12 ஜனவரி 2011

நிலாரசிகனின் "வெயில் தின்ற மழை"

"தான் பிடித்த பட்டாம்பூச்சியை அதன் சந்தோசம் மாறாமல் இன்னொரு கைகளுக்கு மாற்ற முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்" - கல்யாண்ஜி.

சொல்லப் போனால், கவிதை என்றில்லை எந்தவொரு படைப்புமே, எதிர்ப்படும் நிகழ் கணங்களில் எழுத்தாளனை பாதித்த அல்லது சலனப்படுத்திய ஏதொன்றையும் அப்படியே இன்னொருவருக்கு கடத்தும் ஒரு முயற்சியே என்று தோன்றுகிறது. கதை, புதினம் போன்றவற்றை விட, கவிதைக்கென்று ஒரு சௌகர்யம் அதை உடனுக்குடன் பதிவு செய்வதன் சாத்தியம் அதிகம்.

நிலாரசிகனின் இந்த "வெயில் தின்ற மழை" தொகுப்பின் மொத்தக் கவிதைகளிலும் ஒரு மென்சோகம் தென்படுவதற்கு, இந்தக் கவிதைகள் எழுதிய காலகட்டத்தில் இருந்த நிலாரசிகனின் மனநிலை ஒரு காரணமாய் இருக்கலாம்.

வெகு நேர்த்தியான அச்சாக்கத்தில் உயிர்மை வெளியிட்டுள்ள இந்த தொகுப்பில் உள்ள அறுபது கவிதைகளில், ஏறத்தாழ 22கவிதைகளில் "மரணம்'' ''செத்து'' ''மறித்து'' "இறந்து" போன்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. வாசிப்பின் சுவாரஸ்யத்தை இது சற்றே மட்டுப்படுத்துகின்றது. கவிதைகளின் முதல் வரியையே தலைப்புகளாக கொடுத்திருப்பதும், ஒரு அசுவாரசியத்தை கொடுப்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

இரவுத்தெரு (புதிய சொற்றொடர்!) என்று முடியும் ஒரு கவிதையில், நிலா சொல்லிச் செல்லும் இந்தக் காட்சிகளைப் பாருங்கள்:


"தெருநாய்களின் நகக்கீறல்களால்
கதறிக்கொண்டிருந்தது
தகர குப்பைத்தொட்டி..
நைந்த புடவையொன்றில்
குளிர்தவிர்க்க இயலாமல்
முனகிக் கொண்டிருந்தாள்
பிச்சைக்காரி ஒருத்தி..
மரக்கிளையில்
சிருங்கார சப்தம் எழுப்பி
புணரத் துடித்தன
தேன்சிட்டுக்கள்..
விதவிதமான சப்தங்களுடன்
மௌனத்தால் உரையாடியபடி
நீண்டு செல்கிறது இரவுத்தெரு."


தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதைகளில், இரண்டை, இங்கு தருகிறேன்.

1)

சிறுவனின் மணல்வீட்டை
அழித்துப்போனது அலை.
அவளது முதல் கோலத்தை
நனைத்துச் சிரித்தது மழை.
வேலியோர முள்ளில்
உடைபடுகிறது பலூன்காரனின்
வெண்ணிற பலூன்.
காரணம் அறியாமல்
அழுதுதீர்க்கிறார்கள் அவர்கள்.


2)

இந்தக் கவிதை
இப்பொழுதுதான் பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலந்திருக்கிறது
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்


"வாழ்க்கை வண்ணத்துப்பூச்சி மயமானது என்று யாரும் சொல்ல முடியாது. வண்ணத்துப் பூச்சியே அற்றது என்றும் யாரும் சொல்லிவிட முடியாது தானே".

கல்யாண்ஜியின் இந்த வரிகளையே நான் நிலாரசிகனுக்கு சொல்ல விழைகிறேன். நிலா தன் அடுத்த கவிதைத் தொகுப்பில், மகிழ்ச்சி நிறைந்த கவிதைகளையும் தர வேண்டும்.

(வெயில் தின்ற மழை - நிலாரசிகன் - உயிர்மை வெளியீடு, பக்கம் 72, விலை ரூ 50.)

o

2 கருத்துகள்: