23 ஆகஸ்ட் 2011

என்ன சொல்ல?

இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த
இடுங்கிச் சிரிக்கும் அந்த கண்களை
இனம் மொழி தேசம் கடந்து
இன்னொரு இடத்தில் காணச் செய்யும்
இந்த இயற்கையை என்ன சொல்ல?

o

22 ஆகஸ்ட் 2011

தேவிகா சுப்ரமணியம்



தேவிகா சுப்ரமணியத்தை
தெரியாதவர்கள் குறைவு எங்களூரில்.
தெரிந்தவர்களில் பலருக்கும்
தெரியாத ஒன்று அவரின் பெயர்க்காரணம்.
ஆண்டவன் கட்டளை திரைப்படத்தை
அறுபத்தேழு முறை பார்த்ததினால்
ஆகி வந்த பெயராம்.
சுப்பிரமணி என்னும் அழைப்புக்கு
செவி சாய்க்க மறக்கும் காதுகள்
தேவிகா என்னும் அழைப்புக்கு
திரும்பாமல் இருக்க மாட்டா.
தேவிகாவைப் பற்றிய பேச்சுக்களைத்
தெரிந்த சிலருடன் மட்டுமே பேசுவார்.
எத்தனை படங்கள் நடித்தார் தேவிகா
யார் யாருடன் எத்தனை அதில்
எல்லாமே எப்போதும் அவர் விரல் நுனியில்.
சிவாஜியை எப்போதும் கணேசன் என்றே அழைப்பார்
என்பது ஒரு கூடுதல் தகவல்.
நரை கூடி கிழப் பருவம் எய்தி எல்லோரையும் போலவே
தேவிகா சுப்ரமணியமும் இறந்து போன நாளொன்றில்
இத்தனையும் அசை போட்டுக்கொண்டிருந்த ஊரார் நடுவே
அடுத்த ஊரிலிருந்து வந்து அழுது புலம்பிப் போன
தெய்வானைப் பாட்டிக்கு தேவிகா என்றொரு பெயருண்டு
என்பது எவருக்கும் அங்கு தெரிந்திருக்கவில்லை.

o

21 ஆகஸ்ட் 2011

இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி

இன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன்
சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான்.
அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை
இழுத்துப் பிடித்து உட்கார வைத்து
புத்தகம் ஒன்றைக் காட்டி 'ஏ' 'பி' என்று சொல்லச் சொன்னாள் அம்மா.
நழுவித் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான் பையன்
இன்னொரு பாடலைப் பாடியபடி.

o

17 ஆகஸ்ட் 2011

சூடாப் பூ

பள்ளி விட்டு வந்ததும்
தன் ஆஸ்தான இடத்தில்
அமர்ந்திருப்பாள் அம்மு.

எல்லோரும் வீட்டிற்குப் போக
தான் மட்டும்
அனுதினமும் அங்கு
வருவது பற்றிய
ஆரம்ப காலக் கேள்விகள்
அவளை விட்டுப் போய்விட்டன.

ஓலைக் குடிலின்
ஓர் மூலையில் அமர்ந்து
எல்.கே.ஜி பாடங்களை
படித்துக் கொண்டிருப்பதும்
அம்மாவிடமிருந்து
பூ வாங்கிப்போவோருக்கு
புன்னகை ஒன்றை
இனாமாய்க் கொடுப்பதும்
அவளின்
அன்றாடக் கடமைகள்.

மீதமிருக்கும் பூக்களுடன்
வீடு திரும்பிக் கொண்டிருக்கும்
அம்முவிற்கு
என்றைக்குமே புரிந்ததில்லை
அம்மா ஏன் சூடிக் கொள்வதில்லை
அவைகளில் ஏதொன்றையும் என்பது.

o

15 ஆகஸ்ட் 2011

சிறு கவிதைகள்

01

சாந்தியா அது?
சாந்திதான் அது.
சாந்தி என்பது எது?

o

02

படிப்பதா?
படைப்பதா?

O

03

எழுத இருக்கிறது
இன்னும் ஒரு பாதி.

போய்விடுமோ
ப்ரூப் ரீடிங்கிலேயே
மீதி வாழ்வு?

o

04

வெகு எளிதாக
போய்வருகிறான்
வெளிநாடுகளுக்கு
சக எழுத்தாளன்.

கடை பாக்கிக்காக
கவிதை எழுதிக்
கொண்டிருக்கிறான்
கவி சாம்ராட்.

o

14 ஆகஸ்ட் 2011

படித்ததில் பிடித்தது - வண்ணநிலவன் கவிதை

பள்ளு

'சுதந்திரம் வந்தாச்சு'
சொர்க்கம் சமீபத்திலென்றார்.
சொர்க்கத்தைப் பார்த்தவர்கள்
உடனே தகவல் தாருங்கள்.

- வண்ணநிலவன்

(வண்ணநிலவன் கவிதைகள், மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ்,கேளம்பாக்கம்)