27 ஜூலை 2010

இறுதி வரை

தலைவாரி
பூச்சூடி
கண்ணெழுதி
புருவமெழுதி
உதடெழுதி
காதிற்கு அழகு
வளையமிட்டு
பிடித்த வண்ணப்
புடவையணிந்து
நெற்றிக்கு
நீல வண்ணப்
பொட்டிடுகையில்
பட்டென்று
விழித்தெழுந்தவளை
இமைக்காமல் பார்த்துக்
கொண்டிருந்தான்
எதிரே மாலையோடு
சுவர்ப்படத்தில்
இறுதி வரை கூட
வருவேனென்றவன்.

o

19 ஜூலை 2010

அகம் களித்த நாழிகைகள்

தலைப்பிலிருந்தே நீங்கள் யூகித்திருக்கலாம். அகநாழிகை பதிப்பக வெளியீடுகளான, ஒரு நான்கு கவிதைத் தொகுதிகளின் வாயிலாக நான் ரசித்த (அகம் களித்த) நாழிகைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை. சென்ற முறை சென்னை சென்று திரும்பியபோது, இந்தக் கவிதைத் தொகுதிகளை (தொகுதியா/தொகுப்பா எது சரி!) வாங்கி வந்தேன்.

இன்றைக்கு, நிறைய கவிதைகள் எழுதப்படுகின்றன. தொகுதிகளாக வருபவையும் நிறையவே. ஆனால், எங்கே போகின்றன

அத்தனை கவிதைத் தொகுதிகளும்/கவிதைகளும். நண்பர்கள்/தெரிந்தவர் மத்தியில் பகிரப்பட்டு, ஓரிரு வலைப்பூக்களில்/ சிற்றதழ்களில் விமர்சனமாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின் எங்கு போகின்றன அத்தனையும்? நூலகங்களை அடையும் பேறு பெற்றவை/பெறுபவை எத்தனை சதவீதம்?

நான் பார்த்த வகையில், பழைய மற்றும் புதிதாய் எழுத வரும் ப்ளாகர்கள் கூட (என்னையும் சேர்த்து), 'படித்ததில் பிடித்தது' என்று தன் வலைப்பூவில் இடுவது, பெரும்பாலும் எல்லோரும் அறிந்த ஆத்மாநாம், கல்யாண்ஜி, தேவதச்சன், தேவதேவன், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன் போன்றோரின் கவிதைகளையே. தற்போதைய சூழ்நிலையில், புதிதாய் எழுதி வரும்/எழுத வரும் நிறைய கவிஞர்களின் கவிதைகளுக்கான குறைந்தபட்ச அங்கீகாரத்தையாவது அவர்கள் பெறுகிறார்களா? அதற்குத் தேவையான தளம்/களம் என்ன?/எது?.

இப்படியான எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதிலில்லை.

என் வரைக்கும், இந்த நான்கு தொகுதிகளில், எனக்குப் பிடித்த கவிதைகளை (இட வசதிக்காக, தலா இரண்டு), ஒரு அறிமுகமாக இங்கு தர விழைகிறேன். (இன்னும் சிலரிடம், இந்த கவிதைகள், சென்று சேருமென்ற ஒரே எதிர்பார்ப்பில்).

I. நூல் பெயர்: கோவில் மிருகம்
ஆசிரியர்: என். விநாயகமுருகன்




1) கோவில் மிருகம்

என்னதான் அடித்தாலும்
அங்குசத்தால் காதில்
குத்தினாலும்
வாலை முறுக்கி
வலியேற்றினாலும்,
வற்புறுத்தி பிச்சையெடுக்க
வைத்தாலும்
காட்டுப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்.

2) திருமணமொன்றில்

நான் சென்ற
திருமணமொன்றில்
மண்டப வாசலில்
அழகான நீண்ட
கூந்தலுடன்
இரண்டு கைகளை கூப்பி
தலையை லேசாக குனிந்து
புன்னகையோடு வரவேற்ற
பெண்ணொருத்தி
பொம்மையென்று
சற்று தாமதித்தே
உணர முடிந்தது.

பக்கத்தில்
பன்னீர் தெளிக்கும்
ஆண் உருவமும்
மின்சார பொம்மையென்று
யாரோ சொன்னார்கள்

அட்சதை போடுமுன்
ஏனோ மேடையை
ஒருமுறை
உற்றுப் பார்த்தேன்.

O

II. நூல் பெயர்: கருவேல நிழல்
ஆசிரியர்: பா. ராஜாராம்




1) மண்டபம்

கோட்டை பெத்தார் அப்பத்தா
வாசலிலேயே
கடை வைத்திருப்பாள்

தண்டட்டி, கடுக்கண்
பயல்கள் சீமையில் என்பாள்

கம்பி கிராதி
கிராதிக்குள்ள பாட்டில் நாலு
தொங்குற பிளாஸ்டிக் பை

மார்பு திறந்து கிடக்கும்
வீசிக்கொண்டிருப்பாள்
பொழுதன்னைக்கும்

உள்ளதிலேயே
பெரிய வீடு

அப்பத்தா செத்தபோது
எடுத்துப் போட்டோம்

சும்மா
எடுத்துப் போட்டோம்.


2) சொல்லிட்டேன்... ஆமா

ஓட நடக்க
பேசிச் சிரிக்க
குழந்தைகளை
குளிப்பாட்ட
சோறூட்ட

உனக்குப் போலவே
எனக்கும் வாய்த்தது அப்பா

புகைக்க
குடிக்க
கடன் வாங்க
ஆட்டைத் தூக்கி
குட்டியில் போட
குட்டியைத் தூக்கி
ஆட்டில் போட

உனக்குப் போலவே
எனக்கும் வாய்த்தது அப்பா

கீரை
வாங்கியாந்து
கிணற்றடியில் வைத்து
சிரித்துக்கொண்டே
செத்துப் போக...

உனக்குப் போலவே
எனக்கும் வாய்க்கணும் அப்பா.

O

III. நூல் பெயர்: கூர்தலறம்
ஆசிரியர்: TKB காந்தி




1) கடவுள்கள் கறாரானவர்கள்

அவசரமாய் ஆம்புலன்சில் வந்து
எமர்ஜன்சி வார்டில் சேர்த்தபின்
உயிரை மீட்க வந்த உறவுகள்
மருத்துவமனையை பார்த்து அமர்ந்திருந்த
வினை தீர்க்கும் விநாயகரிடம்
கதறி அழுது காலில் விழுந்து கெஞ்சினாலும்
அவர் சட்டை செய்வதே இல்லை.
அருகிலிருக்கும் எஸ்.டீ.டி பூத்தில் ரிசீவரில்
அவரின் காதுபட
கதறல்களையும் அழுகுரல்களையும்
அனுப்பிக்கொண்டே இருந்தாலும்
அவர் கொஞ்சமும் வருத்தப்படுவதில்லை.
உறவுகளின் உடல் நோவு தீர்க்கச் சொல்லி
கியூவில் நின்று மன்றாடும்போது
அவர் பார்ப்பதுகூட இல்லை
மாலை போட்டு படையல் வைத்து
உண்டியலில் காசு போட்டாலும்
அவரை மாற்ற முடிவதில்லை
பக்கத்து தெரு அருள்மிகு மீனாட்சி அம்மனும்
அப்படித்தான்
கடவுள்கள் கறாரானவர்கள்
கடவுள்கள் நாத்திகர்கள்
மனிதர்களை விட
கொள்கைகள் மட்டும்தான்
முக்கியம் அவர்களுக்கு.

2) இடுக்கண் களைவதாம்

எல்லாவற்றின் நடுவிலும்
அவனுக்கேற்பட்ட விபத்தே
அரைநாளாய் கவனம் கலைத்தது

அவசரமாய் கிளம்பி
பார்த்துவிட்டு வருகிறேன்
வெள்ளை பேண்டேஜுடன் தடித்திருந்தது
அவன் வலக்கை,
நெற்றியில் நான்கு தையல்
ஒன்றும் பெரியதாய் ஆகிவிடவில்லை
கொஞ்சம் நிம்மதி
உடம்பைப் பார்த்துக்கொள்ளுமாறு வருந்திவிட்டு
ஒருவாய் காபி குடித்து
டிஞ்சர் வாசத்துடன் வந்துவிட்டேன்

இப்போதெல்லாம்
அடிக்கடி கனவு காட்டிக் கொண்டிருக்கிறது
அவனையும்
கைமாத்தாய் வாங்கிய
முன்னூற்றி சொச்சம் ரூபாயையும்,
அவன் சொல்லவேண்டிய
ஒரு நன்றியையும்.

O

IV. நூல் பெயர்: நீர்க்கோல வாழ்வை நாச்சி
ஆசிரியர்: லாவண்யா சுந்தரராஜன்




1) எல்லாம் இருந்தும்

சற்றுச் சுவரோடு
வாசல் இரும்புக்கதவில்
அஞ்சல் இட ஒரு பெட்டி

அன்றாடம் ஓடும்
தண்ணீர் மின்னியக்கிக்கு
தகரத்தால் ஆன சிறு வீடு

பிரிய ரங்கனின் விதவிதமான
புகைப்படங்களுடன்
ஏனைய கடவுளர்க்கும்
மணி கதவம் கொண்ட
பெருமாள்படியுள்

அலங்கார பொம்மைகளுக்கு
வரவேற்பறையில் ஒரு ஓரிடம்

செல்ல நாய்க்கு
மாடிப்படிக்கட்டுக்கடியில்

சிறு குடியிருப்பு
குப்பைத்தொட்டிக்கு கூட

சமையலுள்ளில்
கதவோடு இடம் ஒன்று

தாளிக்கும் கடுகுக்கும்
அஞ்சறைப் பெட்டியில் இடம்

காலணிகளை வைக்கவோ
ஷூ ராக்

எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது
வயதேறி குழந்தையான
பெற்றோர் தவிர.

O

2) நான்காம் பிறை நிலா

இருளின் மனத்தை
நுகர்ந்தபடி விரைந்திருந்தது
என் பயணம்

தனிமையின் நீல நிற
நீரூற்று சுழன்றாடியபடி
கூடவே வந்தபடியிருந்தது

அணில் கடித்திருந்த
கொய்யாப்பழமாக
நான்காம் பிறை நிலவொன்று
இருள் அழிக்கும் அழிப்பானாக
சுடர்ந்து ஒளிர்ந்திருந்தது.

பார்க்கவே கூடாதென்று
கைவிரல்களால் கடிவாளமிட்டு
யன்னல் பக்கம் திரும்பாதிருந்தேன்

சாலையில் யாரோ விழுந்தெழுந்த
சப்த பயங்கொண்ட
சடுக்கிடும் நேரத்தில்
விழி விழுந்து நிறைந்து
சிரித்திருந்தது பிறை நிலா.

o

14 ஜூலை 2010

பாதிப்பாதி


காத்திருந்த நேரத்தில்

படித்துக்கொண்டிருந்த

கவிதையின் பாதியோடும்

அவ்வப்போது என்னில்

நிலைத்து விலகின

பார்வை கொண்ட

முகத்தின்

அரைகுறை நினைவுடனும்

அங்கிருந்து வெளியேறினேன்.

o

நன்றி: கீற்று.காம்

12 ஜூலை 2010

செல்வராஜ் ஜெகதீசனின் இரு கவிதைத் தொகுதிகள் - மதிப்புரை - தேவகோட்டை வா.மூர்த்தி

செல்வராஜ் ஜெகதீசனின் இரு கவிதைத் தொகுதிகள்:

1.அந்தரங்கம் 2. இன்னபிறவும்

“…..பார்த், கவிதை என்ற வகைமையை ஒதுக்குகிறார். நவீன கவிதையானது மொழியைச் சீரழித்து, சொற்களை நிலைத்த பொருள்கொண்டவை என்ற நிலைக்குத் தாழ்த்தியிருக்கிறது என்று பார்த் குறிப்பிடுகிறார்” – என பின்நவீனத்துவ சிந்தனையாளர்களில் ஒருவரான ரொலாண் பார்த் பற்றிய அறிமுகம் போன்ற தனது சிறிய நூலில் குறிப்பிடுகிறார், திரு. எம்.ஜி.சுரேஷ். தொடர்ந்து, சார்த்தரும் “கவிதை என்பது, பூடகமான மொழியைக் கொண்டது என்று கூறிப் புறக்கணிக்கிறார்” என்று சொல்கிறார் சுரேஷ். பார்த், சார்த்தர் ஆகியோர் சொல்லிவிட்டார்களே என்பதற்காக (சொல்லப்போனால், யார் சொல்லிவிட்டாலுமே!) எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை என்கிறபோதும், கவிதை என்று மட்டுமல்ல, நிலைத்த பொருள் உள்ளடக்கியதாகத் துலங்கும் எந்தப் படைப்பையுமே தலையில் வைத்துக் கொண்டாட முடியாதுதான். அதேசமயத்தில் குறிப்பிட்ட சில படைப்புகள் அப்படி அமைவதால், அந்த வகைமையையே (genre) புறக்கணிப்பது என்பது சரியான அணுகுமுறை ஆகாது என்றே எனக்குப்படுகிறது. வேறு சொற்களில், செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் ஏற்புடையதா இல்லையா என்றுதான் கவனிக்க வேண்டுமேயன்றி கவிதைகளே ஏற்புடையதாகாது என்கிற நிலை அசலான இலக்கிய மாணவனுக்கு இழப்பைத்தான் ஏற்படுத்தும்.

டிசம்பர் 2008’ல் பிரசுரமான ஜெகதீசனின் முதல் கவிதைத்தொகுதியான “அந்தரங்கம்” நூலுக்கு மிக நீண்ட முன்னுரை போன்றதான கட்டுரையை எழுதியுள்ள விக்ரமாதித்யன் “இரண்டாயிரத்து இருபதில் செல்வராஜ் ஜெகதீசன் சுடர்விடும் கவிஞனாக ஜொலிக்க வாழ்த்துவோம்” என்று முடிக்கிறார். டிசம்பர் 2009’ல் பிரசுரமான இரண்டாது தொகுதியான “இன்ன பிறவும்” நூலுக்கு முன்னுரை போன்றதான கட்டுரையை எழுதியுள்ள சுகுமாரன் “இன்றைய அவரது கவிதைகளைப் பின்னுக்குத் தள்ளும் கவிதைகள் அவரிடம் இருக்கின்றன என்று நம்பச்செய்பவை” எனக் குறிப்பிடுகிறார். அதாவது விக்ரமாதித்யன், சுகுமாரன் இருவருமே செல்வராஜ் கவிஞராவதற்கான ‘உள்திறம்’ (potentiality) கொண்டவர் என்று ஒப்புக் கொள்கிறார்கள்; முன்னுரை எழுத நேர்ந்த கண்ணோட்டத்தால் (obligation) இன்றைய தொகுப்புகளிலிருந்தும் தமக்கு உவந்த சில வரிகளை (விக்ரமாதித்யன், பல முழுக்கவிதைகளையுமே!) மேற்கோள் காட்டுகிறார்கள். ‘நவீன விருட்சம்’ இதழில் திறனாய்வாகச் செய்ததால், ஐராவதம் சுவாமிநாதன் சில கவிதைகளைப் பழித்திருந்தார். இவற்றையெல்லாம் மீறி, ஜெகதீசனின் இரு கவிதைத் தொகுதிகளையுமே நான் படித்தேன்.

‘புதுக்கவிதை’க்கு வடிவ ஒழுங்கு உண்டா என்பதுதான் ஜெகதீசனின் இரு தொகுதிகளுமே என்மனதில் முதலில் எழுப்பிய கேள்வி. ஏனெனில், தொகுதிகள் உள்ளடக்கியிருக்கிற கிட்டத்தட்ட எல்லாக் கவிதைகளிலுமே மோனை முயங்கிக் கிடக்கிறது. எதுகையைத் தவிர்த்துவிட்டால் புதுக்கவிதை இயல்பாகிவிடும் என்பது ஜெகதீசனின் கருத்தா அல்லது இயல்பாகவே அப்படி அமைந்ததா என்பது தெரியவில்லை. “தானாய் விழும் அருவி” என்ற இவரது கவிதை ஒன்றின் தலைப்பு, இவரது மோனை மயக்கத்துக்குப் பொருந்துமோ என்று தோன்றுகிறது.

தன்னை எழுதத் தூண்டியவற்றில் கல்யாண்ஜி கவிதைகளும் உண்டு என ‘அந்தரங்கம்’ தொகுதியில் குறிப்பிடுகிறார் ஜெகதீசன். ஒருவேளை அதனால்தான் இவரது பல கவிதைகளில் பட்டியல்கள் விரிகின்றனவோ என்னவோ! ஆனால் கல்யாண்ஜியின் படைப்புகளில் வெறும் பட்டியல்களை மட்டும் பார்க்கிறவர்கள் இழப்பது ஏராளம். காண்பதற்கும் காணவேண்டியதற்கும் வாழ்வில் இவ்வளவா என்று நம்விழிகளை விரிய வைப்பவை கல்யாண்ஜி - கவிதைகள் உள்ளடக்கியிருக்கும் விவரணைகள்: கல்யாண்ஜியின் (கையறுநிலை?) வரியான “இந்த மரத்தை முழுதாகப்/ பார்த்ததில்லை என்றுபுரிய/ நேற்றுவரை ஆயிற்று” என்பதுபோல, ‘பட்டியலி’ன் முத்தாய்ப்பு அமையவில்லை என்றால் கவிதை உள்ளடக்கியிருக்கும் விவரணைகள் மளிகைச்சாமான் பட்டியல் போன்று காட்சியளிக்கும் விபத்து நிகழக்கூடும்.

அதே சமயத்தில் கவிஞர் துரை.சீனிச்சாமியின் கவிதைத்தொகுப்பான “அந்தி” நூலை திறனாய்வு செய்த சமயத்தில் (கணையாழி ஜூலை’74) ந.முத்துசாமி ஒரு நியதியை நிறுவுகிறார்: ‘காட்சிகளை விவரிப்பதே கவிதையாக முடிந்து விடும்; காட்சிகளைத் தொடர்ந்து கவிஞன் தனது வியாக்கியானத்தைத் தருவது தவிர்க்க வேண்டியதே’. கல்யாண்ஜியினது போன்றதான முத்தாய்ப்பு வரிகள் சாத்தியப்படவில்லை என்றால், காட்சிகளே கவிதைகளாக மாறி நிற்கும் ‘ரஸவாதம்’ கைகூட வேண்டும்.

நான் மேலே குறிப்பிடுகிற ரஸவாதம் ஜெகதீசனின் பல கவிதைகளில் நிறைவேறியிருக்கிறது. ‘நாற்காலி’களின் பட்டியலை விவரிக்கிற, ‘இன்ன பிறவும்’ தொகுதியிலுள்ள, ஓர் அபத்தமான கவிதையில்கூட ஓர் அபாரவரி தூரத்து நட்சத்திரமாய் மினுக்கிடுகிறது:” எவர் மனதிலும்/ நிழலாய் நடைபோடும்/ காதலியோடு அமர்ந்த கடற்கரையோர/ சிமென்ட் நாற்காலிகள்”. கவிதை சொல்பவனின் காதலி மற்றவர் மனதில் நிழலாடுகிறாளா? அல்லது பார்வையாளர்களுக்கு அவரவர் காதலிகளோடு அமர்ந்திருந்த ‘அந்த நாட்களின்’ நிழல் நினைவில் மீள்கிறதா? இதே ‘இன்ன பிறவும்’ தொகுதியின் மற்றொரு கவிதையில், தேநீர்க் கடையில் சந்தித்து அரட்டையடித்துக்கொண்டிருந்த நண்பர்கள் இப்போது கால வளர்ச்சியில் (அல்லது நண்பர்களின் வளர்ச்சியில்!) இன்னொரு சொகுசான இடத்தில் சந்தித்து அரட்டையைத் தொடர்வதை, பழைய தேநீர்க் கடைக்காரரிடம் ‘மறைத்து’ இப்போது நண்பர்கள் கூடுவதேயில்லை என்று கூறுகிறான் கவி சொல்லி. வளர்ச்சியில் ‘வசதி’யாகிவிட்ட தோழர்குழாத்தை நினைத்து மகிழ்வதா, அல்லது தேநீர்க்கடை இன்னும் ‘பழசாகி’விட்டதை நினைத்து வருந்துவதா? எதுவாயினும் முந்தைய கடைசிச்சந்திப்பில் ‘பேருண்மை’ பற்றிப் பேசிப் பிரிந்த நண்பர் குழாத்தைச் சேர்ந்த கவிசொல்லி இன்று ‘பொய்’ சொல்வது, தேநீர்க்கடைக்காரரின் நிம்மதியைக் கருத்தில் கொண்டு, ‘புரை தீர்த்த நன்மை’யாகவே மாறி நிற்கிறது! இந்த ரஸவாதம், கவிஞனின் எந்தவித வியாக்கியானமுமின்றி மேலிடுகிறது!!

‘இன்னொரு சைக்கிள் ஓட்டி’ என்ற கவிதையும் எனக்கு அபாரமாகவே படுகிறது (‘இன்ன பிறவும்’: பக். 47). இக்கவிதையிலும், ந.முத்துசாமி கூறிய, காட்சி விவரணையை மட்டும் செய்து அபாரமான கவிதையை உருவாக்கியிருக்கிறார் ஜெகதீசன்.

‘அம்மா’ என்ற கருதுகோள் (concept) தமிழ்ப்படைப்புலகில் (முக்கியமாகத் தமிழ்த்திரைப்படங்களில், திரைப்பாடல்களில்!) ‘உணர்ச்சிப்பசப்பலு’க்கு ( sentimentality) அடித்தளமாக ‘நினைவை மீறிய காலந்தொட்டு’ (time immemorial) துலங்கி வந்திருக்கிறது. இது இப்படியிருந்தபோதும், இந்த மையத்தை ‘அம்மாவின் அறிதல்’ ‘தவிர்க்க விரும்பும் தருணங்கள்’ எனும் (‘இன்ன பிறவும்’ தொகுதியிலுள்ள) இரு கவிதைகளில் துணிச்சலாகக் கையாண்டு அதே சமயம் தன்னைக் கோமாளியாகக் காட்டிக்கொள்ளாமல் கவிதைகள் படைத்திருக்கிற ஜெகதீசனைப் பாராட்டுவதற்குத் தயக்கமிருக்க முடியாது.

‘இன்ன பிறவும்’ தொகுதியிலுள்ள ‘இணங்குதல்’, ‘முதலில்’, ‘பெயரிலென்ன இருக்கிறது’, ‘உல்டா’, ‘பிறந்தநாள் வாழ்த்து’ ஆகிய கவிதைகள் மெல்லிய புன்முறுவலை சில வாசகர்கள் முகத்திலோ மனதிலோ கொண்டுவரக்கூடும். வாசகனிடம் நெகிழ்ச்சியை (poignancy) விளைவிப்பதுவா மகிழ்ச்சியைத் திணிப்பதுவா – எது கவிதையாகும் என்பதை ஜெகதீசன் இக்கணம் சிந்திக்கத் துவங்கலாம். கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதைகளான ‘அம்மாவின் பொய்கள்’, ‘தோழர் மோசி கீரனார்’,’சைக்கிள் கமலம்’, ‘ஸ்ரீலஸ்ரீ’ போன்றவற்றைப் படிக்கும்போது புன்னகைக்கத் துவங்குகிற வாசகன், கவிதைகளின் இறுதியில் புன்னகைத்தது மறந்துபோய் யோசனையில் ஆழ்கிற நிலை நிகழ்வது பற்றியும் ஜெகதீசன் யோசிக்கலாம்.

இப்படியெல்லாம் நான் சொல்வதால், வாழ்க்கைப் பற்றிய தீவிர சிந்தனைகள் ஜெகதீசனின் இன்றைய கவிதைகளில் இல்லை என்று யாரும் தீர்மானிக்கத் தேவையில்லை. ஏனெனில், ‘இன்ன பிறவும்’ தொகுதியிலுள்ள ‘கண்ணோடு காண்பதெல்லாம்’, ‘பதட்டம்’, ‘என்வரையில்’ ஆகிய கவிதைகள் வாசகனை நெடுநேரம் யோசிக்க வைக்கும். அதே போல, முதல் தொகுதி உள்ளடக்கியுள்ள கவிதைகளில்: ”மனிதனுக்குத்/ தெரியும்/ சேர்ந்து போவதில் உள்ள/ சிக்கல்கள்” என்கிற ஈற்றடிகளைக் கொண்ட ‘எதார்த்தம்’ என்ற கவிதையும்; “இயல்பின்றிப் போவதில்/ சம்மதமில்லை எனக்கும்” என்கிற ஈற்றடிகளைக் கொண்ட ‘இயல்பு’ என்ற கவிதையும்; ‘பேசிப்பேசி மாய்கிற’ நண்பர்களையும் ‘ஒன்றுமற்றதெற்கெல்லாம் பேச மறுத்துச் சாய்க்கிற இவளையும்’ விவரிக்கிற கவிதையும் (‘இவள்’ யார்: மனைவியா? காதலியா? தோழியா?) நெடுநேரம் வாசகனை யோசிக்க வைக்கும்.

இவையெல்லாம் இருந்தபோதும், ‘கவிதை’ என்ற வகைமையைத் தன் எல்லாக் கவிதைகளிலும் சரியாக உள்வாங்கி ஜெகதீசன் செயலாற்றியிருப்பதாக சொல்லமுடியவில்லைதான். ‘சொல்லுதல்’, ‘அவனவன் பாடு’, ‘எதிபாரா ஒரு தருணம்’, ‘ஒன்றன்றி’ – ஆகிய “படைப்புகள்” வெறும் வார்த்தை ஜாலங்களாகத் தோற்றமளிப்பது மட்டுமின்றித் தமிழ்த்திரையில் இதுபோன்ற விஷயங்களை வைத்தே கைத்தட்டல் வாங்கிவிட்ட இயக்குனர் விசுவை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. ஜெகதீசனின் இந்தத் தேர்வற்ற மனோபாவத்துக்குக் (indiscretion) காரணம், எழுதிய எல்லாவற்றையும் அச்சில் காணும் அவசரமும்; அச்சிலேறின (அல்லது இணையத்தில் வெளியான) எல்லாவற்றையும் தொகுதியில் சேர்க்கும் ஆர்வமுமே என்று தோன்றுகிறது. இந்த தேர்வற்ற மனோபாவம் போக, சில சிந்தனைக் குழப்பங்களும் இவ்விரு தொகுதிகளிலும் வெளிப்படுகின்றன. கைப்பேசியில் தொடர்பு எண்கள் இருப்பதாலும் தீவு ஒன்றில் தனியாய் இல்லாது நகரின் நெரிசலில் அடுக்குமாடிக் குடியிருப்புகளொன்றில் வசிப்பதாலும் ஒருவன் யாருமற்றவனாய் உணரமுடியாது என்ற கவிஞரின் பார்வை பௌதிகமானதாக இருக்கிறது. ஆனால் யாருமற்றவராய் உணர்வது வெறும் பௌதிக விஷயமா என்ன?.

இன்னொரு எடுத்துக்காட்டாக, ‘இருத்தலும் சுகம்/ இயக்கமும் சுகம்’ என்கிற வரிகளை உள்ளடக்கியிருக்கிற கவிதை கூறும் நியதி, (அந்தரங்கம்:பக்.54) ஒரு கவிஞனின் மனோதர்மமாக இருக்க முடியாது என்றே சொல்லத் தோன்றுகிறது: இதில் இன்னும் மோசமான விஷயம், ‘அந்தந்த நேரங்களில் அங்கங்கே மனம் இருந்தால்’ என்று வழிவகையையும் சுட்டிக்காட்டி ‘இருத்தலும் சுகம் இயக்கமும் சுகம்’ என்று கவிதை கூறுகிறது; ஏதோ பி.சி.கணேசன் எழுதுகிற சுயமுன்னேற்றப் புத்தகம் ஒன்றைப் படிப்பது போன்ற உணர்வை எழுப்புகிற இவையெல்லாம் கவிதையாகாது என்றும் சொல்லத் தோன்றுகிறது. தனக்காகத்தான் எழுதுவதாய் ‘எழுதுதல்’ (அந்தரங்கம்:பக்.48) என்ற கவிதையில் கூறும் இவர், மற்றவர் கவனத்தை ஈர்ப்பதை முக்கியமாகக் கருதுவதால்தான் கவிதை எழுதுவதாய் ‘கவன ஈர்ப்பு’ கவிதையில் (அந்தரங்கம்:பக்.110) குறிப்பிடும்போது இவர்மீது சற்று சினம்கூட மேலிடுகிறது.

மாறாக, ‘நிரப்புதல்’ (இன்னபிறவும்:பக்.75) என்ற கவிதையில் இவர் கூறுகிறபடி மற்றவர்கள் தத்தம் விருப்பம்போல் இட்டு நிரப்புகிற ‘பெட்டி’யைச் சுமந்தபடி கவிஞனாக ஜெகதீசன் தன் பயணத்தைத் தொடர்ந்தால் கூடப் போதும்; இட்டுநிரப்ப ஏராளமான வெளி நிறைந்திருக்கிற இன்றைய தமிழ்க்கவிதை உலகில், ஜெகதீசன் தான் இன்று பிடித்து வைத்திருக்கிற இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்த நிச்சயத்தை – இவருடைய எதிர்காலக் கவிதைகளல்ல – இன்றைய இந்த இரு தொகுதிகளுமே கூட சுட்டுகின்றன.

O
(யுகமாயினி ஜூலை-2010 இதழில் வெளியானது)
நன்றி: திரு. தேவகோட்டை வா.மூர்த்தி & யுகமாயினி சித்தன்

08 ஜூலை 2010

இரண்டு கவிதைகள்

01

தொடர்பிலிருந்து நீ
விலகிச் செல்லும்
ஒவ்வொரு முறையும்
பிறிதொரு மார்க்கத்தில்
உன்னை
பின்தொடர யத்தனிக்கும்
வேளையில்
நீயாகவே அழைத்துப் பேசி
தொடரச் செய்கிறாய்
இந்த விளையாட்டை
இன்னுமோர் முறையும்.

O

02

புதிதாய் வந்து
நின்றிருந்த காரின்
முன்புறம் நெடுநேரம்
விளையாடிக்கொண்டிருந்த
இரண்டரை வயது
மகனின் கையிலிருந்த
கல்லொன்றைக் காண
நேர்ந்த பொழுதுக்குள்
வரைந்து தள்ளியிருந்தான்
நிறைய கோட்டோவியங்களை.
சுற்றியிருந்தோரிடமிருந்து
ஏதும் சுடுசொல்
வருவதற்குள் பட்டென்று
சொல்லி ஓடிப்போனான்
'பெரிய ரப்பர் கொண்டு
அழித்தால்
போய்விடும் அப்பாவென்று'

o

05 ஜூலை 2010

செல்வராஜ் ஜெகதீசனின் “இன்னபிறவும்” கவிதை நூல் மதிப்புரை - க. அம்சப்ரியா

நீள்வாசிப்பில் புரிபடும் கவிதைத்தளம் - க. அம்சப்ரியா


கவிதை தன்னை மரபுக் கவிதையிலிருந்து தோலுரித்துக்கொண்டு புதுக்கவிதையென்று உருவங்கொண்ட கால இடைவெளியில் எண்ணற்ற புதுக்கவிதைகள் தோன்றத் துவங்கின. மன எழுச்சியும் மன எழுச்சிப் போலியும் அப்படியான கவிதைகளை உருவாக்கின. கவிதை எழுதப்பட்டதா? உற்பத்தி செய்யப்பட்டதா? என்று வியக்கும்படியாக எண்ணிக்கையளவிலும் பல்கிப்பெருகின. உண்மையில் இத்தனை மக்கள் தொகையைச் செம்மைப்படுத்த இவைகள் போதாதவைகளே!

புதுக்கவிதையை புறம்தள்ளிக்கொண்டு நவீன கவிதை எழுந்திருக்கும் என்று கூறிவிட இயலாது. புதுக்கவிதைக் காலத்திலே, மரபின் மிச்சத்தை எளிய சொற்களாக்கி புதுக்கவிதையென்று கொடுத்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில், புதுக்கவிதைகளுக்குள்ளேயே மரபின் ஆழத்தையும், புதுக்கவிதையின் புதுமையையும் கலந்து நவீனத்தை உருவாக்கியவர்களும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்தார்கள். பத்திரிக்கைகளில் அவ்வப்போது ஓரிரு கவிதைகளை படைத்துவிட்டு, வாழ்வின் வேகச்சூழலில் வழமையான வேலைகளில் தொலைந்து போனவர்கள் உண்டு.

எழுதப்படுவதற்கும், வாசிக்கப்படுவதற்கும் வாழ்க்கை ஒவ்வொரு வினாடியும் புதுப்புது அனுபவங்களையும் பாதிப்புகளையும் வைத்தே இருக்கின்றது. அதனால்தான், கவிஞர்களால் புதுப்புது தொகுப்புகளை உருவாக்க முடிகிறது. நவீனக் கவிதையின் வேர்களையும் புதுக்கவிதையின் சாயலையும் கொண்டு இயங்கும் தளமாய், நான் வாசிக்க நேர்ந்த தொகுப்பு "இன்ன பிறவும்"

நவீன கவிதையின் வெளிப்படையான அடையாளமாக, நெறிபடும் வாழ்வனுபவத்தைச் சொல்லலாம். கணநேர ரசிப்புப் பார்வைகள் கூட ஆழ்ந்த மொழி அனுபவத்தால், ஒரு நவீன கவிதையாகிவிடலாம் என்பதற்கு செல்வராஜ் ஜெகதீசன் எழுதியுள்ள "கொஞ்சமும்" கவிதையைச் சொல்லலாம்.

புனைவுகளின் எளிய வாழ்வு, நவீன கவிதையின் நல்ல வடிவமைப்பு, புதிய பார்வையும், சொல்ல வந்ததை வார்த்தைகளை செலவழிக்காமல் சொல்லியிருப்பதும் சிறப்பானது.

காதலைச் சொல்லியிருக்கிறார், நாற்காலிகளைச் சொல்லியிருக்கிறார், தானாய் விழும் அருவியைச் சொல்லியிருக்கிறார்... இப்படி நிறைய சொல்லியிருக்கிறார் என்று சொல்லக் காரணமிருக்கிறது. முதல் வாசிப்பில் எதுவும் ஈர்ப்பில்லாதது போலிருந்தாலும், சற்றே வாசிப்பை நிறுத்திவிட்டு யோசிக்கையில், கவிதையின் சூட்சுமம் புரிபடுகிறது.

இரண்டாவது தொகுப்பில் சில சோடைகள் நேர்ந்துவிட, இரண்டு காரணங்கள் வெளிப்படையானது. முதல் கவிதைத் தொகுப்பை சராசரியான பார்வையில், எல்லோராலும் பாராட்டும்படியாய் நாம் பார்த்துக் கொள்வது. அதிலும் குறிப்பாக வாசிப்பு அனுபவமற்ற தளத்திலிருக்கிறவர்களின் கைகளில் தொகுப்புகள் வசப்பட்டு, மொண்ணையான விமர்சனங்கள் எழுவது. இதையே பிடித்துக்கொண்டு, அடுத்த தொகுப்பிற்கும் கவிஞன் துணிந்து விடுவது.

பல சிறந்த கவிதைகளைப் படைத்திருக்கும் ஜெகதீசனின் தொகுப்பினுள்ளும், சில சாதாரன கவிதைகள் இருப்பதற்கான காரணம், இரண்டாவது தொகுப்பிற்கான அவசரமே. அந்த அவசரத்தில் எழுதப்பட்ட கவிதைகளில், பல நல்ல வார்த்தை தெளிப்புகளும் அடங்கியுள்ளன. இது இன்னும் அவர் தவக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கைதான்.

எழுதுவதும், வாசிப்பதும், இயல்பான போக்கில் வாய்க்கிற படைப்பாளிக்கு, நல்ல கவிதையைக் கொடுப்பது சிரமமானது அல்ல.

வாசிக்கவும்...விமர்சிக்கவும் பொருத்தமான தொகுப்பு "இன்ன பிறவும்"

O

படித்ததில் பிடித்தது-2 : தேவதச்சன் கவிதை

இந்த நீலநிற பலூன் மலரினும்
மெலிதாக இருக்கிறது. எனினும்
யாராவது பூமியை விட கனமானது
எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.

நீங்களாவது கூறுங்களேன், இந்த
நாற்பது வயதில் ஒரு பலூனை
எப்படி கையில் வைத்திருப்பது என்று...
பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது
காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது
பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.
எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்
பார்த்து விடுகிறார்கள்.

அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று
என்னை உரசியபடி வருகிறது. நான்
கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.

o

04 ஜூலை 2010

படித்ததில் பிடித்தது-2 : கல்யாண்ஜி கவிதை

ஒரு ராகத்தின் மேல்...
கல்யாண்ஜி

எனக்கு சங்கீதம் தெரியாது.
பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம்
நிரம்பிய அந்த வீட்டின்
மேஜையில் வயலின் இருந்தது
படுக்கை வசத்தில்.
எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்
தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது.
வயலினின் நிறமோ அற்புதம்.
இசை புழங்கிய வழவழப்பு
எல்லா இடத்திலும்.
தப்பித்தவறி வந்து
ஊர்ந்து கொண்டிருக்கிறது
வயலின் நரம்புகளில்
மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு.
வாய் குவித்து ஊதத் தயக்கம்.
விரலால் அப்புறப்படுத்தவும்.
என் செயல்கள் உண்டாக்கக்கூடிய
இசைக் கேடுகளை விட
எறும்பு ஊர்வது ஒரு ராகத்தின்
மேல் தானே.

o