30 ஏப்ரல் 2009

பிரியமான என் வேட்டைக்காரன்...!

இடதுபக்கம் மூக்குத்தி அணிந்திருப்பாள் அமுதா.
எதற்கும் வாதிடுவாள் ராதா.
சிரிப்போடுதான் பேசத் தொடங்குவாள் சுசீலா.
சிறிது கூன்போட்டு நடப்பாள் கீதா.
கண்கள் பேசும் பானுமதிக்கு.
கடைசிவரை பேசாமல்
புன்சிரிப்போடு போனவள் மோகனா.
மையிட்ட கண்கள் மாலதிக்கு.
மல்லிகைச் சரமின்றி காண்பது கடினம் நிர்மலாவை.
அபூர்வமாய் சுடிதாரில் வருவாள் ஜெயந்தி.
அடிப்பதுபோல் பேசுவாள் வசந்தி.
கேள்விகளோடே வருவாள் புவனேஸ்வரி.
துருதுருவென்றிருப்பாள் சந்திரா.

தோழியர் எல்லோர்க்கும்
வாய்த்திருக்கும்
ஒன்றிரண்டு பிள்ளைகளுடன்
ஒளிமயமாய் ஒரு குடும்பம்.

எப்படியும் வரக்கூடும்...

நாளை வரும் நாயகனுக்காய் - இந்த
நாற்பதிலும் காத்திருக்கும்
பெண்மான் எனைக் கொண்டு செல்லும்
பிரியமான என் வேட்டைக்காரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக