30 ஜூன் 2010

சங்கத்தமிழ் அத்தனையும் தா

சங்கத்தமிழ் அத்தனையும் தாவென்று
சத்தியமாய் கேட்கவில்லை நண்பர்களே.

பாலும் தெளிதேனும் தந்து நம்
பைந்தமிழ் பாட்டி கேட்ட
தங்கத்தமிழில் நிகழ்த்துவோம்
தவறாமல் நம் பேச்சுக்களை.

குழலினிமை யாழினிமை
கொண்ட நம் குருத்துக்கள்
மூத்த குடி தமிழ்ப் பாட்டும்
முறையாகப் பாடச் செய்வோம்.

வெறும் வாயை மெல்வதற்கும்
வேறு மொழி வேண்டாமினி.

எப்போதும் தன் மொழியில்
எவ்வினமும் உரையாட
நாட்கடந்த சந்திப்பிலும்
நாம் மட்டும் இன்றுவரை
நளினமாக ஆங்கிலத்தில்.

அடுத்தெந்த மொழியையுமே
அறிந்து கொள்ளல் நலமே
ஆங்காங்கே பொருளீட்ட
அடுத்தவருடன் தொடர்பு கொள்ள
அகம் மகிழ்தல் என்றுமே நம்
அன்னைத் தமிழ்ப் பேச்சிலல்லவா?

சங்கத்தமிழ் அத்தனையும் தாவென்று
சத்தியமாய் கேட்கவில்லை நண்பர்களே.

0

24 ஜூன் 2010

நிராகரிப்பு

நிராகரிப்பின் காரணங்கள்
நேரிடையாக சொல்லப்படுவதில்லை
அல்லது
சொல்லப்படாமலே புரிந்து கொள்ளப்படுகின்றன.

நிராகரிப்பை
நேர்கொள்ளும் தருணங்களில்

அமல்படுத்தப்படும் நிராகரிப்பை
அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்

(ஏற்றுக்கொள்ளப்படும் நிராகரிப்பில்
உண்டாகக்கூடிய இசை கேடுகள்
அத்தனையும்
உடனடியாக நீர்த்துப் போகின்றன)

நிராகரிப்பிற்கான
காரணங்களாய்
நிறைய பட்டியலிட்டு
ஆராய முற்படலாம்

நிம்மதியாய் ஒரு தேநீர்
அருந்தியபடி
நிதானமாக தீர்மானிக்கலாம்
நிஜமாகவே அதுவொரு
நிராகரிப்புதானா
என்றும்.

o

21 ஜூன் 2010

வாழ்வின் நிலைகளில்

பெருமழைக்
காலமொன்றிலோ
கடுங்கோடையொன்றின்
வெம்மையிலோ
வாடைப்
பருவத்திலோ
வசந்தத்தின்
வாசலொன்றிலோ

அடர் வனாந்திரத்தின்
ஆளரவமற்ற பொழுதுகளிலும்
உயிர் துள்ளும்
உன்னத நேரங்களிலுமென

வாழ்வின்
வெவ்வேறு நிலைகளில்
உங்கள்
வெண்கலக் குரல்
கொடுக்கும் இதம்
உன்னதமானது.

இயல்பான நடிப்புக்கு
இலக்கணமாய்
பேட்டியொன்றில்
நீங்கள் மொழிந்த
நடிகனின் முகம்
வெண்கலப் பானையில்
உருளும் கல்லொன்றாய்
இடையிடையே நெருடும்
இந்தப் பொழுதிலும்.

o
(பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு - இயல்பான நடிப்பு நடிகர் ஜெமினியுடையதே என்ற அவரின் பேட்டிக்காக)

20 ஜூன் 2010

படித்ததில் பிடித்தது-1

23-6-2010 தேதியிட்ட குமுதத்தில் கலைஞர் கருணாநிதி
அவர்களின் இந்த பதில்:

கேள்வி: இன்றைய இளம் ஹீரோக்களில் தங்களைக் கவர்ந்தவர்?

பதில்: சிவாஜிக்குப் பிறகு இன்னும் பிறக்கவில்லை.

o

17 ஜூன் 2010

பிறிதொரு அம்பு

எதேச்சையான என்
அந்த வரவு
நிச்சயம் நீங்கள்
எதிர்பாராத ஒன்றாகவே
இருந்திருக்கும்

அழைப்பொன்றை
தந்துவிட்டு
வந்திருக்கலாம் நான்.

கைபேசியாவது ஒலித்து
சொல்லி இருக்கலாம்
என் வரவை

எவ்விதத்திலும் உங்கள்
இயல்பு நிலை மாறாமல்

யாதொரு கவலையுமின்றி
இருக்கலாம் நீங்கள்

பயன்படுத்தும் கட்டாயம்
வரும் வரை
பத்திரமாகவே இருக்கும்
சொல்லப்படாத ரகசியங்களை
சொருகி வைத்திருக்கும்
அறையில்
இன்னொரு அம்பாக
இதுவும்.

o

14 ஜூன் 2010

பூனைக் கவிதைகள்

01

கடைசியாய்
காரொன்றில்
அடிபட்டு இறக்குமுன்
அந்தக் கறுப்புப் பூனை
முழித்தது யார்
முகத்திலோ?

o

02

திருடனொருவனை
காட்டிக்கொடுத்த
அடுத்த வீட்டுத்
திருட்டுப் பூனைக்கு
அதற்குப் பிறகும்
அதே பெயர்தான்.

O

03

இருந்தும்
கடந்தும்
போயின
எத்தனையோ.
இன்னும் பல
எங்கோ
எப்படியோ
இருந்து
கடக்க.

O
(நன்றி: நவீன விருட்சம்)

13 ஜூன் 2010

நண்பர்கள் வட்டம்

இடைவிடாது பேசிக்கொண்டிருந்த
நண்பனை இடைமறித்து
இன்னொரு நண்பன்
இதுவரைக்கும் உனக்கு
எத்தனை நண்பர்கள் என்றான்.
அருகிருந்த
என்னையும் சேர்த்து
நாலைந்து என்ற நண்பன்
அதிகமாய் யாரிடமும்
தான் அவ்வளவாய்
வைத்துக்கொள்வதில்லை
என்றான்.
எதிராளியை பேசவிடாது
இப்படி இடைவிடாது
பேசிக்கொண்டிருப்பதே
நண்பர்கள் வட்டம்
நாலைந்தோடு
நிற்கக் காரணம்
என்றான் மற்றவன்.

இப்போதெல்லாம்
நண்பனின்
இடைவிடாத பேச்சுக்களில்
இடையிடையே
கேட்கப்படுகிறது
'நான் அதிகம் பேசுகிறேனா?'
என்பதும்.

o
(நன்றி: திண்ணை.காம்)

08 ஜூன் 2010

பின் தொடரும் நிழல்

குறுவாளொன்று
விலாவில் செருகப்பட்டு
குறுக்குவாட்டில்
குத்திக் கிழிக்கப்பட்டது
உடல்.
வெறுமனே
வெறித்துக் கொண்டிருந்தோம்.

தலை துண்டிக்கப்பட்டு
சற்று தள்ளி
தனியே கிடத்தப்பட்டது.
கைபேசியில் கதை பேசியபடி
கவனித்துக் கொண்டிருந்தோம்.

பெற்றுக்கொண்ட
கறிக் கவரோடு
போய்க் கொண்டிருந்த
கார்ப் பயணத்தில்
வன்கொடுமையொன்றின்
அன்றைய தலைக்கணக்கு
வானொலிச் செய்திகளில்
பின் தொடரும் நிழலாய்.

o
(நன்றி: கீற்று.காம்)

02 ஜூன் 2010

குழந்தையின் தாய்

கையில இருக்கிற கல்யாண அழைப்பிதழ பாக்கறச்ச, கண்ல ஜலம் முட்டிண்டு வர்றது. இப்பதான் ஜானு மாமி, தன் பொண்ணுக்கு கல்யாணம் கட்டாயம் வந்துடுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறா. அதைப் பார்த்ததும் ஏனோ எனக்கு அழுகை வந்துடுத்து. பசங்கல்லாம் ஒரு மாதிரிப் பார்க்கறதப் பார்த்துட்டு, கண்ணைத் தொடைச்சுட்டு பாடத்தை ஆரம்பிக்கிறேன்.

இந்த டீச்சர் உத்தியோகத்தை ஏத்துண்டு, இன்னியோட பதினஞ்சு வருசமாறது. அதே பாடத்தைத் திருப்பி திருப்பி சொல்லித் தரதுல ஆரம்பத்துல கொஞ்சம் வெறுப்பா கூடத் தோணித்து. பின் நானே ஒரு மாதிரி சமாளிச்சுண்டேன். சுறுசுறுப்பான பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறச்ச சந்தோசமா இருக்கும். ஏழாம் வகுப்புதான். இருந்தாலும் இந்த பசங்களுக்கு இண்டரஸ்ட் ஜாஸ்தி போலருக்கு. ஏதாவது சந்தேகம் கேட்டுண்டே இருப்பா. நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் சமாளிச்சுண்டு வர்றேன்.

ஸ்கூல் பெல் அடிக்கறது. நான் என் தோல் பைய எடுத்துண்டு கிளம்பறேன். ஒரு கிலோமீட்டர் நடந்தாதான் வீடு போய்ச் சேர முடியும். வேலைல சேர்ந்த புதுசில நடக்கறது கஷ்டமா தோணித்து. போகப்போக பழகிடுத்து. எதிரே ஒரு ஜோடி உரசிண்டே, சந்தோசமா பேசி சிரிச்சிண்டே போறா. எதிரே இருக்கிறவாள்ளாம் என்ன நினைப்பான்னு ஒரு நினைப்பே இல்லாம, எப்படித்தான் இவாளால இப்படி இருக்க முடியுதோ? ஒருவேளை கல்யாணம் ஆயிருந்தா நானும் இப்படித்தான் நடந்துண்டு இருப்போனோ?. அதெல்லாம் இனிமே எங்கே நடக்கப் போறது? பின்னே இந்த முப்பத்தெட்டு வயசுலே யாராவது கட்டிக்குவாளா என்ன? முப்பத்தெட்டு எல்லாம் ஒரு வயசே இல்லேங்கறேளா? அப்படீனா ஏன் வரவாள்ளாம் ஏதாவது சொல்லி நிராகரிச்சுண்டு இருக்கா?. ஒருவேளை நான் அழகாப் படலையோ அவாளுக்கு?

நான் அழகா இல்லைனா, ஏன் அந்த டீக்கடைக்காரர் அப்படி முறைச்சுப் பாக்கறார்?. ஒருவேளை அவருக்கு மாத்திரம் நான் அழகாப் படற னோ என்னெவோ?. வரவர இந்த பெண் பார்க்க வரவாள்ளாம் வேற வேலையே இல்லாம, இதே ஒரு வேலையா வச்சுண்டு இருப்பளோன்னு தோணுது. சந்தைல மாட்டைப் பாக்கறா மாதிரி பாத்துண்டு, சொஜ்ஜி பஜ்ஜில்லாம் திண்ணுண்டு, என்ன ஜென்மம் இவாள்ளாம்? இன்னக்கி கூட அக்கா யாரோ பெண் பார்க்க வர்றதா சொல்லி சீக்கிரம் வரச் சொல்லி இருக்கா. அஞ்சு மணிக்கு வர்றாளாம். வாட்ச்சை பார்க்கிறேன். மணி நாலரை. போய்ச் சேர்ந்திடலாம். இனிமே கல்யாணம்லாம் நடக்குமான்னு எனக்குள்ளே கேட்டுண்டாலும் மனசுல ஒரு மூலைல சின்னதா ஒரு நம்பிக்கை எட்டிப் பார்க்கத்தான் செய்யுது. இந்த வரனாச்சும் கனிஞ்சுதுன்னா அப்புறம் நானும் எல்லார் மாதிரி "அவரோட" இடிச்சுண்டே சினிமா போலாம். "அவர்" ஆபீஸ் போறச்சே, வாசல்ல நின்னு டாட்டா காட்டலாம். அவர் ஆபீஸ் விட்டு வரச்சே, சிரிச்ச முகத்தோட வரவேற்கலாம். ஹும்... நடக்குமா இதெல்லாம்? பார்க்கலாம்.

யோசிச்சிண்டே வந்ததுல வீடு வந்துடுத்து. வாசல்ல அக்கா பொண்ணு உஷா என்னைப் பார்த்து சிரிக்கிறா. ஆச்சு. இவளுக்கும் வயசு பதினெட்டு நடந்திண்டிருக்கு. இன்னும் மூணு நாலு வருசத்துல இவளும் என்னை மாதிரியே சிங்காரிச்சுண்டு, வர்றவா எதிர்ல நிக்கணும். ஆனா கடவுளே, இவளுக்கு என்னை மாதிரி நடக்கக்கூடாது. வயசுப் பொண்ணு வீட்ல இருக்கறப்போ, நான் இந்த மாதிரி பெண் பார்க்கற படலத்துல இருக்கறது, எனக்கே கஷ்டமாத்தான் தோன்றது. சில சமயம் விஷத்தைக் குடிச்சுட்டு செத்துரலாம்னு கூடத் தோணும். சே. அப்படி என்ன கோழைத்தனம்னு என்னை நானே சமாதானம் பண்ணிப்பேன். வாழ்க்கைனா கல்யாணம் ஒண்ணுதானா? வேற எதுவுமே இல்லையா? சின்ன குழந்தையோட சிரிப்பில்லையா? இயற்கைல இருக்கற அழகெல்லாம் ரசிக்கிறதுலேயே நம்ம வாழ்க்கைய கழிக்க முடியாதா? அப்படின்னு தோணும். ஆனா, அக்கம்பக்கத்தில இருக்கிறவா எல்லாம் நான் தெருவில நடந்து போறச்ச, ஒரு மாதிரியா பாக்கறச்ச, ஏன் என் காதுபடவே 'இவ பாவம்னு' பேசறச்ச மனசு உடைஞ்சிதான் போறது. இன்னக்கி வர்றவாளோட முடிவு சாதகமா இல்லன்னா இனிமே இந்தமாதிரி எதுவும் வேண்டாம்னு அக்காக்கிட்ட சொல்லிடணும். யோசிச்சுண்டே இருந்ததுலே நேரம் போனதே தெரியல. அவசர அவசரமா சிங்காரிச்சிக்கிறேன்.

ஆறு மணி போல அவாள்ளாம் வந்தா. நான் காபி எடுத்துண்டு போனேன். எல்லாம் முடிஞ்சு வழக்கம் போல 'போய் லெட்டர் போடறோம்னு' சொல்லிட்டு போனா. எனக்கு இதுவும் பழைய லிஸ்டுல சேர்ந்துடுமோனு ஏனோ தோணித்து. அப்படி எல்லாம் ஆகக்கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிண்டேன்.

இப்பெல்லாம் நான் ஸ்கூலுக்கு நடந்து போறச்ச, அக்கம் பக்கம் இருக்கறவா ஒரு மாதிரி பேசறது புரியறது. நான் யார் கூடவோ தொடர்பு வச்சுண்டிருக்கேனாம். அதான் எல்லா வரணும் தட்டிண்டே போறதாம். ஏன்தான் இவாள்ளாம் இப்படிப் பேசறாளோ, இந்த சமூகத்தில கல்யாணம் ஆகாதவா எல்லாரும் இப்படிப்பட்ட பேச்சுகளை எதிர்கொண்டுதான் ஆகணுமோ?

நான் இந்த புது ஆத்துக்கு குடி வந்து ரெண்டு மாசமாறது. அக்காகிட்ட கோவிச்சுண்டு எல்லாம் நான் தனியா வந்துடல. கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கிற வீட்ல கல்யாணமாகாத முதிர்கன்னியா நானுமிருந்தா என்னாகும்னு நினைச்சுப் பார்த்தேன். அப்புறம் என்னால உஷாவோட கல்யாணம் தள்ளிப்போச்சுன்னா, கடவுளே, வேண்டாமே. ஊராரெல்லாம் இப்படிப் பேச ஆரம்பிச்சது தெரிஞ்சதும்தான் நான் இப்படி முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல அக்கா அதிகமா கோவிச்சிண்டா. அப்புறம் எல்லாம் சரியாயிடுத்து. நான் சரியாக்கிட்டேன். நம்மால மத்தவாளுக்கு கெடுதி வரதுன்னா, அவாகிட்ட இருந்து தூர விலகி போறதுதானே நியாயம்…?

இப்பல்லாம் ஸ்கூல் முடிஞ்சதும், சாயந்திர நேரத்துல வயசான படிக்காதவாளுக்கு எல்லாம், நான் எழுதப் படிக்கச் சொல்லித் தரேன். நடுநடுவே, இந்த சுந்தர் பையன் வந்து குறுக்கிடுவான். ஆனா அதுவும் சந்தோசமாத்தான் இருக்கும். அட, சுந்தர் யாருன்னு சொல்லலியோ? சுந்தருக்கு ஒண்ணரை வயசாறது. குழந்தைகள் ஆசிரம் ஒண்ணுலேந்து தத்து எடுத்துண்டேன். சுந்தர் படு சுட்டி தெரியுமோ? சிரிக்கறச்ச கன்னத்துல விழற குழிய பார்த்துண்டே இருக்கலாம். இப்பல்லாம் ஸ்கூல் விட்டு நடந்து வர்றச்ச, எதிரே எந்த கல்யாண ஜோடி வந்தாலும் மனசு சஞ்சலப்படறதே இல்ல. ஏன்னா, இப்ப நான் ஒரு குழந்தையோட தாய் இல்லையா?

o
(வல்லினம்,மலேசியா - ஜூன் இணைய இதழில் வெளியானது)