29 ஏப்ரல் 2009

எப்படி இருந்திருக்கக்கூடும்?...

ஜன்னலோரப் புறாக்களின்
சிறகடிப்போடு
புலர்ந்ததந்த காலைப் பொழுது.

முதல் அழைப்பிலேயே
கண்விழித்து
முகம் பார்த்து சிரித்த மகன்.

பையனை ஏற்றிவிட்டுவந்த
பள்ளிக்கூடப் பேருந்தில்
சிரித்த முகங்களோடு
சீருடைச் செல்லங்கள்.

எப்போதும் போலன்றி
இவளும்
இன்முகம் கொண்டொரு சிரிப்புடன்.

வழியெங்கும் நெரிசலின்றி
வரவேற்ற வழக்கமான சாலை.

அவனது அலுவலக
அடுக்குமாடி கட்டிடத்தின்
அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த
இவன்வயது இளைஞன் ஒருவனின்
மாரடைப்பு பற்றிய செய்தி
வந்து சேர்ந்ததும்
அந்த ஒரு காலைப் பொழுதில்தான்.

எப்படி இருந்திருக்கக்கூடும்
அவனின் காலைப்பொழுது?

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக