29 நவம்பர் 2010

உயிரோசை கவிதைகள்

29-11-2010 தேதியிட்ட உயிரோசை மின்னிதழில் வெளியான கவிதைகள்.

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்



வரும் வரை
வரிசையாய் வந்து
விசாரிக்கும்
உன் அலைபேசி விசாரிப்புகளோடு
வந்தபின் விழிகளால்
நீ எதிர்கொள்ளும் உன்
வினாக்களுக்காகவே
வந்து கொண்டிருக்கிறேன்
உன்னை நோக்கி.

O
என்றேனும் நிகழும்
நீ திரும்பும் கணமென்னும்
எதிர்பார்ப்பை
எப்போதும்
பொய்யாக்கிப் போகும்
உன் முகம் திரும்பா
பிரிதல்கள்.


O
வாழ்க்கை
சில நேரங்களில்
இப்படி இருக்கிறது.
இப்படியான
சில நேரங்களிலேயே
இருந்து விடுமோ
இந்த வாழ்க்கை?

O
வீழ்த்தி விட்டோம்
வேறோர் அணியை என்று
வீறு கொள்கிறோம்
விளையாட்டில்.

இன்னொரு மனதை
வெற்றி கொள்வதை
விழுந்து விட்டோமென்கிறோம்
காதலில்.

O

22 நவம்பர் 2010

'கல்கி' யில் ஐந்தாவது கவிதை

இந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்)




(நன்றி: கல்கி)

10 நவம்பர் 2010

தற்காலக் கவிதை - சில கேள்விகள், சில சித்திரங்கள் - சுகுமாரன் - படித்ததில் பிடித்தது



சமீபத்திய வருடங்களின் கவிதைப் பெருக்கத்தை யோசிக்கும்போதெல்லாம் திருச்சூர் பூரக் காட்சியும் மனதில் திரையீடாகும்.

இருபுறமும் யானைகள். அவற்றின் முதுகுகளில் முதுகு ஒன்றுக்கு இருவராக வண்ணக்
குடைகளும் வெண்சாமரங்களும் பிடித்த மனிதர்கள். யானைகளுக்குக் கட்டியிருக்கும் பொன்முலாம் பூசிய பட்டங்கள் வெயிலில் மின்னுகின்றன. அந்த மினுக்கத்தால் வெயில் இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கிறது. யானைகளின் நேருக்கு நேரான வரிசைக்கு பின்னால் பல வண்ண மக்கள் திரள். முன்னால் வெவ்வேறு வாத்தியக் கருவிகளுடன் ஏறத்தாழ இருநூறு கலைஞர்கள்.வெவ்வேறு வாத்தியங்களிலிருந்து அவர்கள் வாசித்து எழுப்பும் வெவ்வேறு தாள ஒலிகள் ஒரே உயிரின் லயமாகக் கேட்கின்றன. சீரான ஒத்திசைவில் கலைஞர்களின் உடல்கள் இயங்குகின்றன. மக்கள் திரளின் பல்லாயிரம் கைகள் தாளத்துக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் அசைகின்றன. உலகின் மிகப் பெரிய தாளவாத்தியக் கச்சேரியான பூரம் பஞ்சவாத்தியத்தின் உச்ச கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. முத்தாய்ப்பான அந்த கட்டத்தில் எல்லா வாத்தியக் கருவிகளும் இயங்குகின்றன. ஒலியளவு செவியை அதிரச் செய்வதாகிறது.பிரதான மேளக்காரர்களில் ஒருவர் அத்தனைப் பரபரப்புக்கும் அத்தனை விமரிசைகளுக்கும் நடுவில் சக கலைஞரோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். அவரும் வாத்தியத்தைக் கொட்டியபடியே அதைக் கேட்டு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இருவரும் முகம் மலரச் சிரித்துக் கொள்கிறார்கள். ஒரு பெரும் நிகழ்வுக்குள் நடந்த இந்தக் குறுஞ்செயல் கவனத்தில் சாசுவதமாகத் தங்கிவிட்டது.

தமிழ்க் கவிதை பற்றிய சிந்தனையின்போது தவிர்க்க இயலாமல் இந்தக் கேரளச் சித்திரம் வந்து படரும். இதற்கு தர்க்கரீதியான பொருத்தம் இருக்கிறதா என்று சந்தேகம் எழும். எனினும் ஏதோ ஓர் ஒற்றுமையை மனம் இனங் கண்டிருக்கிறது. இன்றைய கவிதைப் பெருக்கமும் அதன் செயல்களும் விவரித்த காட்சியுடன் ஒப்பிடக் கூடிய ஒன்றாகவும் தோன்றியிருக்கிறது. நூற்றுக் கணக்கான கவிஞர்கள் இருக்கிறார்கள். கவிஞர்கள் பரஸ்பரம் உரையாடிக் கொள்கிறார்கள். வெவ்வேறு கவிதைகளின் தனிக் குரல்கள் ஒன்று கலந்து ஒரே மொழியின் துடிப்பாகின்றன. இவை எல்லாம் ஒற்றுமைகள். வேற்றுமையும் இருக்கிறது. வாத்தியக் கலைஞர்களின் வாசிப்புக்கு எதிர்வினையாற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். கவிதைக்கு வாசகர்கள் குறைவு. அல்லது இல்லவே இல்லை. கவிதை எழுதுபவர்கள், அதை வாசிப்பவர்கள் இருவரும் ஒரே பிரிவினராக இருக்கிறார்கள். புதிய நூற்றாண்டின் கவிதைகள் பற்றி யோசிக்கும்போது எழும் முதல் சித்திரம் இது.

@

நவீனத் தமிழ்க் கவிதை வெவ்வேறு கட்டங்களில் பெரும் அலை வீச்சாக எழுந்திருக்கிறது. 'எழுத்து' பத்திரிகையின் வாயிலாக உருவான அறிமுக அலை. எழுபதுகளில் திரண்டு எண்பதுகளில் வீச்சடைந்த அங்கீகாரம். இவற்றை விடத் தீவிரமாகவும் பரவலாகவும் கவிதை எழுந்தது தொண்ணூறுகளிலும் அதன் முத்தாய்ப்பாகப் புதிய நூற்றாண்டிலும்.

முந்தைய இரு காலப் பகுதிகளை ஒப்பிட்டும்போது மிக அளவில் கவிதைகளும் கவிஞர்களும் அறிமுகமாயிருப்பது கடந்த பத்தாண்டுகளுக்குள் என்று கருதுகிறேன். தொண்ணூறுகளுக்கு முன்புவரையிலான கவிதைகளை வகைப் படுத்துவது எளிதாக இருந்தது. அபத்தமான பிரிவினை என்றாலும் அகவயமானவை, புறவயமானவை என்று பெரும்போக்காகச் சொல்லிவிட முடிந்தது. இன்று அது எளிதல்ல. புதிய கவிதைகளை வகைப் படுத்துவ தென்பது தவளைகளை தராசிலிட்டு நிறுப்பதுபோல விநோதமாக முடியும்.
கவிதைப் பெருக்கத்துக்கான முகாந்திரங்களைச் சற்று யோசித்துப் பார்க்கலாம். இவை ஒரு கவிதைப் பயிற்சியாளனின் பார்வையில் தென்படுபவை. விமர்சன அடிப்படைகள் வலுவாகக் கொண்டிராதவை. கவிதைக்காரனாக என்னுடைய அக்கறைகள் கவிதையின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் செயலிலும் ஊன்றியவை. அதன் பிறப்புச் சான்றிதழில் அல்ல.அந்தக் கணிப்புகள் விமர்சகன் செய்ய வேண்டியவை. துரதிருஷ்வசமாக இன்றைய கவிதைகளை நுட்பமாக உணர்ந்து அவற்றின் செழுமையையும் ஊனத்தையும் வரையறுத்துச் சொல்லும் விமர்சகன் இல்லை. இது புதிய கவிதைகள் பற்றிய சிந்தனையில் உருவாகும் இரண்டாவது சித்திரம்.

@

முந்தைய கவிதைகள் நகர்ப்புறக் கல்வி பெற்றவர்களின் பங்களிப்பாக இருந்தது. அதற்குப் பின்னர் ஒரு புதிய தலைமுறை கல்வியில் தேர்ந்து இலக்கியத்தில் செயல்பட ஆரம்பித்தது. அந்த எண்ணிக்கை இரண்டாயிரங்களில் அதிகம். கவிதை எழுதுவதும் எழுதிய கவிதையை இதழ்களில் வெளியிடுவதும் நூலாக அச்சியற்றுவதும் எளிதான செயலல்ல. கணிப்பொறியின் பயன்பாடு பரவலாக ஆன பின்னர் இதழ் வெளியீடுகளும் நூல் தயாரிப்பும் இலகுவாயின. அண்ணா மறைவையொட்டி முதல் கவிதை எழுதிய கலாப்ரியாவுக்கு கவனத்துக்குரிய தொகுப்பு வர பாரதி நூற்றாண்டு வரை கால அவகாசம் வேண்டியிருந்தது. இன்னொறையும் கருத்தில் கொள்ளலாம். அதுவரை எழுதப்பட்ட கவிதைகள் தளர்ச்சியான செய்யுள் தன்மையையும் பொருள் இறுக்கத்தையும் கொண்டிருந்தன. புதுக்கவிதை என்ற வடிவமே மரபான வடிவத்துக்கு எதிரான கலகம் என்று எண்ணுகிறேன். அது உரைநடையில்தான் புதிய உணர்வின் வெளிப்பாடாக நிலைபெறுகிறது. செய்யுளை விட உரைநடை அதிக ஜனநாயகத்தன்மை கொண்டது என்பதும்
அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம்.

மேற்சொன்னவை கவிதைக்கான புறத் தூண்டுதல்கள் மட்டுமே. கவிதையை நிர்ணயிக்கும் அகத் தூண்டுதல் வேறு. நடுத்தர வர்க்கப் படிப்பாளிகளிடமிருந்து முந்தைய கவிதைகள் உருவாயின. அவை அல்லாத கவிதைகள் அரசியல் பிரச்சாரத்துக்காக எழுதப்பட்டன. புதிய நூற்றாண்டின் கவிதை வேறொரு தளத்திலிருந்து உயிர்த்தெழுந்தது. கல்வியறிவின் வெளிச்சத்துடனும் தமது இருப்பு நிலை பற்றிய விழிப்புணர்வுடனும் அறிமுகமான புதிய தலைமுறை கவிதைக்குள் பிரவேசித்தது. அதுவரை சொல்லப்படாத வாழ்வின் பாடுகளைச் சொல்ல முற்பட்டது. அதுவரை பேசப்பட்டிருந்த கவிதை மொழியைப் புனரமைத்தது. அதுவரை முன்வைக்கப்படாத நிலக் காட்சிகளைத் தீட்டியது. அதுவரை வெளியரங்கமாகாத மனக் கோலங்களை படர விட்டது. இரண்டாயிரங்களின் கவிதையியலை இந்தப் புதிய தலைமுறை நிர்ணயித்தது. தனக்கு முன்னிருந்த கவிதைகளைப் புதிய கோணத்தில் பார்க்கவும் தனக்கு முன்பு கவிதையில் ஈடுபட்டவர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும் வலியுறுத்தியது.

பல கிளைகள் கொண்டது இரண்டாயிரங்களில் கவிதைக்குள் நுழைந்த தலைமுறை.தலித்தியம். பெண்ணியம், சூழலியல், பின் நவீனத்துவம் என்று விவாத வசதிக்காக இவற்றை வகைப்படுத்தலாம். இவை முன்வைக்கும் கவிதையியலின் கூறுகள் தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் முன்னரே மங்கலாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் தனது கவிதையியலுக்குள் பயிலாத ஒன்றை - அது வடிவமோ, கருத்தாக்கமோ எதுவானாலும் ஒரு மொழி ஏற்றுக் கொள்வது அரிதென்று தோன்றுகிறது. காரணம், மொழி கலாச்சாரத்தின் கொள்கலம். சானட் போன்ற ஆங்கிலக் கவிதை வடிவங்களையும் அந்நியப் பழக்க மரபுகளையும் தமிழ்க் கவிதை புறந்தள்ளக் காரணம் இதுதான். ஒரு நீக்ரோவின் உணர்வை நமது கவிதையியல் துலக்கமாக வெளிப்படுத்த இயலாது. ஆனால் பள்ளர்களின் வாழ்க்கையையும் நந்தனின் பதற்றத்தையும் உணரக் கூடிய சுரணையுள்ள மொழி அதை ஏற்று விரிவாக்கும். கடவுளின் விரிமார்பில் சேரத் தவிக்கும் தடமுலைகளைப் பேசக் குரல்கொடுக்கும் மொழி பெண்ணின் இருப்பை மதிக்கும். காமத்தையும் உடலெழுத்தையும் அங்கீகரிக்கும். இயற்கையை ஆராதிக்கும் கவிதையியல் சுற்றுச் சூழல் அக்கறைகளுக்கு வழி கோலும். கவிதையியலின் கலாச்சார இயல்பு இது என்று வரையறுக்கலாம். எனினும் கவிதை எப்போதும் மாமூல் கருத்தாடல்களுக்கு எதிரானது. அது அதிகம் வெளிப்பட்டது தற்காலத்தில் என்று பெருமிதப்படலாம். இந்த எதிர்க் குணமேகவிதையின் பெருக்கத்துக்குக் காரணியாக இருக்குமா? மூன்றாவது சித்திரத்தை மிளிரச் செய்யும் கேள்வி இது.

@

இந்தக் கிளைகள் ஒரு புறம். கூடவே எழுபது ஆண்டுக் காலமாக உருவாகி வளர்ந்த புதுக் கவிதையின் முதன்மைப் போக்கிலுள்ள கவிதைகளும் இரண்டாயிரங்களில் மாற்றமடைந்தன. நவீனத்துவம் என்ற அடையாளத்திலிருந்து விலக்கிப் பின் - நவீனத்துவம் என்ற அடையாளத்துடன் விவாதிக்கப்படுகின்றன.இந்த அடையாளம் மேம்போக்கானது என்று கருதுகிறேன். தவிர இன்றைய உலகமயமாக்கலின் செல்லக் கருத்தாகவும் இந்த அடையாளம் மாறிவிட்டது. தொலைபேசியைப் பயன்படுத்துவது நவீனத்துவம்.கைத்தொலை பேசி உபயோகிப்பது பின் நவீனத்துவம்.
உண்மையில் கவிதையின் நிரந்தரமான கோரிக்கை நவீனமாக - புதுமையாக - இருப்பது.எந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவது, படிமம்போன்ற முந்தைய கவிதை அணிகளைத் துறப்பது, உரைநடைத்தன்மையிலேயே கவிதையை எழுதுவது, கடவுள் - சாத்தான் என்ற எதிரீடுகளில் இருவரையும் ஒன்றாக்குவது, மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுவது என்று பின் நவீனக் கவிதைக்குச் சொல்லப்படும் இலக்கணங்கள் எல்லாக் காலத்தையும் சேர்ந்த கவிதைக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. நம் முன் இருக்கும் படைப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் உருவாக்கப்பட்ட கருத்தாடல் என்றும் படுகிறது. இதை ஒதுக்கிவைத்து விட்டு பின் நவீனத்துக்கு நம்மிடையே இருக்கும் படைப்புகளை முன்னிருத்தி மாற்றான வரையறைகளைக் கண்டடையலாம். இவை என் வாசிப்பிலிருந்து தொகுத்துக் கொண்ட வரையறைகள். இதன் மூலம் இன்றைய கவிதைகளை மேலும் விரிவான பின்புலத்தில் காண விரும்புகிறேன்.ஒவ்வொரு பதிற்றாண்டிலும் மொழி மாறுகிறது. இந்த மாற்றம் புனைகதைகளை அதிகம் பாதிப்பதில்லை. ஏனெனில் அதில் ஓர் அனுபவப் பதிவோ கதையாடலோநிகழ்கிறது. சரியாகச் சொன்னால் புனைகதை ஓர் அனுபவத்தை அதன் பின்னணித் தகவல்களுடன் வரலாறாக மாற்ற முனைகிறது. கவிதை ஓர் அனுபவத்தை காலத்தின் படிமமாக மாற்ற முற்படுகிறது. நிகழ்கால மொழியில் படிமமாக்கலை எந்தக் கவிதையியல் நிறைவேற்றுகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று அழைக்க விரும்புகிறேன். இந்தப் படிமமாக்கலில் அதுவரை இருந்த தேய்வழக்குகள் உதறப்படுகின்றன. காட்சிகள் மாற்றமடைகின்றன. விலக்கப் பட்ட வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறுகள் கவிதையின் அலகுகளாகின்றன. பல தொனிகளில் வெளிப்படும் குரல்கள் கவிதை மொழியின் சாரமாகின்றன. குறிப்பாகக் கோட்பாடுகளின் உதாரணமாக அல்லாமல் மனித மனத்தின் - மனித இருப்பின் எல்லா கோணங்களையும் எந்தப் பார்வை சித்தரிக்க முனைகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று சொல்ல விரும்புவேன். இதற்கான சான்றுகளை கவிதை மீது கவனமுள்ள வாசகரால் எளிதில் இனங்காண முடியும். இது தற்காலக் கவிதை எனக்குள் விரிக்கும் நான்காவது சித்திரம்.

@

ஈழக் கவிதைகளைக் குறிப்பிடாமல் தற்காலத் தமிழ்க் கவிதையின் சித்திரம் முழுமையடையாது. கடந்த மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்துக் கவிதைகள் தமிழகக் கவிதைகளையும் தமிழகக் கவிதைகள் ஈழத்துக் கவிதைகளையும் பாதித்து வந்திருக்கின்றன. இரண்டு நிலைகளில் இந்தப் பாதிப்பு செயலாற் றியிருக்கிறது. ஒன்று: அரசியல் சார்ந்து. மற்றது: பெண்மொழி சார்ந்து.

ஈழத்துக் கவிதைகளின் செல்வாக்கில்லாமலிருக்குமானால் தற்காலக் கவிதையியலில் அரசியல் விவாதத்துக்கான தருணங்கள் இல்லாமலிருந்திருக்கும். நவீனத் தமிழ்க் கவிதை அரசியலை தீண்டத் தகாததாகவும் அரசியலை மையப்படுத்தி எழுதப்படும் கவிதைகளைப் பிரச்சாரக் கவிதைகள் என்றும் ஒதுக்கியே வைத்திருந்தன. அவசரநிலைக் காலம் பற்றி தமிழில் எழுதப்பட்ட சீரிய கவிதை ஒன்றே ஒன்று மட்டுந்தான் என்பது இந்த இலக்கிய விலக்கைப் புரியவைக்கும்.
போருக்குள் நிகழும் வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தாம் தமிழ்க் கவிதைக்குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப் படுத்தியது. பெண்நிலையில் வாழ்வை எதிர்கொள்ளும் பார்வைக்கும் ஈழத்துக் கவிதைகளிடம் கடன்பட்டிருக்கிறோம். 'சொல்லாத சேதிகள்' என்ற தொகுப்பு தமிழ்க் கவிதையியலில் உருவாக்கிய அதிர்வுகளின் பின் விளைவுகள் காத்திரமானவை.

இந்தப் பாதிப்புகளின் ஸ்தூல அடையாளங்களை தற்காலக் கவிதையில் எளிதில் காணலாம்.ஈழத் தமிழின் சொல் வழக்குகள் பலவும் எந்தத் தடையுமின்றி தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தப்படுவதையும் மறு பக்கத்தில் தமிழ்க் கவிதைச் சொற்கள் ஈழக் கவிதையில் புகுந்திருப்பதையும் உணரலாம்.

@

கடந்த பதிற்றாண்டில் வெளியாகியிருப்பவற்றில் கவிதை நூல்களே கணிசமாக இருக்கும். இதழ்களில் வெளியாகும் கவிதைகளை விட மும்மடங்குக் கவிதைகள் இணையத்தில் வெளியாகின்றன. இந்தக் கவிதை வெளிப்பாட்டின் நோக்கங்களும் வெவ்வேறு. சிலருக்கு அது ஓர் அடையாள அட்டை. அதைப் புனைகதைக்கான ஒத்திகைச் சீட்டாகப் பயன்படுத்தலாம். திரைப் பிரவேசத்துக்கான கடவுச் சீட்டாகக் கொள்ளலாம். அரசியலில் எந்தப் பங்களிப்பும் செய்யாத ஒருவருக்கு கௌரவப் பதக்கமாகலாம். இலக்கியத்தில் அதிகாரம் செலுத்தக் கூடிய மாய நாற்காலியாகலாம். எதிர்பாலினரை வசீகரிக்கும் ஒப்பனையாகலாம். பாவம், தமிழ்க் கவிதை. இத்தனை நோக்கங்களுக்கும் அது ஈடு கொடுக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் ஈடுகொடுத்திருக்கிறது. சீட்டுக் கவியாக, ஆருடக் கருவியாக, பரிசல் இரக்கும் பாத்திரமாக, தற்பெருமையை அறைந்து சொல்லும் முரசாக, கடவுளின் பல்லக்காக என்று பலவிதமாக ஈடுகொடுத்த மரபில் அவற்றையெல்லாம் மீறி வாழ்வின் கணங்களை நிரந்தரப் படுத்தியும் மனதின் உள் ஆழங்களைத் திறந்து காட்டியும் மனித இருப்பின் சிக்கல்களை ஆராய்ந்தும் விரிந்த சுதந்திர வானத்துக்காக வேட்கைகொண்டும் கவிதை தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருகிறது. தற்காலப் பெருக்கத்தில் அது எங்கே என்று கண்டடைவதுதான் இரண்டாயிரங்களின் வாசகனின் முன் நிற்கும் சவால்.
@
முதற் பத்தியில் இடம் பெற்ற பூரக் காட்சியில் வாத்தியக் கலைஞர்கள் இருவரும் பேசிக் கொள்வதுபோலத்தான் இரண்டு கவிஞர்கள் உரையாடிக் கொள்கிறார்களா? அல்லது கவிஞன் தன்னுடைய வாசகனிடம் உரை யாடுகிறானா? இந்தச் சித்திரம் இப்போது கேள்வியாகிறது.


நன்றி: ’காலச்சுவடு’ (இதழ் 121) ஜனவரி 2010 & சுகுமாரன்.

09 நவம்பர் 2010

ஆத்மாநாம் கவிதைகள் - படித்ததில் பிடித்தது

தரிசனம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதினிலே ஒரு நிம்மதி.

O
சுற்றி

அரச மரத்தைச் சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
வேப்ப மரத்தைச் சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
எந்த மரத்தைச் சுற்றி
பிறந்த பிள்ளை இவன்
ஏதாவது தறுதலை மரமாக இருக்குமோ?

o

உலக மகா யுத்தம்

ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

o

ஐயோ

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்.

o

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்.

o

படித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை

01 நவம்பர் 2010

பத்திரமும் தைரியமும்

தாவிக் குதித்து
சாலையை கடக்க முற்பட்டவன்
தலையில் தட்டி
பத்திரமாய் கடப்பது பற்றி
சொல்ல ஆரம்பித்தவனை
இடைமறித்து
எப்போதும் எங்கும்
தைரியம் வேண்டுமென்று
முன்பு நான் சொல்லியதை
எடுத்துக்காட்டி என்னையே
பார்த்துக்கொண்டிருந்தவனிடம்
பத்திரமும் தைரியமும்
பக்குவமாய் புரியும்படி
எப்படிச் சொல்வதென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

o
(நன்றி: கீற்று.காம்)