19 செப்டம்பர் 2011

ஒரு கவிதை என்ன செய்யும்? - (படித்ததில் பிடித்தது)



கவிதை இங்கே:

ஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்
அ.வெண்ணிலா

பதினோரு மணிக்கு மட்டுமே
வெளியே வர வேண்டும்
காலையில் ஒரு முறை
மத்தியானம் ஒருமுறை
குழாயில் தண்ணீர் வரும்
வேளை தப்பி
வெளியே வருபவர்கள்
மைதானம் பெருக்க வேண்டும்
கடும் விதிகளை அறியாமல்
வயிறு பிசையும்
உள்ளாடை நனைந்து
ஈரம் பரவும்
உள்ள யாரு, வெளிய வா
உரத்து ஒலிக்கும்
அதிகாரக் குரலுக்குப் பயந்து
பல்லியாய் சுவரொட்டும் பிம்பம்
தண்ணீர் போகாமல்
வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன
நாப்கின்களால் நிறையும்
கழிப்பறை பீங்கான்கள்.

o

தினம் பத்து பேர்
அந்த நேரத்துக்குப்
போக மாட்டேன்றீங்க
என்ன சொன்னாலும்
உங்க இஷ்டத்துக்குத்தான்
போவீங்க
பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது
அதிகாரத்தின் குரல்
கூச்சம் தொலைக்கலாம்
நின்று மாற்றவாவது
இடம் வேண்டுமல்லவா
கழிப்பறையில்.

o

மாசத்துக்கு
மூணு, நாலு நாள்
லீவு எடுத்தா என்ன பண்றது?
பதில் எதிர்பார்க்காமல்
ஒலிக்கும் கேள்வி
அறை முழுதும் பரவும்
வெட்கம் பூசிய சிரிப்புகளும்
நமுட்டுப் புன்னகைகளும்
வலி தோய்ந்த மௌனங்களும்
ஆங்காங்கு எழும்
கொடுக்குள்ள விலங்கொன்று
விஷம் இறக்கிய மகிழ்வில்
இடம் நகரும்.

o

அங்க நின்னு பேசின
இங்க நின்னு பேசினன்னு
பேச்சு வந்தது
படிச்சது போதும்னு
சோறாக்க வேண்டியதுதான்
அங்க பார்த்தேன்
இங்க பார்த்தேன்
இப்படித் தொட்டேன்
அப்படித் தொட்டேன்னு
யார்கிட்டயாவது சொன்ன
பள்ளிக்கூடம் வர முடியாது
காலையில சீக்கிரம் வரணும்
சாயந்திரம் என் சைக்கிள்ல வரணும்
படிக்கிறேன்னு திமிரா
உங்கம்மாகிட்ட சொன்னா
வீட்டவிட்டு வெளிய வர முடியாது
சொல்றபடி நடந்துக்க
இதெல்லாம் படிக்க வரலன்னு
யார் அழுதா
ஏறிக்கிட்டு நின்ன இடத்துல
நிக்குது பாரு
எல்லாம் ஜோடி ஜோடியா
இந்த வயசுல
தவறாமல் படித்துத்
தொலைக்க வேண்டியிருக்கிறது
மாதராய்ப் பிறந்திடவே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா.

o

எங்க காலத்துல எல்லாம்
கட்டுன ஆளத் தவிர
ஏறெடுத்துப் பார்க்க முடியுமா
அப்ப ஏது இந்த கசமுசால்லாம்
எங்க காலத்துல எல்லாம்
காலேஜ் படிக்கும்போதுதான்
கண்ணயே நிமிரவிடுவோம்
எங்க காலத்துல எல்லாம்
2 படிக்கும்போதுதான்
அதுகூட ஒண்ணு ரெண்டுதான்

இப்ப காலம் கெட்டுப்போச்சு
எட்டாவது பத்தாவது படிக்கிறதெல்லாம்
ஆளுக்கொரு ஜோடி வெச்சிருக்கு
எல்லாக் காலத்திலும்
கைதாகிக்கொண்டிருக்கிறார்கள்
ஆறு வயதுக் குழந்தை
பலாத்கார வழக்கில்.

o

முதல் ரத்தம் பார்த்துக்
கலங்கி
பாதி வகுப்பில் வெளியேறும்
பெண்
ஒரு செவிலித் தாய்க்கான
பிரியத்தை விட்டுச் செல்கிறாள்
தன் வகுப்பறையிடம்!

o

2 கருத்துகள்: