31 ஆகஸ்ட் 2010

'கல்கி' யில் இரண்டாவது கவிதை

இந்த வார கல்கி (05-09-2010) இதழில் வெளியான கவிதை.


28 ஆகஸ்ட் 2010

இரு கவிதைகள் (மீள்பதிவு)

1) அந்தரங்கம்

இருவர் பேசிக்கொண்டிருந்த
இடத்தருகே
எதேச்சையாய் போய் நின்றேன்.
அப்படியே பேச்சு நின்று
அமல்படுத்தப்பட்டது அமைதி.

இன்னொருவனுக்கு
அனுமதியில்லாத
இருவரின் அந்தரங்கத்தின்
இடையே புகுந்ததறிந்து
வெறுமே சிரித்து வைத்தேன்
வேறெதுவும் தோன்றாமல்.

(“அந்தரங்கம்” தொகுப்பிலிருந்து)

o

2) இன்னபிறவும்

அநேகமாய்
முடிவதில்லை.

அழகைப் பற்றிய
அவதானிப்பை

அப்படியே
கைமாற்றிவிட.

அதிகபட்சம்
முடிவதெல்லாம்

அதைப்போல
இது என்பதாய்

இன்னொன்றை
இணையாய்ச் சொல்லி

இப்படித்தான்
இருக்கிறது

இன்னபிறவும்
இவ்வாழ்வில்.

(“இன்னபிறவும்” தொகுப்பிலிருந்து)

o

25 ஆகஸ்ட் 2010

கல்கியில் வெளியான என் கவிதை

இந்த வார கல்கி (29-08-2010) வார இதழில் வெளியான என் கவிதை ஒன்று.

23 ஆகஸ்ட் 2010

மொழிதலில் புதுமை - சுகுமாரன் முன்னுரை



இன்னபிறவும்” என்ற தொகுப்புக்கு எழுதத் திட்டமிட்டிருந்த முன்னுரை இதுவல்ல. நண்பர் செல்வராஜ் ஜெகதீசன் தனது இந்த இரண்டாவது தொகுப்புக்கு எழுதக் கேட்டிருந்தது, நவீனத் தமிழ்க் கவிதைகள் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பை. அதற்கான நீண்ட கால அவகாசத்தையும் அளித்திருந்தார். எனினும் அது சாத்தியமாகவில்லை. தொடர்ந்த இடப் பெயர்ச்சிகளும் அவற்றின் மூலம் உண்டான சிக்கல்களும் தடையாக அமைந்தன.

நவீனத் தமிழ்க் கவிதை ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டின் வரலாற்றை உரித்தாக்கிக் கொண்டிருக்கிறது. பாரதியின் வசன கவிதை முயற்சிகளே அதன் தொடக்கம். இறுக்கமான செய்யுள் நடையில் இயன்று கொண்டிருந்த கவிதையை மெல்ல மெல்லப் புதுமையும் எளிமையுமான வடிவத்தை நோக்கி நகர்த்த முயன்றார் பாரதி. காலத்தின் உணர்வு மாற்றத்தைப் புதிய மொழியில் விளங்கிக் கொள்ள யத்தனித்தார். இந்த எத்தனிப்புதான் சில ஆண்டுகளுக்குப் பின்னர் புதுக்கவிதை என்ற வடிவத்துக்கு ஆதாரமாக இருந்தது. புதுக்கவிதையின் முதல் உதாரணமான ந.பிச்சமூர்த்தியின் "காதல்" (1934) கவிதை இதன் முளை. இதைத் தொடர்ந்து எழுந்த புதிய முளைகள்தாம் நவீன கவிதையில் பெருநிலமாக இன்று விரிந்திருக்கின்றன. செல்வராஜ் ஜெகதீசன் இந்த வரலாற்றுத் தொடர்ச்சியின் ஓர் இழை. இந்த இழை வலுவானதா, மெல்லியதா என்பது அதன் அழகியல் பயன்பாட்டையொட்டித் தீர்மானிக்கப்படும் என்று தோன்றுகிறது.

பிச்சமூர்த்தி முதல் ஜெகதீசன் வரையிலான எழுபத்தைந்து ஆண்டுகளில் நவீன கவிதை வெவ்வேறு கோலங்கள் புனைந்திருக்கிறது. வெவ்வேறு கருத்தாங்கங்களின் வாகனமாகச் செயல்பட்டிருக்கிறது. வெவ்வேறு அணிகளில் பயின்றிருக்கிறது. வெவ்வேறு நிலக்காட்சிகளை முன்வைத்திருக்கிறது. காலத்தின் உடனிகழ்வாக வாழ்வின் கணங்களைப் பதிவு செய்ய முனைந்திருக்கிறது. இவ்வளவு மாற்றங்களுக்குப் பின்னர் இன்று கவிதை அதன் நவீனம் பழமையாகக் கூடிய நிலையையும் அடைந்திருக்கிறது.
ஓர் இலக்கிய வடிவத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த வளர்ச்சியையும் சிதைவையும் சுட்டிக்காட்டுவதாக அமையும் ஒரு வரலாற்றை எழுதும் திராணி எனக்கில்லை என்று கருதுகிறேன். நவீனக் கவிதை மீதான என்னுடைய பார்வை ஒரு கவிதை பயிற்சியாளனின் பார்வை. வரலாற்றிலிருந்து விடுபட்டவை மீதுதான் ஒரு கவிஞனின் அக்கறை குவியும். அதன் இருப்புகளைப் பற்றியது விமர்சகனின் பார்வை. நவீன கவிதையின் துரதிருஷ்டம், அப்படியான விமர்சனங்கள் உருவாகவே இல்லை. இனி உருவாகலாம் என்பது ஒரு நம்பிக்கை; ஒரு கனவு.

இதுவரை எழுதப்பட்டு வந்த புதுக் கவிதைகளிலிருந்து இன்று எழுதப்படும் நவீனக் கவிதைகள் மாறுபடுகின்றன. உரைநடையின் அதிக பட்ச சாத்தியங்களை அவை கொண்டிருக்கின்றன. உரைநடை எங்கே கவிதைக்கான திறப்பைக் கண்டடைகிறது என்பது பற்றிய எச்சரிக்கையைப் பெரும்பாலான கவிதைகள் நழுவ விடுகின்றன. இன்றைய கவிதை படிமங்களை இயல்பாகத் துறக்க விரும்புகிறது. புதுக்கவிதை படிமங்கள் வாயிலாக காலத்துடன் நடத்திய பரிமாற்றத்தை நவீன கவிதை தானே படிமமாகி நிகழ்த்திக் கொள்ள முனைகிறது. விரிவான பொருளில் எல்லாக் காலத்திலும் கவிதை படிமமாக்கலையே முதன்மையாகச் செய்து வருகிறது. கவிதை நிகழ்வைப் படிமமாக்குகிறது. புனைகதை நிகழ்வை வரலாறாக்குகிறது. நவீன கவிதை இந்த நுட்பமான வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றே பெரும்பான்மைக் கவிதைகளை வாசிக்கும்போது தோன்றுகிறது. அதனாலேயே கவிதையாகத் திறக்காத கூற்றுகள் கவிதையாகத் தென்படுகின்றன.

ஜெகதீசனின் இரண்டு கவிதைகளை – “கொஞ்சமும், என்றாலும்” - முன்வைத்து இதை விளங்கச் செய்யலாம். கொஞ்சமும் கவிதையில் ஒரு கவிதைப் புத்தகத்தை புத்தகக் கடைக்காரர் தேநீர் தம்பளருக்கு ஸ்டாண்டாகப் பயன்படுத்துவதிலுள்ள முரண் பேசப்படுகிறது. இது கவிஞனின் கண்ணோட்டத்தில் ஆற்றாமையை ஏற்படுத்துகிறது. ஆனால்,கவிஞனல்லாத ஒருவருக்கு இது எந்தப் பிரத்தியேக உணர்வையும் தருவதில்லை. படைப்பின் அடிப்படை இயல்பான தன்னைப் பிறனாக்குவது, பிறனைத் தன்னாக்குவதுமான பார்வை, இந்த வரிகளில் திரள்வதில்லை. அதே சமயம் ''என்றாலும்'' கவிதையில் இந்தப் பார்வை வெளிப்படுகிறது. வாசிக்கப் புத்தகங்கள், நீண்ட பொழுது, கவிதைக்குத் தூண்டும் காட்சிகள் எல்லாமிருந்தும் விமானப் பயணம் இனிமையானதாக இல்லை. காரணம் மரண பயம். கவிஞருக்கு உண்டாகும் இந்த உணர்வு எல்லாருக்குமானது. இந்தத் திறப்பைத் தொடும்போது கூற்று கவிதையாகிறது.

கவிதை, அது என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் சில இயல்புகளைக் கொண்டிருக்கிறது. இயல்புகள் என்பதை விடத் தேவைகள் என்பது பொருத்தமானது. வடிவத்தில் செறிவு, மொழிதலில் புதுமை, வாழ்வு சார்ந்த பார்வை - இவை மூன்றையும் கவிதை பிடிவாதமாகக் கோருகிறது. ஜெகதீசனிடம் வடிவம் பற்றிய பிரக்ஜை இருக்கிறது. சமயங்களில் அது அவர் அண்மையில் வாசித்த கவிதையின் சாயலில் வெளிப்பட்டு விடுகிறது. ''இன்ன பிறவும்'' ''எதைச் சொல்வீர்கள்" கவிதைகளை விக்ரமாதித்யனை வாசித்த சூட்டில் யோசித்திருக்கலாம். மொழிதலில் இயல்பான புதுமையை ஜெகதீசன் கையாள்கிறார். 'பூனைகள்' கவிதை ஓர் உதாரணம். இரு தொகுப்புகளிலுமாக ஜெகதீசன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். எனினும் அவரது பார்வை என்னவென்பது பிடிபடாத ரகசியம். தன்னை சூழ உள்ள நிகழ்வின் கணங்களை அப்படியே வாசகனிடம் பகிர்ந்து கொள்ளுகிறார். இதுமட்டும் போதுமானதா என்பதை அவர்தான் தீர்மானிக்கவும் முடியும்.

இவற்றையெல்லாம் சொல்லும்போதே ஜெகதீசனிடம் நவீனக் கவிதைக்குரிய கூறுகளையும் காண்கிறேன். பெரும்பாலும் படிமங்களை துறந்த ஒரு திறந்த மொழி, காட்சிகளை சொல்லுக்குள் மாற்றும் விதம், அனுபவங்களைச் சார்ந்து படைப்பாக்கத்தில் ஈடுபடும் முனைப்பு, எண்ணிக்கைப் பெருக்கம் இவையெல்லாம் அவரைப் பொருட்படுத்திப் பேசத் தூண்டுபவை. இன்றைய அவரது கவிதைகளை பின்னுக்குத் தள்ளும் கவிதைகள் அவரிடம் இருக்கின்றன என்று நம்பச் செய்பவை. அதற்கான ஒருமுகப்பட்ட கவிதைமனம் அவரிடம் இருக்கிறது. இல்லையா ஜெகதீசன்?

o

13 ஆகஸ்ட் 2010

விக்ரமாதித்யன் - இலக்கில்லாத பயணம் (படித்ததில் பிடித்தது)

விக்ரமாதித்யன் (விளக்கு விருது விழாவிற்காக தயாரிக்கப்பட்டு படிக்கப்படாத கட்டுரை) இலக்கில்லாத பயணம் - வித்யாஷ‌ங்கர்



http://saamakodai.blogspot.com/2010/07/blog-post_2839.html

ஒரு மரத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பார்க்கிறோம். அதன் உச்சியில் நின்று பார்ப்பவருக்கு அதன் விஸ்தீரணமும் உயரமும் பெருங்கிளைகளும் பூக்களும், கனிகளும் வியப்பாக இருக்கும். அதன் நிழலிருந்து பார்ப்பவருக்கு வேறாகவும், அதன் கனியை ருசித்தவருக்கு வேறாகவும் மரம் தோற்றமளிக்கும். விக்ரமாதித்யன் என்ற பெருமரத்தின் நிழலை அனுபவித்திருக்கிறேன். பூவை ரசித்திருக்கிறேன். கனியை ருசித்திருக்கிறேன் கோபத்தில் கிளைகளை வெட்டி ஏறிந்து காயப்படுத்தி இருக்கிறேன்

ஆனாலும் அந்த பெருமரத்தை பற்றிப்படர்ந்து வாழும் கொடியாகவே என்னை உணர்கிறேன். அந்தப் பெருமரத்தைப் பற்றிப் படர்ந்து வியந்து தழுவியிருக்கிறேன். அவ்வப்போது பெருங்காற்றில் புயலில் விழுந்து விடாமல் காத்தும், பூக்கள் உதிர்ந்து விடாமல் கனிகள் களவாடப்படாமலும் காத்துமிருக்கிறேன். அதனாலேயே பெருமரத்தை விலகி நின்று பார்க்க முடியாமலும் போயிருக்கிறேன்.

கவிஞனின் கவிதைகள் குறித்து பலரும் பேசினாலும் கவிஞனின் வாழ்வியலின் பின்ணணியை வெகு நெருக்கமாக தெரிந்தவன் என்ற முறையில் உங்களோடு சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

சென்னைக்கு 1979ல் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கொடுத்த அறிமுக கடித்தோடு வந்து சேர்ந்த இடம் உலகின் முதன் முதலாக சமஸ்கிருதத்தில் படமெடுத்த ஜி.வி. ஐயரின் இல்லம். அவரது வீட்டின் அவுட்ஹவுசில் கல்லூரி தோழர் தேவதாசோடு வாசம். வந்து சேர்ந்த அன்றே, பூமணி மூலம் சோவியத் கலாசார அரங்கில் போயிருந்தபோது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நூற்றாண்டு விழாவில் வண்ண நிலவனோடு சேர்த்து, "நீங்கதானே நம்பியண்ணாச்சி" என்று கேட்டு அறிமுகமானேன்.

விக்ரமாதித்யன் குறித்த முன் படிவத்தை கௌரிஷங்கரும், தா. மணியும் ஏற்படுத்தியிருந்தனர். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நெல்லையில் அவர் தொடர முடியாது விட்டுவிட்ட மார்க்கெட்டிங் ரிசர்ச் பணியை தொடர்ந்தபடி நான் சென்னை வந்தேன். சில மாதங்களில் பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி நவகவிஞர்கள் வரிசையில் விக்ரமாதித்யன் கவிதை தொகுப்பும் வெளியிட கேட்கப்பட்டது.

தி.நகரில் இருந்த சாரித்தெரு கார்க்கி நூலக மொட்டை மாடியில் சிகரெட் பிடித்தபடி சமயவேல் தான் "ஆகாசம் நீலநிறம்" என்ற தலைப்பு தான் சரியாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். அப்போது நானும் உடனிருந்தேன்.

நானும் அவருமாக பல பத்திரிகைகளில் ப்ரிலேன்சராக பணிபுரிந்தோம். பல்வேறு நபர்களை பிரமுகர்களை குறிப்பாக தேவநேய பாவணர், பெருஞ்சித்திரனார், மே.வி. வேணு கோபால பிள்ளை, அப்பாதுரையார் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றோம். திடீரென ஒருமுறை மூத்த பத்திரிகையாளர் மறைந்த பத்திரிகையாளர் கார்க்கியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவர் தான் தராசு என்ற பத்திரிகை கொண்டு வருவது குறித்து பரிந்துரைத்தார். அவர்கள் நடத்திய திரைச்சுவைக்கு விக்ரமாதித்யனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியான கவிதை நூலை மூர்மார்க்கெட்டில் விலைக்கு போட்டு ரூபாய் 75 பெற்று இளையராஜா சிறப்பிதழ் சிறப்பாகச் செய்து கொடுத்தோம். அதில் எங்களுக்கு கிடைத்தது வெறும் 275 கூட இருக்காது. ஆனால் நாங்கள் சந்தித்த சினிமாக்காரர்களிடம் ஆளுக்கு நூறு வாங்கியிருந்தால் கூட எங்களுக்கு ஆயிரம் கூடக் கிடைத்திருக்கும். அந்த சிறப்பிதழை அந்த இசையரசர் வலது கையால் வாங்கி இடது புறம் இருந்த தனது உதவியாளரிடம் புரட்டிக்கூட பார்க்காமல் கொடுத்துவிட்டார் என்பது தான் பெருத்த சோகம்.

2 ரூபாயோடு நண்பர் ஒருவரை உதவி கேட்கப் போய் அண்ணாநகரில் அவர் இல்லாததால் நடந்தே தி.நகருக்கு திரும்பினோம். ஒரு புது வருடப்பிறப்பன்று ருத்ரய்யாவின் அலுவலகத்திலிருந்து தி.நகருக்கு மழையில் நனைந்தபடி நடந்தே திரும்பியிருக்கிறோம். இன்னொரு முறை வண்ணதாசன் சகோதரர் வீட்டிலிருந்து குரோம்பேட்டை அஸ்தினாபுரம் என்று நினைவு திரும்ப நடத்தே வந்திருக்கிறோம். இந்த நேரங்களில் காசு இல்லை என்றது ஒருபுறம்மொன்றலும் அதிகமாகப் பேசியது, இலக்கியம் குறித்து தான். நல்ல நூல்களை படிப்பதை வேள்வி போல எனக்குள் ஏற்படுத்தியவர், விக்ரமாதித்யன்.

நேஷனல் புக்ட்ரஸ்ட் புத்தகங்களை (நீலகண்ட பறவையைத் தேடி, அக்னிநதி, சோரட் உனது பெருகும் வெள்ளம், சுந்தரனும் சுந்தரிமார்களும் பாத்துமாவின் ஆட்டுக்குட்டி, காலம், சமகால மலையாள சிறுகதைகள் ஒரு லட்சிய இந்து ஹோட்டல், ஒரு கங்கை பருந்தின் சிறகுகள், கவிஞன்) இப்படி தேடித்தேடி படித்தோம். பல மாநில சூழலையும் அதிலிருந்து உள்வாங்கினோம். கூடுதலாக இந்தியாவில் ஒடும் எல்லா நதியிலும் ஆதிசங்கரா படப்பிடிப்புக்கு சென்ற போது குளித்த அனுபவம் எனக்குண்டு.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது கவிதைகள் இடம் பெற்ற புத்தகத்தை பழைய புத்தக கடையில் போட்டு பணம் பெற்று செய்தி சேகரிக்க செலவழித்திருக்கிறோம். பால குமாரனிடம் அவர் டிக்டேச் செய்ய, நான் எழுத தினமும் அப்போதே 35 ரூபாய் கொடுப்பார். அதை வாங்கி வந்து இருவரும் சாப்பிட்டிருக்கிறோம். இரண்டு டீயும் இரண்டு சிகரெட்டும் கடன் வாங்கி சிகரெட் அட்டையில் எழுதப்பட்ட ஐடியாக்கள் தான் பின்னால் தராசு பார்மெட்டாக மாறியது.

வாழ்வதற்கான போராட்டத்திலும், வாழ்வை கவிதையாக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர் விக்ரமாதித்யன்! அவர் குடித்த ஒரு சொட்டு மதுபானம் கூட அவருக்கு கவிதை தராமல் வீணாகியதில்லை என்பதை சாட்சியாக இருந்து பார்த்திருக்கிறேன்.

பத்திரிகை அலுவலகங்களின் விவாதங்களில் என்னை முன் நிறுத்துவதை விக்ரமாதித்யன் தொடர்ந்து செய்து வந்தார். இப்படித்தான் நான் நக்கீரன் ஆசிரியர் ஆனதும் கூட. (பத்திரிகையே வேண்டாம் என்று அன்று நான் முடிவெடுத்திருந்தபோது நானே ஆசிரியர் ஆனது வேறொரு தனியான கதை).

நாங்கள் பணியாற்றிய பத்திரிகை நிறுவனங்களில் என்னை முன்னிலைப்படுத்துவதை அவர் ஒரு கடமையாகவே எடுத்துக் கொண்டு செய்தார். இதனால் பலர் விமர்சனத்திற்கும் ஆளானார். பத்திரிகைகளுக்காக நாங்கள் இருவருமே ரீரைட் செய்ததை அல்லது ரிப்பேர் செய்ததை வைத்து இருவரையும் இறந்த பின் கொளுத்தலாம். அந்த அளவுக்கு எழுதிவிட்டோம்.

வாழ்க்கையை கவிதையாக்குவதற்காக வாழ்க்கையை தொலைத்துவிட்டு கவிஞனாக நிற்கிறார்! கவிதைகள் அவரது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது. எனக்குத் தெரிந்து யாரையும் அவர் எதிரியாக கருதியது கூடக் கிடையாது. கசப்பு இனிப்பு கருப்பு வெளுப்பென்ற எந்த விதமான தீர்க்கமான முடிவும், எது குறித்தும் அவருக்கு கிடையாது.
எல்லாமே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். சமூகம் அப்படித்தானே இருக்கிறது என்ற மனோபாவமுடையவர்.

என்னளவில் சிறுசிறு பொருளியல் சார்ந்த இலக்குகளை நிர்ணயித்து வெற்றிகண்டு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கண்டு கொண்டேயிருக்கிறேன். இலக்குகளோடு பயணித்தாலும் இறுதியில் கிடைப்பது வெறுமையே! இலக்கின்றி பயணித்தாலும் இறுதியில் கிடைப்பது வெறுமையே. பயணம் மட்டுமே பயணிக்கு சந்தோஷம், சாகசம், துக்கம் பதிவேடு. இத்தனைகால இருவரது பயண முடிவும் தலைகீழ் விகிதங்கள் ஆனாலும் இருவருக்குமான விடை பூஜ்யம் தான்!

வண்ண நிலவன் வீட்டிற்கு இருவரும் பல இரவு குடித்து விட்டுச் சென்று சாப்பிட்டுவிட்டு, காசு வாங்கி வந்ததுண்டு. சில நேரம் கவிஞர் நா. காமராசன் வீட்டிற்கும் அவர் அழைத்துச் செல்வதுண்டு. அப்படி குடித்த நேரங்களில் அவர் சொல்லச் சொல்ல நான் எழுதிய கவிதைகள் பல உண்டு. அப்படி அவர் சொல்லும் போதே சில திராவிடத்தனமான வரிகளை வேண்டாமென்று விலக்கிவிடுவேன். இப்படி பல வரிகளை நீக்கி நீக்கியே அவரது கவிதைகளை எடிட் செய்யும் நுட்பம் பெற்றேன். இப்படித்தான் அவரது பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை எடிட் செய்தேன். சில நேரங்களில் விமலாதித்த மாமல்லன் உடனிருந்திருந்தான். அவரது ஒட்டு மொத்த தொகுப்பை எடிட் செய்ய கிட்டத்தட்ட 3 மாதம் எடுத்துக் கொண்டேன். அப்போது நான் எழுதிய "பேசாமல் ஒரு நாளும்" என்ற தொகுப்பு அச்சு அசலான விக்ரமாதித்யன் பிராண்டாக இருந்தது, அதனாலேயே இரண்டு குறு நாவல்கள் எழுதும் பணியில் என்னைத் திணித்துக் கொண்டு முழுமூச்சாக அவரது நடையிலிருந்து விலகினேன்.

இருவரும் பத்திரிகையாளர்களாக பயணத்தாலும் அவர் திடீர் திடீரென அதிலிருந்து விலகி விட்டு விடுதலையாகிவிடுவார். அவர் தொடர்ந்தாற் போல ஒராண்டுக்கு மேல் எந்த நிறுவனத்திலும் பணியாற்றியதாக எனது நினைவில் இல்லை. இருவரும் போதையில் சண்டையிட்டு கட்டிப்புரண்டாலும் மறுநாள் காலையிலேயே இருவரும் ராசியாகிவிடுவது, பல நண்பர்களிடையே இன்றும் வியப்பாகப் பேசப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள இலக்கிய நண்பர்கள் அவரைப் பார்க்கும் போது என்னை விசாரிப்பதும், என்னைப் பார்த்தால் அவரை விசாரிப்பதும் இன்று வரை தொடர்கிறது. தஞ்சைக்கு நண்பர் உமாசந்திரன் திருமணத்திற்கு நான் சென்றேன். நக்கீரனில் ஆசிரியராக இருந்த நேரம் அந்த வாரம் உதயம் பத்திரிகையில் ல.சா.ரா. அவரது அம்மா பற்றி எழுதியிருந்தார். மது குடிக்கும் போது நான் அதைப்பற்றி விக்ரமாதித்யனோடு பேசினேன், "பாருங்கள்! அவங்கம்மாவ பசு மாதிரி எழுதியிருக்கார். எங்கம்மா வோடதான் நான் குடிக்கவே பழகினேன்" என்று சொன்னேன். "தம்பி, இதைத்தான் நீங்க எழுதனும் கவிதையா நல்லா வரும்" என்று பேசியபடி அவரும் என்னோடு உடுத்திய உடையோடு ரயிலேறிவிட்டார். அப்போது தம்பி நக்கீரன் காமராஜீம் உடனிருந்தார். டாய்லட் அருகே அமர்ந்து குடித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம். இப்படித்தான் எனது முதல் தொகுதி வரக் காரணமானது. அது தான் சந்நதம்! அவர் சொன்னது போலவே இன்றும் பலரும் எனது அம்மா கவிதையைக் குறிப்பிட்டே என்னிடம் பேசுகிறார்கள்.

எனது கவிதைகளால் அல்லாமல், விக்ரமாதித்யன் அவரது கவிதை நூல்கள், கட்டுரைகளில் அடிக்கடி என் பெயரை குறிப்பிட்டதால் இலக்கிய வட்டாரத்தில் எனக்கு பெரும் பரிச்சயம் ஏற்பட்டது. விக்ரமாதித்யன் எதுவும் பெரிதாக நடந்துவிடாது என்று இலக்கற்று பயணித்து சில நல்ல கவிதைகளை சேகரித்து தந்திருப்பவர். இருவருக்கும் பயணம் மட்டுமே பொது.
அவருக்கு இலக்கில்லாமல், எனக்கு சிறுசிறு இலக்குகளோடு. பயணத்தில் முடிவில் இருவரும் கண்டடைந்தது என்னவோ வெறுமை தான். பயணம் மட்டுமே பயணிக்கு சந்தோஷம், சாகசம், துக்கம் பதிவேடு. இத்தனை கால இருவரது பயண முடிவும் தலைகீழ் விகிதங்கள், ஆனாலும் இருவருக்குமான விடை பூஜ்யம் தான்!

o

03 ஆகஸ்ட் 2010

எல்லோர்க்கும் பெய்யும் மழை

எல்லோர்க்கும் பொதுவான
இறையை
இருபது ரூபாய் கொடுத்து
சிறப்பு தரிசனத்தில்
சந்தித்து வந்தோம்
ஓரிடத்தில்.

நான்கு மணிநேரம்
நீண்ட வரிசையில்
காத்திருந்தும்
நான்கு மணித்துளிகளே
பார்க்கும்படி
நெட்டித் தள்ளப்பட்டோம்
வேறோரிடத்தில்.

இரண்டு இடத்திலும்
எல்லோர்க்கும் பொதுவாய்
பெய்து கொண்டிருந்தது
மழை.

0