புதிய மொழியில் விளங்கிக் கொள்ள யத்தனித்தார். இந்த எத்தனிப்புதான் சில ஆண்டுகளுக்குப் பின்னர் புதுக்கவிதை என்ற வடிவத்துக்கு ஆதாரமாக இருந்தது. புதுக்கவிதையின் முதல் உதாரணமான ந.பிச்சமூர்த்தியின் "காதல்" (1934) கவிதை இதன் முளை. இதைத் தொடர்ந்து எழுந்த புதிய முளைகள்தாம் நவீன கவிதையில் பெருநிலமாக இன்று விரிந்திருக்கின்றன. செல்வராஜ் ஜெகதீசன் இந்த வரலாற்றுத் தொடர்ச்சியின் ஓர் இழை. இந்த இழை வலுவானதா, மெல்லியதா என்பது அதன் அழகியல் பயன்பாட்டையொட்டித் தீர்மானிக்கப்படும் என்று தோன்றுகிறது.

பிச்சமூர்த்தி முதல் ஜெகதீசன் வரையிலான எழுபத்தைந்து ஆண்டுகளில் நவீன கவிதை வெவ்வேறு கோலங்கள் புனைந்திருக்கிறது. வெவ்வேறு கருத்தாங்கங்களின் வாகனமாகச் செயல்பட்டிருக்கிறது. வெவ்வேறு அணிகளில் பயின்றிருக்கிறது. வெவ்வேறு நிலக்காட்சிகளை முன்வைத்திருக்கிறது. காலத்தின் உடனிகழ்வாக வாழ்வின் கணங்களைப் பதிவு செய்ய முனைந்திருக்கிறது. இவ்வளவு மாற்றங்களுக்குப் பின்னர் இன்று கவிதை அதன் நவீனம் பழமையாகக் கூடிய நிலையையும் அடைந்திருக்கிறது.
ஓர் இலக்கிய வடிவத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த வளர்ச்சியையும் சிதைவையும் சுட்டிக்காட்டுவதாக அமையும் ஒரு வரலாற்றை எழுதும் திராணி எனக்கில்லை என்று கருதுகிறேன். நவீனக் கவிதை மீதான என்னுடைய பார்வை ஒரு கவிதை பயிற்சியாளனின் பார்வை. வரலாற்றிலிருந்து விடுபட்டவை மீதுதான் ஒரு கவிஞனின் அக்கறை குவியும். அதன் இருப்புகளைப் பற்றியது விமர்சகனின் பார்வை. நவீன கவிதையின் துரதிருஷ்டம், அப்படியான விமர்சனங்கள் உருவாகவே இல்லை. இனி உருவாகலாம் என்பது ஒரு நம்பிக்கை; ஒரு கனவு.

இதுவரை எழுதப்பட்டு வந்த புதுக் கவிதைகளிலிருந்து இன்று எழுதப்படும் நவீனக் கவிதைகள் மாறுபடுகின்றன. உரைநடையின் அதிக பட்ச சாத்தியங்களை அவை கொண்டிருக்கின்றன. உரைநடை எங்கே கவிதைக்கான திறப்பைக் கண்டடைகிறது என்பது பற்றிய எச்சரிக்கையைப் பெரும்பாலான கவிதைகள் நழுவ விடுகின்றன. இன்றைய கவிதை படிமங்களை இயல்பாகத் துறக்க விரும்புகிறது. புதுக்கவிதை படிமங்கள் வாயிலாக காலத்துடன் நடத்திய பரிமாற்றத்தை நவீன கவிதை தானே படிமமாகி நிகழ்த்திக் கொள்ள முனைகிறது. விரிவான பொருளில் எல்லாக் காலத்திலும் கவிதை படிமமாக்கலையே முதன்மையாகச் செய்து வருகிறது. கவிதை நிகழ்வைப் படிமமாக்குகிறது. புனைகதை நிகழ்வை வரலாறாக்குகிறது. நவீன கவிதை இந்த நுட்பமான வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றே பெரும்பான்மைக் கவிதைகளை வாசிக்கும்போது தோன்றுகிறது. அதனாலேயே கவிதையாகத் திறக்காத கூற்றுகள் கவிதையாகத் தென்படுகின்றன.

ஜெகதீசனின் இரண்டு கவிதைகளை – “கொஞ்சமும், என்றாலும்” - முன்வைத்து இதை விளங்கச் செய்யலாம். கொஞ்சமும் கவிதையில் ஒரு கவிதைப் புத்தகத்தை புத்தகக் கடைக்காரர் தேநீர் தம்பளருக்கு ஸ்டாண்டாகப் பயன்படுத்துவதிலுள்ள முரண் பேசப்படுகிறது. இது கவிஞனின் கண்ணோட்டத்தில் ஆற்றாமையை ஏற்படுத்துகிறது. ஆனால்,கவிஞனல்லாத ஒருவருக்கு இது எந்தப் பிரத்தியேக உணர்வையும் தருவதில்லை. படைப்பின் அடிப்படை இயல்பான தன்னைப் பிறனாக்குவது, பிறனைத் தன்னாக்குவதுமான பார்வை, இந்த வரிகளில் திரள்வதில்லை. அதே சமயம் ''என்றாலும்'' கவிதையில் இந்தப் பார்வை வெளிப்படுகிறது. வாசிக்கப் புத்தகங்கள், நீண்ட பொழுது, கவிதைக்குத் தூண்டும் காட்சிகள் எல்லாமிருந்தும் விமானப் பயணம் இனிமையானதாக இல்லை. காரணம் மரண பயம். கவிஞருக்கு உண்டாகும் இந்த உணர்வு எல்லாருக்குமானது. இந்தத் திறப்பைத் தொடும்போது கூற்று கவிதையாகிறது.

கவிதை, அது என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் சில இயல்புகளைக் கொண்டிருக்கிறது. இயல்புகள் என்பதை விடத் தேவைகள் என்பது பொருத்தமானது. வடிவத்தில் செறிவு, மொழிதலில் புதுமை, வாழ்வு சார்ந்த பார்வை - இவை மூன்றையும் கவிதை பிடிவாதமாகக் கோருகிறது. ஜெகதீசனிடம் வடிவம் பற்றிய பிரக்ஜை இருக்கிறது. சமயங்களில் அது அவர் அண்மையில் வாசித்த கவிதையின் சாயலில் வெளிப்பட்டு விடுகிறது. ''இன்ன பிறவும்'' ''எதைச் சொல்வீர்கள்" கவிதைகளை விக்ரமாதித்யனை வாசித்த சூட்டில் யோசித்திருக்கலாம். மொழிதலில் இயல்பான புதுமையை ஜெகதீசன் கையாள்கிறார். 'பூனைகள்' கவிதை ஓர் உதாரணம். இரு தொகுப்புகளிலுமாக ஜெகதீசன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். எனினும் அவரது பார்வை என்னவென்பது பிடிபடாத ரகசியம். தன்னை சூழ உள்ள நிகழ்வின் கணங்களை அப்படியே வாசகனிடம் பகிர்ந்து கொள்ளுகிறார். இதுமட்டும் போதுமானதா என்பதை அவர்தான் தீர்மானிக்கவும் முடியும்.

இவற்றையெல்லாம் சொல்லும்போதே ஜெகதீசனிடம் நவீனக் கவிதைக்குரிய கூறுகளையும் காண்கிறேன். பெரும்பாலும் படிமங்களை துறந்த ஒரு திறந்த மொழி, காட்சிகளை சொல்லுக்குள் மாற்றும் விதம், அனுபவங்களைச் சார்ந்து படைப்பாக்கத்தில் ஈடுபடும் முனைப்பு, எண்ணிக்கைப் பெருக்கம் இவையெல்லாம் அவரைப் பொருட்படுத்திப் பேசத் தூண்டுபவை. இன்றைய அவரது கவிதைகளை பின்னுக்குத் தள்ளும் கவிதைகள் அவரிடம் இருக்கின்றன என்று நம்பச் செய்பவை. அதற்கான ஒருமுகப்பட்ட கவிதைமனம் அவரிடம் இருக்கிறது. இல்லையா ஜெகதீசன்?

o

13 ஆகஸ்ட் 2010

விக்ரமாதித்யன் - இலக்கில்லாத பயணம் (படித்ததில் பிடித்தது)

விக்ரமாதித்யன் (விளக்கு விருது விழாவிற்காக தயாரிக்கப்பட்டு படிக்கப்படாத கட்டுரை) இலக்கில்லாத பயணம் - வித்யாஷ‌ங்கர்



http://saamakodai.blogspot.com/2010/07/blog-post_2839.html

ஒரு மரத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பார்க்கிறோம். அதன் உச்சியில் நின்று பார்ப்பவருக்கு அதன் விஸ்தீரணமும் உயரமும் பெருங்கிளைகளும் பூக்களும், கனிகளும் வியப்பாக இருக்கும். அதன் நிழலிருந்து பார்ப்பவருக்கு வேறாகவும், அதன் கனியை ருசித்தவருக்கு வேறாகவும் மரம் தோற்றமளிக்கும். விக்ரமாதித்யன் என்ற பெருமரத்தின் நிழலை அனுபவித்திருக்கிறேன். பூவை ரசித்திருக்கிறேன். கனியை ருசித்திருக்கிறேன் கோபத்தில் கிளைகளை வெட்டி ஏறிந்து காயப்படுத்தி இருக்கிறேன்

ஆனாலும் அந்த பெருமரத்தை பற்றிப்படர்ந்து வாழும் கொடியாகவே என்னை உணர்கிறேன். அந்தப் பெருமரத்தைப் பற்றிப் படர்ந்து வியந்து தழுவியிருக்கிறேன். அவ்வப்போது பெருங்காற்றில் புயலில் விழுந்து விடாமல் காத்தும், பூக்கள் உதிர்ந்து விடாமல் கனிகள் களவாடப்படாமலும் காத்துமிருக்கிறேன். அதனாலேயே பெருமரத்தை விலகி நின்று பார்க்க முடியாமலும் போயிருக்கிறேன்.

கவிஞனின் கவிதைகள் குறித்து பலரும் பேசினாலும் கவிஞனின் வாழ்வியலின் பின்ணணியை வெகு நெருக்கமாக தெரிந்தவன் என்ற முறையில் உங்களோடு சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

சென்னைக்கு 1979ல் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கொடுத்த அறிமுக கடித்தோடு வந்து சேர்ந்த இடம் உலகின் முதன் முதலாக சமஸ்கிருதத்தில் படமெடுத்த ஜி.வி. ஐயரின் இல்லம். அவரது வீட்டின் அவுட்ஹவுசில் கல்லூரி தோழர் தேவதாசோடு வாசம். வந்து சேர்ந்த அன்றே, பூமணி மூலம் சோவியத் கலாசார அரங்கில் போயிருந்தபோது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நூற்றாண்டு விழாவில் வண்ண நிலவனோடு சேர்த்து, "நீங்கதானே நம்பியண்ணாச்சி" என்று கேட்டு அறிமுகமானேன்.

விக்ரமாதித்யன் குறித்த முன் படிவத்தை கௌரிஷங்கரும், தா. மணியும் ஏற்படுத்தியிருந்தனர். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நெல்லையில் அவர் தொடர முடியாது விட்டுவிட்ட மார்க்கெட்டிங் ரிசர்ச் பணியை தொடர்ந்தபடி நான் சென்னை வந்தேன். சில மாதங்களில் பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி நவகவிஞர்கள் வரிசையில் விக்ரமாதித்யன் கவிதை தொகுப்பும் வெளியிட கேட்கப்பட்டது.

தி.நகரில் இருந்த சாரித்தெரு கார்க்கி நூலக மொட்டை மாடியில் சிகரெட் பிடித்தபடி சமயவேல் தான் "ஆகாசம் நீலநிறம்" என்ற தலைப்பு தான் சரியாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். அப்போது நானும் உடனிருந்தேன்.

நானும் அவருமாக பல பத்திரிகைகளில் ப்ரிலேன்சராக பணிபுரிந்தோம். பல்வேறு நபர்களை பிரமுகர்களை குறிப்பாக தேவநேய பாவணர், பெருஞ்சித்திரனார், மே.வி. வேணு கோபால பிள்ளை, அப்பாதுரையார் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றோம். திடீரென ஒருமுறை மூத்த பத்திரிகையாளர் மறைந்த பத்திரிகையாளர் கார்க்கியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவர் தான் தராசு என்ற பத்திரிகை கொண்டு வருவது குறித்து பரிந்துரைத்தார். அவர்கள் நடத்திய திரைச்சுவைக்கு விக்ரமாதித்யனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியான கவிதை நூலை மூர்மார்க்கெட்டில் விலைக்கு போட்டு ரூபாய் 75 பெற்று இளையராஜா சிறப்பிதழ் சிறப்பாகச் செய்து கொடுத்தோம். அதில் எங்களுக்கு கிடைத்தது வெறும் 275 கூட இருக்காது. ஆனால் நாங்கள் சந்தித்த சினிமாக்காரர்களிடம் ஆளுக்கு நூறு வாங்கியிருந்தால் கூட எங்களுக்கு ஆயிரம் கூடக் கிடைத்திருக்கும். அந்த சிறப்பிதழை அந்த இசையரசர் வலது கையால் வாங்கி இடது புறம் இருந்த தனது உதவியாளரிடம் புரட்டிக்கூட பார்க்காமல் கொடுத்துவிட்டார் என்பது தான் பெருத்த சோகம்.

2 ரூபாயோடு நண்பர் ஒருவரை உதவி கேட்கப் போய் அண்ணாநகரில் அவர் இல்லாததால் நடந்தே தி.நகருக்கு திரும்பினோம். ஒரு புது வருடப்பிறப்பன்று ருத்ரய்யாவின் அலுவலகத்திலிருந்து தி.நகருக்கு மழையில் நனைந்தபடி நடந்தே திரும்பியிருக்கிறோம். இன்னொரு முறை வண்ணதாசன் சகோதரர் வீட்டிலிருந்து குரோம்பேட்டை அஸ்தினாபுரம் என்று நினைவு திரும்ப நடத்தே வந்திருக்கிறோம். இந்த நேரங்களில் காசு இல்லை என்றது ஒருபுறம்மொன்றலும் அதிகமாகப் பேசியது, இலக்கியம் குறித்து தான். நல்ல நூல்களை படிப்பதை வேள்வி போல எனக்குள் ஏற்படுத்தியவர், விக்ரமாதித்யன்.

நேஷனல் புக்ட்ரஸ்ட் புத்தகங்களை (நீலகண்ட பறவையைத் தேடி, அக்னிநதி, சோரட் உனது பெருகும் வெள்ளம், சுந்தரனும் சுந்தரிமார்களும் பாத்துமாவின் ஆட்டுக்குட்டி, காலம், சமகால மலையாள சிறுகதைகள் ஒரு லட்சிய இந்து ஹோட்டல், ஒரு கங்கை பருந்தின் சிறகுகள், கவிஞன்) இப்படி தேடித்தேடி படித்தோம். பல மாநில சூழலையும் அதிலிருந்து உள்வாங்கினோம். கூடுதலாக இந்தியாவில் ஒடும் எல்லா நதியிலும் ஆதிசங்கரா படப்பிடிப்புக்கு சென்ற போது குளித்த அனுபவம் எனக்குண்டு.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது கவிதைகள் இடம் பெற்ற புத்தகத்தை பழைய புத்தக கடையில் போட்டு பணம் பெற்று செய்தி சேகரிக்க செலவழித்திருக்கிறோம். பால குமாரனிடம் அவர் டிக்டேச் செய்ய, நான் எழுத தினமும் அப்போதே 35 ரூபாய் கொடுப்பார். அதை வாங்கி வந்து இருவரும் சாப்பிட்டிருக்கிறோம். இரண்டு டீயும் இரண்டு சிகரெட்டும் கடன் வாங்கி சிகரெட் அட்டையில் எழுதப்பட்ட ஐடியாக்கள் தான் பின்னால் தராசு பார்மெட்டாக மாறியது.

வாழ்வதற்கான போராட்டத்திலும், வாழ்வை கவிதையாக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர் விக்ரமாதித்யன்! அவர் குடித்த ஒரு சொட்டு மதுபானம் கூட அவருக்கு கவிதை தராமல் வீணாகியதில்லை என்பதை சாட்சியாக இருந்து பார்த்திருக்கிறேன்.

பத்திரிகை அலுவலகங்களின் விவாதங்களில் என்னை முன் நிறுத்துவதை விக்ரமாதித்யன் தொடர்ந்து செய்து வந்தார். இப்படித்தான் நான் நக்கீரன் ஆசிரியர் ஆனதும் கூட. (பத்திரிகையே வேண்டாம் என்று அன்று நான் முடிவெடுத்திருந்தபோது நானே ஆசிரியர் ஆனது வேறொரு தனியான கதை).

நாங்கள் பணியாற்றிய பத்திரிகை நிறுவனங்களில் என்னை முன்னிலைப்படுத்துவதை அவர் ஒரு கடமையாகவே எடுத்துக் கொண்டு செய்தார். இதனால் பலர் விமர்சனத்திற்கும் ஆளானார். பத்திரிகைகளுக்காக நாங்கள் இருவருமே ரீரைட் செய்ததை அல்லது ரிப்பேர் செய்ததை வைத்து இருவரையும் இறந்த பின் கொளுத்தலாம். அந்த அளவுக்கு எழுதிவிட்டோம்.

வாழ்க்கையை கவிதையாக்குவதற்காக வாழ்க்கையை தொலைத்துவிட்டு கவிஞனாக நிற்கிறார்! கவிதைகள் அவரது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது. எனக்குத் தெரிந்து யாரையும் அவர் எதிரியாக கருதியது கூடக் கிடையாது. கசப்பு இனிப்பு கருப்பு வெளுப்பென்ற எந்த விதமான தீர்க்கமான முடிவும், எது குறித்தும் அவருக்கு கிடையாது.
எல்லாமே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். சமூகம் அப்படித்தானே இருக்கிறது என்ற மனோபாவமுடையவர்.

என்னளவில் சிறுசிறு பொருளியல் சார்ந்த இலக்குகளை நிர்ணயித்து வெற்றிகண்டு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கண்டு கொண்டேயிருக்கிறேன். இலக்குகளோடு பயணித்தாலும் இறுதியில் கிடைப்பது வெறுமையே! இலக்கின்றி பயணித்தாலும் இறுதியில் கிடைப்பது வெறுமையே. பயணம் மட்டுமே பயணிக்கு சந்தோஷம், சாகசம், துக்கம் பதிவேடு. இத்தனைகால இருவரது பயண முடிவும் தலைகீழ் விகிதங்கள் ஆனாலும் இருவருக்குமான விடை பூஜ்யம் தான்!

வண்ண நிலவன் வீட்டிற்கு இருவரும் பல இரவு குடித்து விட்டுச் சென்று சாப்பிட்டுவிட்டு, காசு வாங்கி வந்ததுண்டு. சில நேரம் கவிஞர் நா. காமராசன் வீட்டிற்கும் அவர் அழைத்துச் செல்வதுண்டு. அப்படி குடித்த நேரங்களில் அவர் சொல்லச் சொல்ல நான் எழுதிய கவிதைகள் பல உண்டு. அப்படி அவர் சொல்லும் போதே சில திராவிடத்தனமான வரிகளை வேண்டாமென்று விலக்கிவிடுவேன். இப்படி பல வரிகளை நீக்கி நீக்கியே அவரது கவிதைகளை எடிட் செய்யும் நுட்பம் பெற்றேன். இப்படித்தான் அவரது பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை எடிட் செய்தேன். சில நேரங்களில் விமலாதித்த மாமல்லன் உடனிருந்திருந்தான். அவரது ஒட்டு மொத்த தொகுப்பை எடிட் செய்ய கிட்டத்தட்ட 3 மாதம் எடுத்துக் கொண்டேன். அப்போது நான் எழுதிய "பேசாமல் ஒரு நாளும்" என்ற தொகுப்பு அச்சு அசலான விக்ரமாதித்யன் பிராண்டாக இருந்தது, அதனாலேயே இரண்டு குறு நாவல்கள் எழுதும் பணியில் என்னைத் திணித்துக் கொண்டு முழுமூச்சாக அவரது நடையிலிருந்து விலகினேன்.

இருவரும் பத்திரிகையாளர்களாக பயணத்தாலும் அவர் திடீர் திடீரென அதிலிருந்து விலகி விட்டு விடுதலையாகிவிடுவார். அவர் தொடர்ந்தாற் போல ஒராண்டுக்கு மேல் எந்த நிறுவனத்திலும் பணியாற்றியதாக எனது நினைவில் இல்லை. இருவரும் போதையில் சண்டையிட்டு கட்டிப்புரண்டாலும் மறுநாள் காலையிலேயே இருவரும் ராசியாகிவிடுவது, பல நண்பர்களிடையே இன்றும் வியப்பாகப் பேசப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள இலக்கிய நண்பர்கள் அவரைப் பார்க்கும் போது என்னை விசாரிப்பதும், என்னைப் பார்த்தால் அவரை விசாரிப்பதும் இன்று வரை தொடர்கிறது. தஞ்சைக்கு நண்பர் உமாசந்திரன் திருமணத்திற்கு நான் சென்றேன். நக்கீரனில் ஆசிரியராக இருந்த நேரம் அந்த வாரம் உதயம் பத்திரிகையில் ல.சா.ரா. அவரது அம்மா பற்றி எழுதியிருந்தார். மது குடிக்கும் போது நான் அதைப்பற்றி விக்ரமாதித்யனோடு பேசினேன், "பாருங்கள்! அவங்கம்மாவ பசு மாதிரி எழுதியிருக்கார். எங்கம்மா வோடதான் நான் குடிக்கவே பழகினேன்" என்று சொன்னேன். "தம்பி, இதைத்தான் நீங்க எழுதனும் கவிதையா நல்லா வரும்" என்று பேசியபடி அவரும் என்னோடு உடுத்திய உடையோடு ரயிலேறிவிட்டார். அப்போது தம்பி நக்கீரன் காமராஜீம் உடனிருந்தார். டாய்லட் அருகே அமர்ந்து குடித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம். இப்படித்தான் எனது முதல் தொகுதி வரக் காரணமானது. அது தான் சந்நதம்! அவர் சொன்னது போலவே இன்றும் பலரும் எனது அம்மா கவிதையைக் குறிப்பிட்டே என்னிடம் பேசுகிறார்கள்.

எனது கவிதைகளால் அல்லாமல், விக்ரமாதித்யன் அவரது கவிதை நூல்கள், கட்டுரைகளில் அடிக்கடி என் பெயரை குறிப்பிட்டதால் இலக்கிய வட்டாரத்தில் எனக்கு பெரும் பரிச்சயம் ஏற்பட்டது. விக்ரமாதித்யன் எதுவும் பெரிதாக நடந்துவிடாது என்று இலக்கற்று பயணித்து சில நல்ல கவிதைகளை சேகரித்து தந்திருப்பவர். இருவருக்கும் பயணம் மட்டுமே பொது.
அவருக்கு இலக்கில்லாமல், எனக்கு சிறுசிறு இலக்குகளோடு. பயணத்தில் முடிவில் இருவரும் கண்டடைந்தது என்னவோ வெறுமை தான். பயணம் மட்டுமே பயணிக்கு சந்தோஷம், சாகசம், துக்கம் பதிவேடு. இத்தனை கால இருவரது பயண முடிவும் தலைகீழ் விகிதங்கள், ஆனாலும் இருவருக்குமான விடை பூஜ்யம் தான்!

o