19 டிசம்பர் 2011

இரண்டு கவிதைகள்

(19-12 -2011) தேதியிட்ட உயிரோசையில் வெளியானது.



இந்த நாள்

மூன்று முகங்களுமே எதிர்ப்படவில்லை.
இரண்டாவது வந்திருக்கலாம்.
ஒன்று கூட
இல்லாமல் போகுமளவுக்கு
என்னதான் செய்ததிந்த
ஒரு நாள்.

o

புகைப்படத்தில்

என்னையும் உன்னையும் அழைத்தவன்
அவனை அழைக்கவில்லை.
என்னையும் அவனையும் அழைத்த நீ
இவனை அழைக்கவில்லை.
உன்னையும் இவனையும் அழைத்த நான்
அவனை அழைக்கவில்லை.
நான் நீ அவன் இவன்
எல்லோரும் சேர்ந்திருக்கும்
இந்தப் புகைப்படத்தை
என்ன செய்வதிப்போது
என் இனிய நண்பனே.

o

17 டிசம்பர் 2011

தமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நேர்காணல்

01.05.10

1970கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய காலம். கி.ரா., வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், விக்கிரமாதித்தன், கலாப்பிரியா, தேவதேவன் என்று அன்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பயணித்த படைப்பாளிகள் வாழ்ந்த காலம். தமிழ் சிற்றிதழ்களின் பொற்காலம். கவிஞர் சமயவேல் இக்காலத்தின் கடைக்குட்டி. 1970கள், 1980களில் முக்கிய இலக்கியத் தலங்களாக மதுரை, சென்னை, நெல்லை, கோவில்பட்டி ஆகிய இடங்கள் இருந்தன. தனது வாழ்வின் மிக இளமையான காலத்தை இந்த இடங்களில் வாழ்ந்தவர் சமயவேல். கூர்மையான இலக்கியப் பார்வையும், புதிய தர்சனங்களைக் கண்டுணர்தலும் இவரது ஆகிருதியை அப்போது உயர்த்துகிறது. காற்றின் பாடல், அகாலம், தெற்கிலிருந்து சில கவிதைகள்(தொகுப்பு) ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.

தீராநதி: கடந்த மூன்று பத்தாண்டுகளின் தமிழ்ச் சூழல் இயக்கத்தில் தீவிர அரசியல், இலக்கிய விமர்சனம், கவிதை என்று பல்துறைகளில் தீவிர பங்கேற்பாளராகவும், கவனமான பார்வையாளராவும் இயங்கியுள்ளீர்கள். முதலில் கவிதையில் இருந்து தொடங்கலாம்.

சமயவேல்: எதிலிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். பேட்டி என்பதே தன்னைத் தீர்த்துக்கொள்வதுதான். நம்ம self. நாம என்னவாக இருந்தோம்; இருக்கிறோம் என்பதை revisit செய்வதுதான்.

தீராநதி: இன்றைக்குக் கவிதை என்பது (தலித்திய, பெண்ணிய, விளிம்புநிலை மக்கள் கவிதைகள் தவிர) அதிகம் வாசிக்கப்படாத, நீர்த்துப்போன வடிவமாகச் சுருங்கிவிட் டதாகத் தெரிகிறது. நகைச்சுவை குறித்து தாவோ கூறியது போல மூளையில் சிதறும் ஒரு பொறியாகவோ, அல்லது சித்தர்களின் வாழ்க்கை மற்றும் தத்துவ விசாரப் புலம்ப ல்களாகவோ கூட கவிதை இருப்பதில்லை.

சமயவேல்: கவிதை என்பது ஒரு நுட்பமான, ஆழமான ஒரு ஆளுமையைப் பாதிக்கிற ஒரு சிறு பொறி முதல் பெரும் காட்டுத் தீ வரையான ஒரு பெரிய விஷயம். நம்ம பாரதி, பாப்லோ நெருதா போல ஒரு தேசியத்தையே பாதிக்கிற காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை. புதுக்கவிதை ஒரு பிரவாகமாக பெருக்கெடுத்து ஓய்ந்தபின்னர், மூத்த கவிஞர்கள் எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதினார்கள். (உதாரணம்: தேவதேவன்) இளைஞர்கள் மூத்த கவிஞர்களை நகல் எடுத்துக் கொண் டிருந்தார்கள். தற்போதுதான் ஒரு நான்கு, ஐந்து ஆண்டுகளாக இளைஞர்கள் கவிதையில் புதிய சாளரத்தைத் திறந்துவிட்டுள்ளார்கள். பெண்ணியக் கவிஞர்களின் வருகை இதில் முதல் திருப்பம். மாலதி மைத்ரி, சுகிர்த ராணி, குட்டி ரேவதி போன்றோரின் பெண்ணியச் சொல்லாடல்கள் மூலம் தங்கள் குரலை அவர்கள் மீட்டெடுத்துள்ளனர். தலித்துகளின் குரல் தமிழ் இலக்கியத்தில் எப்போதுமே இருந்தது கிடையாது. இப்போது கவிதை மூலம் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

தீராநதி: 1980-களின் இறுதிப்போக்கில் அல்லது 1990-களில் தேவதச்சன், சமயவேல் போன்றவர்கள் ஒருவித எளிமையுடன் கூடிய அற்புதமான அமைதி கவிந்த கவிதைகளை எழுதத்தொடங்கினர். அதன் உள்ளுலகம் விகசிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. இது இப்போது இருக்கிறதா?

சமயவேல்: நான் கூறுவதை ஆண் மையச் சிந்தனையாகக் கூட கூறலாம். Passage Into Darkness என்ற நாவல் என்று நினைக்கிறேன். அது ஐரிஷ் பெண் எழுத்தாளர் எழுதியது. பெண் உலகத்தை முழுமையாக முன்வைக்கும் வகையில் அந்தப் படைப்பின் பயணம் விகசித்துக் கொண்டே செல்கிறது. டென்னசி வில் லியம்ஸ் படைப்புகள் அளவுக்குக்கூட பெண் உலகப் பிரச்சனைகள் இங்கு பேசப்படவில்லை. அவர்கள் உடல் மொழி என்பதை மட்டும் சுற்றிவருகிறார்கள் இல்லையா? இதை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எழுப்பும் அருவருப்பான கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே இவர்கள் நேரம் சரியாகிவிடுகிறது. இவர்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளனர். அவர்கள் நாவல் உலகுக்குள் செல்கிறபோது நீங்கள் சொல்கிற விகசிப்பு சாத்தியப்படுகிற வாய்ப்புகள் உள்ளன. அப்புறம், ஆண்கள் ம ட்டுமல்ல மொத்த சமூகமே அப்படித்தான் உள்ளது.

தீராநதி: நீங்கள் கூறுகிற பெண்ணிய, தலித்தியக் குரல்களைத் தாண்டி முழுமையான கவிதைகள் என்று என்ன வந்துகொண்டிருக்கின்றன?

சமயவேல்: யவனிகா ஸ்ரீராம் அரசியல் பிரக்ஞை உள்ள கவிஞராக இருக்கிறார். ராணி திலக் வாழ்க்கை உள்ளீடுகள், சாயல்களை உள்வாங்கி எழுதுகிறார். ஸ்ரீநேசன் வாழ்வின் பல்வேறு வண்ணங்களைக் கண்டடைந்து எழுதுகிறார். அய்யப்ப மாதவன், ஸ்ரீசங்கர் போன்றவர்களிடம் புதிய மொழி உள்ளது. லீனா மணிமேகலை பெண் ணியம், உடல்மொழி தவிர பாலியல் சுதந்தரம் பற்றி எழுதுகிறார். தற்போதைய தமிழ்க்கவிதைகளை possitiveஆகவே பார்க்கிறேன். புதிய இளைஞர்கள் பழைய பாதிப்புகளிலிருந்து விடுபட்டு, விடுதலையாகி, புதிய கவிதா மொழியைக் கண்டடைந்துள்ளனர்.

தீராநதி: இதில் மரபான தமிழ்க்கவிதையில் இருந்து எடுத்துக்கொள்வது எப்படி இருக்கிறது?

சமயவேல்: 2000 வருடத் தமிழ்க்கவிதை மரபில் தற்காலக் கவிதை எங்கே நிற்கிறது என்று விக்கிரமாதித்தன் கேட்கிறார். அதுபோலவா?

தீராநதி: நான் கேட்க விரும்புவது சங்கம் முதல் பாரதி வரை தொடர்ந்த தமிழ்க் கவிதை கன்னி விடாமல் தொடர்கிறதா? தமிழ் வாழ்க்கை சங்கக் கவிதைகளில் உள்ளது. சங்கக் கவிதைகளை வாசிப்பதுகூட இன்று சில கவிஞர்களுக்குப் பிரச்சனையாக உள்ளது. அது தேவையில்லை என்கிறார்கள். உலகக்கவிதை வாசிப்புமட்டும் போதாதா என்கிறார்கள். நான் மலினப்படுத்தப்பட்ட சந்தம், யாப்புகளைக் கூறவில்லை. 1970, 1980-களின் முக்கியக் கவிதைகள் என்பது மேற்கத்தியத் தத்துவங்களின் நகல்களாகத் தானே இருந்தது? மில்ட்டன், ராபர்ட் ஃபுரோஸ்ட், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, பைரன் என்று யாரையாவது பின்பற்றித்தான் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தோம். இ ன்று அதுபோல உலகக் கவிஞர்கள் இல்லாததுதான் தேக்கத்துக்குக் காரணமா?

சமயவேல்: 1970-களில் ஏற்பட்ட நெருக்கடியே இதுதான். கவிதையில் எந்த அளவு தத்துவம் இருக்கலாம்; இருக்கக்கூடாது என்ற விவாதம் எழுந்தது. தேவதச்சன், ஆனந்த் போன்றோர் அப்போது தத்துவத்தை நேரடியாக எழுதிக்கொண்டிருந்தார்கள். தற்போது தேவதச்சனின் குருவி கவிதைகள் எளிமையையும், அமைதியையும் கொண்டுள்ளன. அற்புதமானவை அவை. இருந்தாலும் கவிதைக்கும் தத்துவத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. வாழ்க்கையின் நித்தியமான உண்மைகளைக் கவிதைகள்தாம் சிறப்பாகக் கவனத்தில் கொள்கின்றன. வாழ்க்கையில் உள்ள புரியாத பகுதிகளைக் கொள்வதைத்தான் கவிதையும், தத்துவமும் செய்கின்றன. தற்போதும் அரசியல் கவிதைகளை எழுதித்தான் தீரவேண்டும். யவனிகா ஸ்ரீராம் போன்றவர்கள் அதைத் தொடங்கியுள்ளனர்.

தீராநதி: தற்போது உலகக்கவிதை என்னவாக இருக்கிறது?

சமயவேல்: தாவோ, ஜென் பாதிப்பில் சிலர் எழுதுகிறார்கள். உலகக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடிய யாரும் இன்று இல்லை. துணை உலகக்கவிஞர்கள்தான் உள்ளனர்.

தீராநதி: இதற்கு, மேற்கத்திய தத்துவங்கள் தோல்வியடைந்து வருவதும் ஒரு காரணமா? தற்போது உலகளாவிய தத்துவ உள்ளொளி என்று ஒன்று இல்லை அல்லவா?

சமயவேல்: தற்போது எல்லாம் பொட்டலம் கட்டும் தன்மையாகிவிட்டது. உள்ளீடற்ற, சாராம்சமில்லாத கூடாக உலகம் ஆகிவிட்டது. ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத் தையும் பயன்படுத்தித் தூக்கியெறிந்து கொண்டிருக்கிறோம். இதனால் அரசியல், தத்துவம், இசை எல்லாம் பயனற்றதாகி விட்டது. அப்புறம் செவ்வியல் காலம் முடிந்து வி ட்டது. பின் நவீனத்துவத்தில் எல்லாம் தகர்க்கப்பட்டுள்ளது. கட்டுடைப்பு எங்கும் நிகழ்ந்துள்ளது. இதற்குமுன் உடைக்க முடியாத நுண் அலகுகள் எல்லாம் உடைந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து புதிய மரபுகள் தோன்றும். தற்போது உலகம் முழுவதுமே ஒரு திரவ நிலை நிலவுகிறது. தமிழும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இதிலிருந்து solid ஆன ஒன்று உருவாகும்.

தீராநதி: ஆனால், இன்று தலித்தியம், பெண்ணியம் போன்ற அடையாள அரசியல் காலத்தில் இன்னும் ஓராயிரம் நல்ல கவிதைகள் முகிழ்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்ப துபோல் தோன்றுகிறதே? அப்புறம், பல ஆண்டுகள் முன் பிரமிள் புதிய கவிதை இயக்கத்தைத் தொடங்கினார். இன்று அது தொடரவில்லை. புதிய கவிஞர்கள் பிரமிளை எவ்வாறு வாசிக்கிறார்கள்?

சமயவேல்: இன்று நிறையபேர் அவரைக் கொண்டாடுகிறார்கள். தத்துவத்தையும், அறிவியலையும் அழகியல் பூர்வமாகக் கவிதையில் இணைக்கும் முயற்சியில் பிரமிள் ஈடு பட்டார். அவர் அதி கவி. மிக முக்கியமான அறிவியக்கத்தின் சுடர் தோன்றி மறைந்துவிட்டது. உலகக் கலாசாரங்களின் ஒருமித்த குரலாகக் கவிதையை மாற்றமுடியுமா என்று முயற்சித்தார். எகிப்து, ரோமானியக் கலாசாரங்களில் இருந்து தனது அழகியலை எடுத்துக்கொண்டார். அவரது ஓவியங்களில் இதை வெளிப்படையாக அவதானிக்கலாம். அவரது கவிதைகளிலும் இது உள்ளது. தமிழ்க்கவிதை மரபுக்கு இது புதுசு. ஆனால், தமிழின் குழுவாதம் அதை வீழ்த்திவிட்டது. அவரது தீவிர கவிதை இயக்கத்தை அது திசை திருப்பிவிட்டது. அவருக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே காலத்தை விரயம் செய்துவிட்டார். எதிர்
விமர்சனங்களால் தனிமைப்படுத்தப்பட்டார்.

தீராநதி: இன்று அனைத்து கருத்தாக்கங்களுக்கும் அதிகார மையங்கள் உருவாகி விட்டன. தற்போது அப்படி ஒரு ஆளுமை தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதா?

சமயவேல்: பலவீனங்கள் மலியும்போதுதான் அதிகார மையங்கள் உருவாகின்றன. அரசியல் மட்டுமல்ல. அகடமிக் சைடிலும் அதிகார மையங்கள் உருவாகியுள்ளன.

தீராநதி: இன்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுமையான ஆளுமைகள் இல்லையே. Nomfiction எழுதுபவர்கள்தான் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுமையான ஆளுமையாக உள்ளனர். படைப்பாளிகளில் இத்தகைய ஆளுமைகள் இல்லையே?

சமயவேல்: எனக்கு அப்படியும் தோன்றல. ஏன்னா, அதையும் யாரும் வாசிப்பதில்லை. அ. மார்க்ஸ். எஸ்.வி.ஆர் போன்றவர்களுக்கு பொது வாசகர்கள் இல்லையே. வே ண்டுமானால் ரசிக மனோநிலை இருக்கலாம். இதனால் குட்டி, குட்டி அதிகார மையங்கள் உருவாகி வருகின்றன. இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் உட்காரும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதைத்தான் தற்போதைய பலவீனமான நிலை என்று சொல்கிறேன். ஆனால். 1970-களில் இத்தகைய நிலை இல்லை. அப்போது முழு மையான ஆளுமைகள் இருந்தன. அது வசந்தகாலம் என்றே நினைக்கிறேன். அன்றைய படைப்பு ஆளுமைகளில் ஒரு ஒன்றிப்பு நிலவியது. அது சிறு பத்திரிகைகளின் காலம். அங்கு பரந்தாமன் போன்றவர்கள் சிற்றிதழ்களுக்காக உயிரைக் கொடுத்தார்கள். இடதுசாரி அரசியல் வீச்சு ஒரு பக்கமும், அதற்கு நிகரான தீவிர அழகியல் வீச்சும் நிலவியது. இரண்டுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவியது. அந்த 1970-களின் காலம் திரும்ப வராதா என்ற ஏக்கம் இருப்பதாக கல்யாணிஜிகூட அண் மையில் எழுதியிருந்தார்.

தீராநதி: நீங்கள் 1970-கள் காலத்தைச் சேர்ந்தவர் இல்லையா? அதன் நினைவுகள் ...

சமயவேல்: நான் அக்காலத்தின் கடைக்குட்டி. அப்போது பரஸ்பர புரிதல் நிலவியது. சுந்தர ராமசாமி, நகுலன் சண்டைகள்கூட மிகப் பூடகமாக நடந்தது. முருகேச பாண் டியன், நான் போன்றவர்கள் நாகர்கோயில் போய் சுந்தர ராமசாமியைப் பார்த்துவிட்டு, திருவனந்தபுரம் போய் நகுலனையும் பார்த்து வருவோம். எங்களுக்கு எந்த நெ ருக்கடியும் அப்போது இருந்தது இல்லை. இப்போது அப்படி நினைத்துப் பார்க்கமுடியுமா? நீல பதமநாபன், வண்ணநிலவன், கி. ராஜநாராயணன் போன்றவர்கள் பிரியமானவர்களாக இருந்தார்கள். அன்பு என்பது அப்போதைய முக்கியமான விழுமியமாக இருந்தது. அந்த பெருங்கலாசாரத்தில் இல்லாத அன்பு. அதற்கான நிரந்தர ஏக்கம் அப்போது அனைவரது மனசிலும் நிறைந்திருந்தது. அது பேரன்பு. அதை வேறு எப்படியும் சொல்லமுடியாததாக இருந்தது. அதைத்தான் அப்போது அனைத்து படைப்பாளிகளும் கொண்டுவர முயற்சி செய்தனர். இதற்காகத்தான் இதில் வெற்றி பெற்ற வண்ணநிலவன், வண்ணதாசன் போன்றோர் பின்னர் கிண்டல் செய்யப்பட்டனர். எனது சிறிய கவனிப்பு என்னவென்றால் வண்ணநிலவன், வண்ணதாசன் கதைமொழியை இன்றுவரை யாராலும் தாண்ட இயலவில்லை. அவர்களை எப்போதுமே நிராகரி த்துவிடமுடியாது, மிகப்பெரிய படைப்பான ஆழி சூழ் உலகுகூட வண்ணநிலவன் கதைமொழியைக் கடக்க முடியவில்லை. இன்று சரியான விமர்சனம் இல்லாததுதான் இதற்குக் காரணம். இதனால் சரியான படைப்புகளை அடையாளம் காட்ட யாரும் இல்லை. 1970-களைச் சேர்ந்தவர்களில் யாரும் யாரையும் நிராகரிக்காத தன்மை இருந் தது. ‘அவரும் 10 நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறாரய்யா’ என்ற கருத்து ஒவ்வொரு படைப்பாளிமீதும் இருந்தது. கருத்து வேறுபாடுகளைச் சேர்த்து அங்கீகரித்தனர். நானும் வண்ணநிலவனும் மிக நெருக்கமாகப் பழகினோம். ஒருவர் படைப்புகளை ஒருவர் என பரஸ்பரம் புகழ்ந்து கொண்டது கிடையாது. வண்ணதாசனும், கலாப்பிரியாவும் தங்களுக்குள் பரஸ்பரம் சொரிந்து கொண்டது இல்லை. துதிபாட மாட்டார்கள். படைப்புகள் பொதுவெளியில் இருந்தன. நாங்கள் படைப்புகளைப் பொது வெளியில் பார்த்தோம்.

தீராநதி: 1970-களின் கலையின் மையம் அன்பு என்று கூறுகிறீர்கள். தற்போது அப்படி ஒரு focus இருக்கிறதா?

சமயவேல்: தற்போது சூன்யம்தான் நிலவுகிறது. ஏதாவது குப்பையாகவாவது கரை ஒதுங்கவேண்டுமே? அப்படி ஒண்ணையும் காணோம். அன்பு என்பது நிலப்பிரபுத்வக் கூறாக இருந்தது. இன்று அத்தகைய சர்வதேச கூறு இல்லை. ஆனால், அரசியல் அப்படியேதான் இருக்கிறது. நான் கட்சி அரசியலைக் கூறவில்லை.

1. நுகர்வுக் கலாசாரம்
2. ஊடகத்தின் அசுர வளர்ச்சி
3. பண்பாட்டு இயக்கங்கள் இல்லாதது
4. தகவல் தொழிநுட்பம்
ஆகிய 4 புதிய கூறுகள் சூன்யத்தை உருவாக்கிவிட்டன. மீண்டும் 70-களின் காலத்துக்கே திரும்பலாம். அன்றைய செவ்வியல் இயக்கம் நியாயமானது. இன்று அதற்கான வாழ்க்கைத் தொடர்ச்சி இல்லை. பெரும் ஆளுமைகள், படைப்புகள் வெளிவருவதற்கான வாழ்க்கை இல்லை. வாழ்க்கை சிதறுண்டு கிடக்கிறது. முகம் இழந்து, விளிம்பு நிலையையும் தாண்டிய கேவலமான ஸ்திதி நிலவுகிறது. இந்த வாழ்க்கை வாழ்வதற்கும், எழுதுவதற்கும் உகந்ததாக இல்லை. கவிதை எப்போதும் வாழ்க்கையின் உள்பகுதி பற்றி ஆத்மார்த்தமாக எழுதுகிற அழகியலைக் கொண்டது. அது 1970-களுக்குப்பின் காணாமல் போய்விட்டது. 1990-கள் வரைகூட இது இருந்தது.

இன்று எல்லா இயக்கங்களும் சோரம் போய்விட்டன. இன்று தீவிரமான, மிதமான இயக்கம் எது என்று எதுவும் யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று 4 இயக்கங்கள் வருகின்றன. தலித் இயக்கம் என்கிறார்கள். எல்லாம் சில்லுண்டியாக இருக்கிறது. குறிப்பிட்டு எதையும் சொல்லமுடியவில்லை. எல்லாவற்றுக்கும் இது பொருத்தமாக இ ருக்கிறது. இச்சூழலில் பெரும் படைப்பை எதிர்பார்க்க முடியாது. எல்லாரும் ஒவ்வொரு நாளும் சோரம் போகிறோம். 1947 இல் தொடங்கிய ஜனநாயகம் மந்தத்தன்மையை ஏற்படுத்திவிட்டது. அதுதான் சிறந்தது என்று ஆழ்மனதில் பதிந்துவிட்டது. இன்று யாருமே தமது சொந்த வாழ்க்கையைப் பணயம் வைக்கத் தயாராக இல்லை. பழைய வாழ்க்கையில் இத்தகைய தியாகிகள் இருந்தனர். ஆனால், ஒரு வீட்டுக்குள் வாழ்பவர்கள் மத்தியில் கூட இன்று விட்டுக்கொடுத்தல் இல்லை. அப்படியிருக்கும் போது பொதுச் சொல்லாடல்கள் மூலம் எல்லாப் பிரிவுகளையும் ஊடறுத்துப்போவது சாத்தியமில்லை. ஊடகத்தின் பெருவளர்ச்சி மொத்த நேரங்களையும் பிடுங்கிக்கொண்டு விட்டது. எப்போதும் ஏதோ ஒரு சேனல் நமது ஏதாவது ஒரு நேரத்தை எடுத்துக்கொண்டு விடுகிறது. நகைச்சுவைக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்து மொத்த சமூகமும் sணீபீவீst சமூகமாகிவிட்டோம் இல்லையா?. இல்லையென்றால் வடிவேலு அடி வாங்குவதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? இதனால்தான் மு ழுமையான ஆளுமைகளைவிட சிதறுண்ட சிறு ஆளுமைகள்தான் சாத்தியம் என்கிறேன். அதற்கு அடையாளமாக அவர்களின் புது மொழி உள்ளது. இது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தீராநதி: இந்தப் புது மொழி என்பது சில பெண்ணியக்கவிஞர்கள் தவிர வேறு யாரிடம் நம்பிக்கை ஏற்படுத்துகிறது? மொத்தச் சூழலுமே மிகச்சிறிய வரம்புக்குட்பட்டதாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகால சமூக வாழ்க்கை பெரும் மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது. ஏராளமான கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. இருந்தாலும் சாதிய அடையாளம் சார்ந்த விழுமியங்கள்தான் (நான் இங்கு தலித் சாதிகளைக்கூறவில்லை) இன்று படைப்பாளிகளிடம் முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது.

சமயவேல்: தமிழ் வாழ்க்கையின் நுண் அலகுகள் சாதியால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் துவம்சம் செய்யவேண்டும். அத்தகைய நினைப்புகளும் இருக்கிறது. ஆனால், குடும்பம் என்ற கேவலமான யூனிட்டைப் புனிதமாக பேணிக்காக்கிறோம். இத்தகைய நுண் அலகுகளையும் அடித்து நொறுக்கவேண்டும். இதை இலக்கியம்தான் செய்யமுடியும். தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலில் சோரம் போகும் அம்மாவை இயல்பாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் எத்தகைய பெண்ணையும் புரியும் மனநிலையை நான் பெறுகிறேன். இத்தகைய soft எழுத்துகள் வரவேண்டும்.

தீராநதி: ஆண் எழுத்தாளர்கள் பெண்ணிய எழுத்துகளையும், பிற சாதிகளில் பிறந்த எழுத்தாளர்கள் தங்கள் சாதிகளைத் துறந்து தலித் எழுத்துகளையும் தோளில் சுமந் தால்தான் இது சாத்தியம். எழுத்தில் இத்தகைய intersections எப்போது சாத்தியம்?

சமயவேல்: அப்படியான காலம் நெருங்கிக் கொண்டுதான் உள்ளது. பெண்ணிய எழுத்தாளர்கள் மொத்த வாழ்க்கையைப் பதிவு செய்யத்தொடங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

தீராநதி: உரையாடலை இப்படி மாற்றலாம். ஒரு ஆண் தனது பாவத்துக்கு விமோசனம் தேடுவது போல தனது ‘புத்துயிர்ப்பு’ நாவலை டால்ஸ்டாய் ஆரம்பிக்கிறார். பாவவிமோசனம் தேடும் பயணம் 800 பக்கங்களுக்கு விகசிக்கிறது. இப்படி ஒரு தேடல், பயணம் தமிழில் இல்லாமல் போனது ஏன்?

சமயவேல்: அது இல்லாததால்தானே தமிழில் படைப்புகள் மொக்கையாக இருக்கின்றன. மொக்கை என்ற புதிய சொல்லையே தமிழ் நாவல்கள் உருவாக்கிவிட்டன. மொக்கை என்ற சொல் useless என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சரி, சமுதாயம் மொக்கையாக இருந்தால் அதைத்தானே எழுதுவார்கள். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அதைத்தான் எழுதுகிறார்கள். ஆனால் இது மிகப் பெரிய வாசக வன்முறை. 1000, 2000 பக்கங்கள் எழுதுகிறார்கள். அதை முழுதாகப் படித்து என்னதான் ஆகப்போகிறது. பிறகு, ஏன் வரலாற்று நாவல்களை எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் வரலாறு எனக்குச் சுமையாகத்தான் இருக்கிறது.இது மலத்தில் அரிசி தேடும் முயற்சிதான். நவீன வாழ்க்கை பெரும் படைப்புகளைத் தருவதற்கானதாக இல்லை. உலக அளவிலும் வரலாற்று நாவல்கள்தான் எழுதுகிறார்கள். இதை மீறுவதற்கு பெரும் வீரியம் வேண்டும். நாம் நமது பால்ய காலத்தில் வாசித்த பொன்னியின் செல்வன் ஒரு ரொமாண்டிசம். அப்போது வரலாற்று நாவலே எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன். அரசு ஆவணக்காப்பகங்களில் கெசட்டியர்களைத் தேடிக்கண்டுபிடிக்கிறார்கள், மியூசியங்களில் எலும்புக்கூடுகளைத் தேடுவதைப்போல. பின் எலும்புக்கூடுகளுக்கு மேல்பூச்சு பூசி வரலாற்று நாவல்களாக உலவவிடுகிறார்கள். creativity கூடக்கூடப் பக்கம் குறையும். படைப்பூக்கத்தின் வறுமைதான் பக்கங்கள் அதிகரிப்பதன் காரணம். இன்றைய இளைஞர்கள் இந்த மொக்கைகளை வாசிக்கப்போவதில்லை. இப்போது you tube காலம். அவர்கள் கைகளில் அனைத்துத் தகவல்களும் உள்ளன. அவர்களை எவ்வாறு அணிதிரட்டுவது என்பதுதான் இன்றைய படைப்பின் சவால். இன்றைய நவீன வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவல் எழுதினால் போதும் நவீன சிக்கல்கள் அனைத்தையும் கொண்டுவந்துவிடமுடியும்.

தீராநதி: 60 நொடி விளம்பரப்படத்தில் மனிதனின் பரிணாம வளர்ச்சி மலினப்படுத்தப்பட்ட வடிவில் காண்பிக்கப்படுகிறது. தகவல்கள் என்பது ஊடகச் சாயம் பூசப்பட்டு கு ழந்தைகளைச் சென்றடைந்து கொண்டே இருக்கின்றன. இன்று பூமியில் ஒரு பெரும் நிகழ்வு நிகழ்ந்தால் அடுத்த 5 நிமிடங்களில் அதன் பூர்வ காலத் தகவல்கள் முதல் அனைத்தையும் பெற்றுவிடமுடிகிறது. இவ்வாறு ஊடகங்கள் வளர்ந்துள்ள நிலையில் எழுத்தில் விவரணைகளுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இணையம் வந்த பிறகு வாசிப்பு scaning ஆகிவிட்டது. இதுதான் புதிய எழுத்தின் சவால் என்று நினைக்கிறேன்.

சமயவேல்: அவ்வாறு ஒரு நிமிடத்தில் ஸ்கேன் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆயிரம் பக்கத்தில் மொக்கை நாவல் எழுதுகிறார்கள் போல. டூமாஸ் கேலி செய்த வரலாற்றைத்தான் அவர் காலத்துக்கும் பின்னர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு தீவிரமாக மறுக்கிறேன் என்றால், வரலாறு என்பது எப்போதும் சார்பு நிலை கொண்டது. ஆளும் வர்க்கம் சார்ந்ததாகவே வரலாறு உள்ளது. புனைவுதான் இதைவிட மிகவும் சிறந்தது. சிலப்பதிகாரம் போன்ற பெருங்கதையாடல்கள் தன்னளவில் மிக வும் அற்புதமாக உள்ளது. அது மிகச் சிறந்த புனைவு. பிறகு இவர்கள் அதை ஏன் மீண்டும், மீண்டும் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. அகலிகையை கு.ப.ராவும், பு.பி.யும் எழுதினார்கள். அது அசலான கதைகள். அதில் ஒரு விஷயம் உள்ளது. அது வரலாற்றுப் புனைவு என்றும் சொல்லமுடியாது. அதில் வேறு ஒரு கேள்வி உள் ளது. ‘கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே..’ என்று பு.பி. பொன்னகரத்தில் எழுதியதை மீறி, சொல்ல என்ன இருக்கிறது.

தீராநதி: வரலாற்றுப் புதினம் என்பது recreation என்கிறார்கள். அப்படியானால் வால்மீகி ராமாயணம் குறித்த அக்காலத்திய சரியான விமர்சனம்தான் கம்பராமாயணம். அதனால்தான் ஜீவா போன்ற நாத்திகர்கள் அதற்குள் travel செய்ய முடிந்தது. அதுபோன்ற travel ஆக இன்றைய வரலாற்றுப் புதினங்கள் இருக்கிறதா?

சமயவேல்: நிச்சயமாக இல்லை. பொதுவாகவே 90-க்குப் பிந்தைய மொத்த இலக்கியப் போக்கில் திருப்தி இல்லை. நிறைய நல்ல படைப்புகள் இல்லை. மிகக் கொஞ்சமாக த்தான் உள்ளது. இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. 1970-களில் தொட்ட உச்சத்தை யாருமே தொடவில்லை. அவர்களுக்கு இருந்த பார்வை தர்சனம் இவர்களுக்கு இ ல்லை. எப்படியாவது நிறையபேர் வாசிக்கிற பண்டமாக மாற்ற வேண்டுமே என்ற மலினமான, வெகுஜனப் பத்திரிகைத் தன்மைதான் தெரிகிறது. இதையும், தனது சொந்த இருப்பு குறித்த சண்டைகள் மற்றும் தந்திரங்களைக் கைவிட்டால்தான் அதைக் கண்டடைய முடியும்.

தீராநதி: கட்டமைக்கப்பட்ட புனிதமாகவே வரலாறு உள்ளது. வரலாற்று அபத்தங்கள் என்ன என்றே நமக்குத் தெரியாது. வரலாற்றில் நடந்த அபத்தங்கள் தெரியாமல் வரலாற்றை எப்படி படைப்பாக்க முடியும்?

சமயவேல்: தமிழில் வரலாறு குறித்த புனைவில் ஈடுபடுபவர்களுக்கு அது தெரியாது. பொதுவாக, உள்ளீடற்ற சமூகத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப எதிர்பார்க்கப்படும் படைப்புகளும் உள்ளீடற்றதாகவே உள்ளன. இதை எதிர்க்க பெரும் வீரியம் வேண்டும். அவ்வாறு சமீபத்தில் வெளிவந்துள்ள ஆளுமைகளாக அ. முத்துலிங்கம், கோணங்கி, முருகபூபதி, ஹரிகிருஷ்ணன்(மணல்மகுடி), ஆதவன் தீட்சண்யா, திருச்செந்தாழை ஆகியோர் புதிய மொழியையும், புதிய உள்ளடக்கத்தையும் உருவாக்குகிற க ட்டாயத்தில் இருப்பவர்கள். கவிதை பற்றி ஏற்கெனவே கூறிவிட்டேன்.

தீராநதி: கோணங்கி மொழி குறித்த சர்ச்சை உள்ளதே?

சமயவேல்: ஆமாம். அவர் எங்களுக்காக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் communicativeஆக எழுத வேண்டும். அப்போது அவர் மொழி புதியதாக இருக்கும்.

தீராநதி: 1970-களில் இருந்து தமிழில் முக்கிய இலக்கியச் சூழலாகக் கருதப்பட்ட மதுரை, நெல்லை, சென்னை, கோவில்பட்டி ஆகியவற்றில் தொடர்ச்சியாக 1980-களின் இறுதிவரை வாழ்ந்துள்ளீர்கள். அச்சூழல்கள் உங்களிடம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தின?

சமயவேல்: நான் பிறந்தது கரிசல் பூமி. விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர். நான் வளர்ந்தது பெரும்பாலும் எனது அம்மா முனியம்மா பிறந்த வேம்பாரப்பட்டி. என் அம்மாவின் அப்பா சிறந்த சேவற்சண்டைக்காரர். சேவற்கட்டுக்காரர் என்று சொல்வார்கள். இருபது சேவல்களை ஜெயித்து தோலில் போட்டு வருவதை நான் பார்த்தி ருக்கிறேன். தினசரி கோழிக்கறிதான். பிள்ளைப்புதூர் பள்ளியில் படித்தேன். லீவு நாட்களில் வேம்பாரப்பட்டி தாத்தா வீடும், தோட்டமும் தான். தாத்தாவுடன் ஓடைக்குச் சென்று மீன் பிடிப்போம். அதனாலே பின்னாட்களில் எனக்கு தக்கையின் மீது நான்கு கண்கள் எனக்குப் பிடித்த கதையானது. அந்தத் தோட்டத்தில் தான் என் பால்ய சகியைச் சந்தித்தேன். திடீரென என் அம்மாவின் சாவு என்னை மிகவும் பாதித்தது. வேம்பாரப்பட்டியில் இருந்து பிரித்துவிட்டது. பள்ளியில் தையல் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். பிளாட்டோ, சாக்ரடீஸ் புத்தகங்களைக் கொடுத்தார். சாமிநாதசர்மா எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் பள்ளியில் படிக்கும்போதே வாசித்துவிட்டேன். எனக்கு சி.பி.எம் கட்சிக்காரர்கள் அறிமுகம் கிடைத்தது. எப்படியும் புரட்சிக்காரன் ஆகவேண்டும் என்று நினைத்தேன். எங்கள் ஊருக்கு அருகில் பந்தல்குடி என்ற ஊர் உண்டு. அங்குதான் அரசு நூலகம் இருந்தது. அங்கு சென்று புத்தகங்களின் பெயர்களை எழுதிக் கொண்டு வந்தேன். எங்கள் ஊருக்குவரும் போஸ்ட்மேனிடம் தினசரி ரெண்டு புத்தகங்களின் பெயர்களை எழுதிக்கொடுத்து பந்தல்குடி நூலகத்தில் இருந்து வாங்கிவருவார். அதை அன்றே வாசித்து விடுவேன். கம்மாய்க்கரை மரத்தடி, கமலைக்கல், பேய் நடமாடும் ஊர்க்கோடிக் கோயில், மறுநாள் அதைக்கொடுத்து விட்டு வேறு இரண்டு புத்தகங்களை வாங்கிவருவார்.

மதுரையில் கல்லூரிப் படிப்பு. முருகேசபாண்டியன் அதே கல்லூரியில் படித்தார். ஐ.சி. பாலசுந்தரம் என்ற அருமையான ஆசிரியர் கிடைத்தார். அவர்தான் எங்கள் ரசனைகளை வளர்த்தவர். காமு, காப்காவை அறிமுகப்படுத்தினார். நல்ல சினிமா என்றால் என்ன என்பதை உணர்த்தினார். அவர் அபி, மீரா, அப்துல்ரஹ்மான் ஆகியோரின் கல்லூரித்தோழர். அவர் மூலம் மதுரை இலக்கியத் தோழமை வட்டத்தின் பரிச்சயம் கிடைத்தது.

ஜி. நாகராஜன் தங்கியிருந்த சந்தானம் லாட்ஜுக்குச் செ ல்வேன். நான் சின்னப்பையன். விரட்டிவிடுவார். இடையில் கல்லூரிப்படிப்பு தடைப்பட்டது. மீண்டும் பாளையங்கோட்டையில் தொடர்ந்தது. அங்குதான் ஜோதிவிநாயகம் எ ன்ற என் அருமையான நண்பனைச் சந்தித்தேன். அவர் லெண்டிங் லைப்ரரி நடத்தினார். ரெண்டு பேரும் வீடுவீடாக புத்தகம் போடுவோம். பிறகு விடிய விடிய பேச்சு. நம்பிராஜன்(விக்கிரமாதித்தன்), வண்ணநிலவன், கலாப்பிரியா, கி.ரா, வண்ணதாசன் ஆகிய நண்பர்கள். நாகர்கோயில் சென்று சுந்தரராமசாமி, திருவனந்தபுரம் சென்று நகுலன் என்று 1970-களின் ஜாம்பவான்களோடு நட்பு வட்டம் விரிந்தது.

1976 இல் சென்னை வந்தேன். சென்னையின் முக்கிய காலகட்டம் அது. அங்குதான் தீவிர அரசியல் பரிச்சயம் கிடைத்தது. ராஜதுரை சோறும் போட்டு, சொல்லியும் கொடுத்தார். வண்ணநிலவன் துக்ளக்கில் சேர்ந்தார். பாதிநாள் அவரது வீடு. சந்திரா அன்பை மறக்கமுடியாது. இவர்கள்தான் என் parents. பிரமிள் பழக்கம் ஏற்பட்டது. எங்கு சென்றாலும் அவருடன் சுற்றுவேன். நவீன நாடகம், நல்ல சினிமாக்கள், இசை என்று மிக முக்கியமான கலைகளின் வசீகரத்தினை அப்போதுதான் உணர்ந்தேன். தீவிர அரசியலில் இருந்தேன். அரசு ஒடுக்குமுறை அதிகமாக இருந்தது. தாங்கமுடியவில்லை. இதனால் அரசு வேலையில் சேர முயற்சி செய்தேன். 1981இல் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளில் மாற்றல் வாங்கிக்கொண்டு கோவில்பட்டி வந்தேன். கோயில்பட்டியில் தீவிர காலத்தில் அவர்களோடு நானும் சுவாசித்தேன்.
1947இல் தொடங்கிய ஜனநாயகம் மந்தத்தன்மையை ஏற்படுத்திவிட்டது.
காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை!

பலவீனங்கள் மலியும்போதுதான் அதிகார மையங்கள் உருவாகின்றன.

o

12 டிசம்பர் 2011

கண்களின் சிரிப்பு

சற்று முன் தட்டுப்பட்டு
கைவசமான
கடவுச்சீட்டு அளவு புகைப்படத்தில்
சிரித்துக் கொண்டிருந்த கண்களின்
முகத்தை என்
அலுவலக வளாகத்தின்
அடுத்தொரு மாடியில்
அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.

கச்சிதமான சிரிப்புடன் அமைந்த
புகைப்படத்தின்
கடைசி நகலாக அது இருக்கலாம்
இன்னொன்று அதே போல்
இயலுமா என்பது சந்தேகம்தான்.
எதிர்வரும் ஒரு சந்திப்பில்
கொடுக்கும்பொழுது
எப்படி எதிர்கொள்ளும்
இந்த முகம்?

இத்தனையும் யோசித்திருந்தவனை
பார்த்து
இன்னமும் மாறாதிருந்தது
அந்த கண்களின் சிரிப்பு.

o

05 டிசம்பர் 2011

வாழ்நிலம்

எத்தனை
பேருக்கு
வாய்க்கிறது
படித்து
வாழ்க்கையைத்
தொடங்கின
இடத்துக்கு
பக்கத்திலேயே
வீடொன்றில்
வாழ்க்கையை
படித்து
வாழும்படி.

o