03 அக்டோபர் 2012

நான்காவது சிங்கம் ஒரு பார்வை - வித்யாஷங்கர்


(நன்றி: திரு. வித்யாஷங்கர்)




மொழியின் உச்சம் கவிதை

தமிழில் கவிஞன், கவிதை என்பதே கேலிக்குரியதாக இருப்பதற்கு காரணம் திராவிட,
இடதுசாரி இயக்கங்கள்.

மொழியின் பரிசோதனை கூடமாகவும், ஆன்மாவாகவும்
இருப்பது கவிதை!

காதலை பொய் என்றாயே
கவிதையை கள்ளச் சொல் என்றாயே
அன்று பிரியும் வேளையில்
உண் கண்கள் கலங்கியதென்ன
காதல் அல்லாமல்
வார்த்தையின் வனப்புதான்
என்ன கவிதையல்லாமல்

என்ற கு.பா.ராவின் கவிதைகளிலிருந்து எளிய நேரடித் தண்மை கைவரப்பெற்று எனது அனுபவங்களை
கவிதை என்று எழுதி வருகிறேன்.

தினமும் எழுத வேண்டிய நிர்பந்தத்தில் வாழும் எனக்கு கவிதை எழுதுவது - ஆசுவாசுமானதளம்.

எந்த கட்டுப்பாடோ ஒழுங்கோ அற்று எனது உள்தெறிப்பை, கவிதையாக எழுதுகிறேன். அதை பத்திரிகைகளுக்கு
அனுப்புவதோ, புத்தகமாக வெளியிடுவதோ கூட எனக்கு ஆர்வமற்றது. விக்ரமாதித்யன் கேட்டுக் கொண்டதற்காக
எழுதியது, அவருக்கு அனுப்பியது என்பதுதான் எனது வெளியீட்டுத்தளம். யுகபாரதி பலமுறை போனில்
கேட்டு வெளியானதும் உண்டு. சமீபகாலமாக அம்ரா பாண்டியன் அதை செய்கிறார். பேஸ்புக் வந்த பின்
அவ்வப்போது நானே அதில் எழுதிவிடுகிறேன்.

கவிதை எழுதுவது என்பது எனக்கான தனித்த மது அருந்தும் அறை.
அதில் உலகமில்லை; அப்போது நான் உலகில் இல்லை.

சமீபத்தில் எழுதி வரும் உவப்பான கவிஞர்களுள் ஒருவராக செல்வராஜ் ஜெகதீசன் படுகிறார்.

அவரது நான்காவது சிங்கம் அவரை இன்னும் நெருக்கமாக்கியிருக்கிறது.

சுற்றியிருந்த எல்லாமும் ஸ்தம்பித்துப்போன
அந்தக் கணத்தைச் சொற்களில்
எப்படிச் சொல்லி விட முடியும்?

அங்காடியொன்றில் காணாமல் போன தினம்
அவனது இருப்பை அறிவித்ததும் அந்த பாய் தான்.

உண்மையில் இருந்ததா
உனக்கு
அசலாய் ஒரு முகம்
அன்றைக்கு

தேவிகா சுப்ரமணியம் கவிதை, ஏற்புடையதாய், எல்லாமே இப்படி, சுப்ரமணியின் கேள்விகள்,
எதிர் விளையாட்டு, ஆசைமுகம், உயிரோசை, சிலருக்காவது, கவிசாம்ராட்,

இப்படி பல தலைப்பு கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.

பெற்றோரைப் பேணாத
பிள்ளையென்ன பிள்ளை?
பேரீரைச்சல் இல்லாத
அருவியென்ன அருவி?
பேரின்பம் காணாத
பிறவியென்ன பிறவி?
சிற்றின்பம் துறக்காத
துறவியென்ன துறவி?
மனைவியர் நோகப் பண்ணும்
கணவனென்ன கணவன்?
மனதில் கல்மிஷம் கொண்டவையும்
பிறப்பென்ன பிறப்பு?
விமர்சனங்களைத் தாங்காத
கலைஞன் என்ன கலைஞன்?

பழைய வடிவுக்குள் அடக்கி விடக்கூடியதாயினும் இதுவே உங்களது வெளிப்பாடான
பூரண கவிதையாக எனக்குப்படுகிறது.

குழந்தையை பிரிந்து தொலைதூரத்தில் வாழும் தந்தையின் பதற்றமாக, பல கவிதைகளில்
பையன்களை பதிவு செய்திருப்பது தங்களது பாசத்தின் ஆழத்தை காட்டுகிறது.

நீங்கள் கண்டடைந்து வீட்டீர்கள்;

தொடர்ந்து எழுதுங்கள்;

சோர்வுறாதீர்கள்.

அவை இன்னும் கூர்மையுறும் போது, கவிதை உங்களை வந்தடையும்

உங்கள்
வித்யாஷங்கர்.