18 செப்டம்பர் 2011

ஆனந்த விகடனில் கவிதை

இந்த வார ஆனந்த விகடன் (21-09-2011) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)

13 செப்டம்பர் 2011

உயிரோசை



உண்மையை
உண்மையென்று உணர்த்த

இத்தனை விவரங்களை
ஈமெயிலில் நீ
அனுப்பித் தந்த போதும்

தொலைபேசியில்
தெரிவித்த உன்
குரல்வழி விளக்கமே
போதுமானது எனக்கு.

ஏனெனில்
தொலைபேசியில் ஒலித்தது
உன் உதடுகளின் ஓசையா?
ஒரு உயிரின் ஓசை அல்லவா?

o

12 செப்டம்பர் 2011

திரும்பத் திரும்ப



ஒட்டி நின்றிருந்த லாரியின்
சக்கரத்தை விட
ஓரடி உயரம் குறைவான

பள்ளி சீருடை
பாதி கசங்கிய நிலையில்
காலணிகள் ஏதுமின்றி

சாலையைக் கடக்க
காத்திருந்த சிறுவன்

கடந்து கொண்டிருக்கிறான்
ஒவ்வொரு சிக்னலிலும்.

o

06 செப்டம்பர் 2011

அந்தக் கணம்



விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு
சுற்றுலா சென்ற இடத்தில்
வைத்து நிகழ்ந்த அந்தக் கணத்தை

காலைச் சிற்றுண்டிக்கான
பில் பணத்தைக் கொடுத்துவிட்டு
கல்லாவை விட்டுத் திரும்புவதற்குள்

நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த என்
இளைய மகன் ஒரு காரின் பின்னும்
தலைதெறிக்க அவனைப் பிடிக்க ஓடிய
என்னைத் தொட்டு நின்ற ஒரு காரின் முன் நானும்
என இடைப்பட்டு நின்ற அந்தக் கணத்தை

சுற்றியிருந்த எல்லாமும் ஸ்தம்பித்துப் போன
அந்த ஒரு கணத்தை
சில சொற்களில் எப்படி சொல்லிவிட முடியும்?

o

05 செப்டம்பர் 2011

'கல்கி'யில் எட்டாவது கவிதை

இந்த வார கல்கி (11-09-2011) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)


03 செப்டம்பர் 2011

பாய்



“பாய்” என்றொரு புதிய வார்த்தையைக் கற்றுக்கொண்ட
மூன்று வயது மகனிடமிருந்து
“பாய்” தான் எல்லாவற்றுக்கும் இப்போது.
காலையில் கண்விழிக்கும்போது
கவனமாய் உயிர்பெறும் “பாய்”
நான் அலுவலகம் போய் வரும் பொழுதுகளில்
நண்பர்கள் பார்க்க வரும் விருந்தினர்
உடன் பயணிக்கும் பேருந்துப் பயணிகள்
கடைகளில் கடைத் தெருக்களில்
எங்கும் எவருக்கும் ஒரே “பாய்” மயம் தான்.
பெரும்பாலும் ஒலியளவு
ஒரேயளவுதான் இருக்கும் என்றாலும்
தனக்கு தடுப்பூசி போடப்பட்ட சமயம்
ஆஸ்பத்திரியில் ஒலித்த “பாயே”
அதுவரைக்கும்
மிக அதிக சத்தத்தோடு ஒலித்த “பாய்”.
அங்காடியொன்றில் காணாமல் போன தினம்
அவனது இருப்பிடத்தை அறிவித்ததும்
அந்த “பாய்” தான்.

o

'கல்கியில் ஏழாவது கவிதை

இந்த வார கல்கி (04-09-2011) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)